வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 12



பாகம் : 22
ஸடீவன்சன் என்பவர், ஸலாவுத்தீன் பெரும்பாலானவர்களை ஈட்டுத்தொகை இல்லாமல் விடுதலை செய்தார் என சொல்கிறார். அர்னால்ட் என்பவர், ‘சுல்தான் குறிப்பிட்ட ஒரு நாளில் ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும் தொகை பெறாமல் விடுதலை செய்தார். புத்திசாலிகளையும், வசதிபடைத்தவர்களையும் அவர்களின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள கூறினார். அவர்களால் கொண்டு செல்ல முடியாத பொருட்களை முஸ்லீம்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அனுமதித்தார். ஸலாவுத்தீனின் சகோதரர் அல் மாலிக் அல் அதில் ஏழாயிரம் ஊனமுற்றவர்களை ஈட்டுத் தொகை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டுகோள் வைத்தார். ஸலாவுத்தீன் பத்தாயிரம் பேருக்கு அனுமதியளித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஸலாவுத் தீனின் இரக்க குணத்தால், இரண்டாம் சிலுவைப்போரில் ஹத்தீன் வெற்றிக்குப் பிறகு ஃப்ராங்க்ஸின் குரோதமும், பழி வாங்கும் குணத்தின் போக்கும் முதல் போரை விட சற்றுக் குறைந்திருந்தது.
பிரிட்டிஷ் சரித்திர ஆய்வாளர் மில், “ஜெருசலத்தை விட்டு வெளி யேறிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ ஆண்டியாக் நகரை  அடைந்தனர். அவர்களின் பரிதாபம் அதன் இளவரசர் போர் பாதிப்பிலிருந்து வந்த அவர்களுக்கு எந்த உதவியும், ஈடும் தராமல், ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டினார். அவர்கள் அருகே உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு செல்ல முஸ்லீம்கள் அவர்களை வரவேற்றனர்”. என்று கூறுகிறார். மேலும் இளவரசர் அலி கூறுவதாவது: ஜெருசலத்தை விட்டு வெளியேறிய கிறிஸ்தவர்களை, அவர்களின் கிறிஸ்தவ சகோதரர்களாலேயே அவர்கள் நடத்தப்பட்ட அவலத்தைப் பற்றியும் மிஷுத் என்பவர் விவரிப்பதாவது, ‘அவர்கள் பசியினாலும், வறுமையாலும் வாடினர். சிரியா மனிதாபமற்று நடந்து கொண்டது. இவர்கள் வரும் முன் திரிபோலி தனது எல்லைகளை மூடிக்கொண்டது. ஒரு பெண்மனி கிறிஸ்தவ மக்களை சபித்த வண்ணம் வலுக்கட்டாயமாக தன் குழந்தையை கடலில் தூக்கி வீசினார்’ எனக் கூறுகிறார்.
ஒரு பரம்பரை பணக்காரன்  பெரும் பொருட்களுடன், தன் இன ஏழை கைதி ஒருவனைக் கூட கருணை அடிப்படையில் தொகை செலுத்தி விடுதலை செய்யாமல் சென்றான். ஸலாவுத்தீனிடம், “தாங்கள் ஏன் அவன் பொருட்களை பறிமுதல் செய்து அதை முஸ்லீம்களின் நன்மைக்காக செலவிடக் கூடாது?” எனக் கேட்க, அவர்,” நான் எப்போது 10 தினார் வசூலிக்க முடிவெடுத்து விட்டோனோ ஏன் அவனை மற்றவர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும்?” எனக் கூறினார். சுல்தான் கிறிஸ்தவ மதகுருக்கள் என்றால் பொதுநலமும், தூய்மையும் கொண்டவர்கள் என்று நினைத்திருந்தார்.
இதே சிலுவைப் போராளிகள் முஸ்லீம்கள் மீது நடத்திய கொடுமைகளுக்கு பிறகு, அவர்கள் மீது ஸலாவுத்தீன் காட்டிய  மன்னிப்பைப் பாருங்கள். ஒரு கவிஞரின் வரிகளாவது :
எப்போது நாங்கள் ஜெருசலத்தை ஆண்டோமோ நீதியை பரவச் செய்தோம்.                                                        எப்போது நீங்கள் (எதிரிகள்) ஆண்டீர்களோ இரத்தத்தை பரவச் செய்தீர்கள்.                                              பிடிபட்டவர்களை கொல்வதை அனுமதி அளிக்கப் பட்டதாக ஆக்கிக் கொண்டீர்கள்.                                         நாங்கள் மன்னிப்பையும், கருணையையும் கடமையாக்கிக் கொண்டோம்.                                                       ஆம், நம்மிடையே ஆன வேற்றுமைகளில் நாம் திருப்தி கொண்டோம்.
ஹத்தீன் போர் முஸ்லீம்கள், எதிரிகளின் பொதுமக்களை நடத்திய விதமும், முன்னர் சிலுவைப் போராளிகள், முஸ்லீம் பொதுமக்களை நடத்திய விதத்திலும் உள்ள வித்தியாசத்தைக் காட்டியது.
சிலுவைப் போரை வெல்வதற்கான காரணம்
நூற்றாண்டுகளுக்கும் மேலாக வெறுப்பாக எதிரிகளால் சூறையாடப்பட்டும், ஊழல் செய்யப்பட்டும், சின்னா பின்னப்பட்ட ஜெருசலத்தை மீட்டு மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்பதே ஸலாவுத்தீனின் முக்கிய காரணமாக இருந்தது. போரின் வெற்றி வெறும் வீரர்களாலும், திட்டமிடுதலாலும் மட்டுமே வந்ததல்ல. உண்மையான காரணம் நபிகளார் பத்ர், அஹ்ஸாப் போர்களில் வகுத்த திட்டத்தை அப்படியே நடை முறைப்படித்தியதே. கதிஸியாஹ், யர்முக் போர்களில் அமைந்தது போல் நல்ல படைத்தோழர்கள் அமைந்ததும் ஒரு காரணம். அல்லாஹ் திருக்குர் ஆனில் தான் அதிகாரம் அளிக்கும் ஆட்சியாளர்கள் பற்றியும், ஜிஹாத் பற்றியும் ( அல் ஹஜ் 22:40-41/அந் நூர் 24:55/அல் அன்ஃபால் 8:10-12-13) என்று பல இடங்களில் கூறுகிறான்.
அக்ராவில் மூன்றாம் சிலுவைப் போர்              
ஹத்தீன் போருக்கு பிறகு, அமைதியும், சமாதான அடிப்படைக்குப் பிறகு, முஸ்லீம் படைகள் எதிரிகளை லெபனானிலுள்ள டயர் நகரத்திற்கு பாதுகாப்பாக சென்று விட்டு விட்டு வந்தது. ஆனால், நன்றி கெட்டத்தனமாக சமாதான உடன்படிக்கையை முறிக்கும் செயலாக அவர்கள் மீண்டும் அக்ராவின் மீது படை எடுத்து வந்தார்கள். அந்த செயல் சரித்திரத்தில் பலமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகள் போர் நீடித்தது. அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்த உணவு, புதிய படையுடன் இணைந்து மீண்டும் வந்தார்கள். இரு படைகளும் இணையில்லாத வீரத்தையும், பலத்தையும் காட்டின.                                                    எதிரிகள் 582 A.H. ல் (1189 C.E.) ரஜப் மாதம் 7 ந் தேதி அக்ராவை தரை மற்றும் கடல் மார்க்கமாக வந்து தாக்கினர். இது முஸ்லீம் களுக்கு பின்னரே தெரிய வந்து தரை மார்க்கத்தில் சென்று எதிர்த்துத்தாக்கினர். ஸலாவுத்தீன் டல் கிஸான் என்னும் மலைப் பகுதியில் கூடாரம் அமைத்திருந்தார். எதிர்ப்பும், சிறு சிறு தாக்கு தல்களும் இரு படைகளுக்கிடையே நடந்து கொண்டிருந்தன. ஸலாவுத்தீன் தலைநகருக்கு சில படைவீரர்களை அனுப்பி மக்களை ஜிஹாத் வழியில் போரிட அழைத்தார். இரண்டாண்டாக ஐரோப்பா உணவையும், வீரர்களையும் தொடர்ந்து அனுப்பி சலிப்படைந்தது.
பலமுறை தோல்வியுற்றும் தொடர்ந்து அக்ராவில் எதிரிகள் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே ஐரோப்பிய மாமன்னர்களால் மூன்றாவது சிலுவைப் போர் தொடங்கப்பட்டது. ஜெர்மன் சக்கரவர்த்தி ஃபிரடரிக் பார்பரொஸ்ஸா, பிரான்ஸ் மன்னன் பிலிப் அகஸ்டஸ், சிங்க இருதயம் (LION HEART) படைத்த ஆங்கில மன்னன் ரிச்சர்ட் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜெர்மனி சக்கரவர்த்தியின் ஒரு லட்சம் படைவீரர்கள் ஹங்கேரியில் இருந்து கான்ஸ்டாண்டி நோபிள் சென்றனர். இடையில் தங்களுக்கு உதவவும், வழி நடத்தவும் மறுத்த பைஸாந்திய சக்கரவர்த்தி இரண்டாம் இஸாக்கை இந்த படை பயமுறுத்தியது. இஸாக் பிரம்மாண்ட ஜெர்மன் படை வருவதையும், தான் அவர்களுக்கு உதவ மறுத்ததையும் ஸலாவுத்தீனுக்கு தெரியப்படுத்தினார். ஜெர்மன் படைகள் மைனர் ஆசியாவைக் கடந்தன. வழியில் அர்மேனிய மலையில் சலீஃப் ஆற்றைக் கடக்கும் போது ஜெர்மன் சக்கரவர்த்தி தவறி விழுந்து மூழ்கினார். அதனால், படை நடத்த தலைமை இல்லாததால் படைக்குள் பிளவு ஏற்பட்டது. சிலர் ஜெர்மன் திரும்பி சென்றனர். சிலர் கப்பல் ஏறி அக்ரா சென்றனர். சிலர் இறந்து போன சக்கரவர்த்தியின் மகன் தலைமையில் லெபனானின் டயர் நகரம் அடைந்தனர். எதிர்பாராத விதமாக மன்னனின் மகனும் இறந்துவிட எஞ்சிய சிறுபடை மட்டும் அக்ரா வந்தடைந்தது. ஒரு வேளை திட்டமிட்ட படி முழு படையும் வந்திருந்தால் இருபுறமும் தாக்குதல் பலமாக இருந்திருக்கும்.
பாகம் : 23
பிரான்ஸ் மற்றும் ஆங்கில படைகள்
பிரான்ஸ் மற்றும் ஆங்கில படைகள் சிஸிலியில் சந்தித்துக் கொண்டன. இரு படைகளுக்கும் நடுவே சரியான நடைமுறை யும், நட்புறவும் ஏற்படாததால் நெடுநாட்கள் சிஸிலியில் தங்கியிருந்தன. அதுவரை அக்ரா நகர் அடைந்த சொற்பமான ஜெர்மனி படைகள் அங்கு காத்திருந்தன. இறுதியில் ஒரு வழியாக பிரான்ஸ் படைகள் சிஸிலியை விட்டு கிளம்பின. அதற்கு பத்து நாட்கள் கழித்து ஆங்கில படைகளும் பின் தொடர்ந்தன. எல்லாப் படைகளும் அக்ராவில் ஒன்று சேர்ந்தன.
சைப்ரஸில் ஆங்கில மன்னன் ரிச்சர்டு மணற்புயலால் தாக்கப்பட்டான். சைப்ரஸ் தீவு பைசாந்திய சக்கரவர்த்தியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரிச்சர்டு பைசாந்தியருடன் சண்டையிட்டு சைப்ரஸை வென்று அங்கு சிறிது நாள் ஓய்வு பெற்றான். பின்னர் ஸலாவுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட ஜெருசலத் தின் மன்னன் உதவி கேட்டதன் பேரில் அக்ரா சென்றான்.
முஸ்லீம்களின் எதிர்ப்பு
முன் சொன்னது போல் மூன்று படைகளும் சேர்ந்ததால் சந்தேக மில்லாமல் சிலுவைப் படை மிகவும் பலம் வாய்ந்ததாகியது. ஸலாவுத்தீன் எண்ணற்ற முறை முயற்சித்து தாக்கியும் அக்ராவின் முஸ்லீம்களை காக்க முடியவில்லை. போரிட்ட முஸ்லீம் படைகளுக்கு சூழ்நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
587 A.H.(1191 C.E.) ஜுமதா அத் தானியாஹ் 17 ல் எதிரிகள் அக்ராவை வெற்றி கொண்டு மதில்சுவருக்கு மேலே அவர்களின் கொடிகளை உயர்த்திக் காட்டினர். ஸலாவுத்தீன் அக்ராவில் தாக்கப்படும் முஸ்லீம் மக்களுக்காக தன் தலைவர்களுடன் கூடி பேசினார். எதிரிகளின் பயமுறுத்தும் மகிழ்ச்சியினால் அக்ரா முஸ்லீம்கள் நடுங்கினர். ஆமாம், எதிர்பார்த்த அதுதான் நடந்தது. முன்னர் நடந்த கொடுமைகள் மீண்டும் நடந்தது. முஸ்லீம்களை சித்திரவதை செய்தும், வெட்டியும் கொன்றனர். ஸலாவுத்தீன் அவர்கள் மீது காட்டிய இரக்கத்தையும், கருணையையும் சிறிதளவு கூட சுத்தமாக காட்ட மறுத்தனர். பூல் என்பவரின் அறிக்கைப் படி, 587 A.H.(16 AUGUST 1191) 23 ரஜப் மாதத்தில் ரிச்சர்டு 2,700 முஸ்லீம்களை சிலுவைப் போராளிகளின் முகாமில் வைத்துக் கொன்றான். வாசகர்களே அக்ராவில் முஸ்லீம்களுக்கு உண்மையாக நடந்த கொடுமைகளை கணினியில் கிடைக்கும் பூலின் அறிக்கையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவரின் அறிக்கையின் படி எதிரிகள் 60,000 முஸ்லீம்களைப் படுகொலை செய்தனர். ஒரு சில வசதிபடைத்த முஸ்லீம்களைத் தவிர, அது கூட அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ததற்காக விட்டு வைத்தனர். மிஷுத்தின் அறிக்கைப் படி, அக்ராவின் வெற்றியை படைவீரர்கள் பெரிய விருந்து வைத்து, பக்கத்து தீவுகளிலிருந்து விலை மாதர்களை வரவழைத்து அருவருக்கத்தக்க வகையில் வந்த குறிக்கோளையும் மறந்த வண்ணம் கேளிக்கையுடன் கொண்டாடினர்.
எதிரிகளின் அக்ரா வெற்றிக்குப் பின் அவர்களின் பிரம்மாண்ட படையுடனும், பலத்துடனும், ஐரோப்பா, ஆசியாவிலுள்ள லத்தீன் நாடுகளின் நேசநாடுகள் ஒத்துழைப்புடனும், இன்னும் பிற நாடுகளின் ஆதரவுடனும் ஸலாவுத்தீனை எதிர்த்தனர். அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக போரிட்டு முன்னர் இழந்த பகுதிகளை மீட்க ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்தது. இருந்தாலும் இரண்டாண்டாக போரிட்டு அவர்களால் அக்ராவை தவிர வேறு எந்த நகரத்தையும் பிடிக்க முடியவில்லை. சில படை வீரர்களை இழந்திருந்தாலும் ஸலாவுத்தீனின் இராணுவம் எதிர்த்தவாறு இருந்தது. எதிரிகள் மேலும் எந்த வெற்றியும் பெறாததற்கு சிஸிலியில் பிரான்ஸ், ஆங்கில மன்னர்களுக்கு இடையே இருந்த ஒத்துழையாமை, பிணக்குமே காரணம். இன்னொன்று, ஓடிக்கொண்டிருக்கும் ஜெருசல மன்னனுக்கும், டயர் ஆட்சியாளர் மர்க்விஸ் கன்ராட் மோண்டிக்கும் இடையில் இருந்த சுமூகமில்லாத நட்பும்  ஆகும். ஆங்கில மன்னன் ஜெருசல மன்னனைச் சார்ந்தும், பிரான்ஸ் மன்னன் ஜெருசலத்தை ஆள ஆசைப்படும் டயர் ஆட்சியாளரை சார்ந்தும் இருந்தனர். அக்ராவின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒற்றுமை இல்லாமல் போனது. முடிவில், இறக்கும் வரை ஜெருசலத்தின் மன்னனே தொடர்ந்து ஆளட்டும் என்றும், அதன் பிறகு கன்ராட் மோண்டி ஜெருசலத்தை ஆளட்டும் என்று முடிவாகியது. பிரான்சின் மன்னன் ஏதோ காரணகாரியமாக பிரான்ஸ் சென்றுவிட ஆங்கில மன்னன் ரிச்சர்ட் தலைமையில் முஸ்லீம்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. அவர் இழந்த பகுதிகளை ஸலாவுத்தீனிடமிருந்து மீட்க விரும்பினார். இரு படைகளுக்குமிடையே பல தாக்குதல்கள் தொடர்ந்தன. அதில் பிரபலமானது அர்ஸுஃப். அதில் எதிரிகள் முஸ்லீம்களை தோற்கடித்தனர். இதனால் ஹத்தீனில் முஸ்லீம்களை சுலபமாக பழி தீர்த்துவிடலாம் என்று நினைத்தனர்.
போர் நிறுத்தம்
இருதரப்புக்கும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பலமுறை ( இரு சந்தர்ப்பங்களுக்கு ஒரு முறை )சிலுவைப் போராளிகள் ஜெருசலத்தை நெருங்கினார்கள். ஆனால் கைப்பற்ற முடியவில்லை. தனக்கெதிராக எதேனும் சதி இருக்குமோ என்று ஆங்கில மன்னன் நினைத்தான். அவர்களால் மேற்படி எந்த நகரங்களையும் வெற்றி கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு மற்ற போரைவிட இந்த போர் வித்தியாசமாக இருந்தது. ஸலாவுத்தீனாலும் அவர்களை கடற்கரை வழியாகவோ, தோற்கடித்து கடல் வழியாகவோ விரட்ட முடியவில்லை. மிகுந்த சோர்வுக்கு பிறகு, இருபடைகளும் சமாதானத்திற்கு வந்தனர். முடிவு எவ்வளவு முயன்றும் எதிரிகளால் ஜெருசலத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. சமாதான உடன்படிக்கையின் சில ஒப்பந்தங்களுக்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். இறுதியில் 588 A.H.(1192 C.E.)ல் இருவரும் ஒத்துக் கொண்டு சமாதானமாயினர். அதன் விவரமாவது :
·       சிலுவைப் போராளிகள் டயர் நகரத்திலிருந்து ஹைஃபா வரை கடற்கரை பகுதியில் தங்கி இருப்பார்கள்.
·       கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்கு வரி ஏதும் செலுத்தாமல் சென்று வருவார்கள்.
·       இந்த போர் நிறுத்தம் மூன்று ஆண்டுகளும், எட்டு மாதங்களுக்கு மட்டுமே.
ஃப்ராங்க்ஸ் ஏற்கனவே வென்ற கடற்கரை நகரங்களை இணைத்து புதிய ஜெருசலம் உண்டாக்கியது. அக்ரா அதன் தலைநகரமாக ஆகியது. மூன்றாம் சிலுவைப் போருக்கு பிறகு, சிங்க இருதயம் படைத்த ஆங்கில மன்னன் ரிச்சர்டு மிகவும் பிரபல்யமானான். போர் நிறுத்தத்துக்கு பின் இங்கிலாந்து திரும்பி சென்றான். மூன்றாம் சிலுவைப் போர் பலவீரர்கள் இறப்பிற்கும், பல ஊர்கள் எறிக்கப்பட்டும், ஜெர்மனிய சக்கரவர்த்தி ஆற்றில் விழுந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்தது. அக்ரா நகரம் வென்றதை தவிர ஃப்ராங்க்ஸ் எதுவும் சாதிக்கவில்லை. ஐரோப்பா லாபத்தை விட, நிறைய இழந்திருந்தது. ஸலாவுத்தீன் வருகைக்கு முன் முஸ்லீம்கள் பாலஸ்தீனின் மீது கருத்தை செலுத்தவில்லை. இப்போது ஹத்தீன் போருக்கு பிறகும், ரம்லாஹ் ஒப்பந்தத்திற்கு பிறகும் பாலஸ்தீனம் முஸ்லீம்கள் பொறுப்பில் வந்தது. மேலும், பாலஸ்தீன் சரியாக லெபனானின் டயர் நகருக்கும், அக்ரா நகரத்திற்கும் குறுக்கே அமைந்திருந்தது. ஸலாவுத்தீன் எதிர்களை ஐந்தாண்டாக பலம் கொண்ட மட்டும் தடுத்தும் மிகவும் குறிகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். இளவரசர்களை ஒருங்கிணைத்தார், எதிரிகளை விரட்டி மீண்டும் ஜெருசலத்தை பெற்றார், முஸ்லீம்களின் பலத்தையும், வெற்றியையும் சரியான முறையில் பயன்படுத்தி வட இராக் (குர்திஸ்தான்), அகன்ற சிரியா, எகிப்து, பாலஸ்தீன், ஏமன், பர்காஹ் உள்ளடக்கிய மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக