வியாழன், 7 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 2



பாகம் : 3
வம்ச வழி
சுல்தான் ஸலாவுத்தீன் எகிப்து, அகன்ற சிரியா (தற்போதைய சிரியா, லெபனான்,பாலஸ்தீன் அடங்கியது). உள்ளடக்கிய  அய்யூபிட் மாநிலம் என்று அழைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர். இவரின் குடும்ப வம்சாவழி ஹஸியான் என்ற பகுதியை சேர்ந்த (அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த தெவின் என்ற கிராமத்தில் தான் ஸலாவுதீனின் தந்தை அய்யூப் இப்னு ஷாதி பிறந்தார்) பிரபலமான அர் ரவாதியா என்ற குர்திஷ் மலைவாழ் இனத்தை சேர்ந்தது. இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள்தான் மிகப்பெரிய அதிக அளவில் குர்திஷ்கள் நிறைந்த கூட்டம். சில சரித்திர ஆய்வாளர்கள் இவர் வம்ச தொடர் அத்னான் கூட்டத்தின் முதார் வரிசையை சேர்ந்தது என உறுதியாக கூறுகிறார்கள்.
சுல்தான் ஸலாவுத்தீன், குர்த் நஜ்முத்தீன் அய்யூப் இப்ன் ஷாதி இப்ன் மர்வான் என்பவரின் மகன் ஆவார்.
பிறப்பு
532 A.H. (1132 C.H.) ம் ஆண்டு பாக்தாதின் கோட்டை நகரமான திக்ரிதில் சுல்தான் யூஸூப் ஸலாவுத்தீன் பிறந்தார். திக்ரித் நதியின் கரையில் பாரசீக மன்னர்கள் போர்தளவாடங்கள் சேமித்து வைக்கவும், எதிரிகளை கண்காணிக்கவும் பெரிய கோட்டையை கட்டி இருந்தனர். முஸ்லீம்கள் 16 A.H. ல் கலீஃபா உமர் இப்ன் கத்தாப் காலத்தில் திக்ரித்தை வென்றனர். இதன் பின் திக்ரித்தை பல முஸ்லிம் மன்னர்கள் ஆண்டனர்.
செல்ஜுக் துர்க் ஆட்சியின் போது தந்தையார் நஜ்முத்தீன் அய்யூபுக்கு செல்ஜுக் காவல்துறையின் பெரும்புள்ளியான முஜாஹித்தீன் பஹ்ரூஸ் என்பவரின் தொடர்பு ஏற்பட்டது. அவர் நஜ்முத்தீன் அய்யூபை திக்ரித் கோட்டையின் கமாண்டராக நியமித்தார். நஜ்முத்தீன் தனது சகோதரர் ஷிர்குஹ் அஸாத்தீனை தனக்கு உதவியாக அழைத்துக் கொண்டு அஜர்பைஜானை விட்டு இராக்குக்கு குடி பெயர்ந்தார்.
ஒரு நாள் முஜாஹித்தீன் பஹ்ருஸ் அவர்களுக்கு, சகோதரர்கள் நஜ்முத்தீன்,ஷிர்குஹ் இருவரையும் நாடு கடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் என்னவென்றால், ஒரு கிராமத்து பெண்ணுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு வருகிறது. அது சம்பந்தமாக பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்த பெண் உதவி கோரியதன் பேரில் ஒரு கோட்டைக் காவலாளியை சித்தப்பா ஷிர்குஹ் கொன்று விடுகின்றார். அந்த வழக்கில் முதலில் இரு சகோதரர்களையும் ஒன்றும் செய்யாமல் விட்டு விடத்தான் பஹ்ருஸ் இருந்தார். ஆனால் இறந்துபோன காவலாளியின் பலம் வாய்ந்த குடும்ப பிண்ணனியினால் சகோதரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இருவரையும் இரவோடிரவாக நாடு கடந்து தப்பிச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். மிகச் சரியாக அன்றிரவுதான் சரித்திர நாயகன் உலகம்  வியக்கும் மாவீரர் யூஸுஃப் ஸலாவுத்தீன் அல் அய்யூப் பிறந்தார். குடும்பம் இராக்கின் மோஸுல் நகரை நோக்கி இரவோடிரவாக இடம் பெயர்ந்தது.
தப்பிச் செல்லும் போது குழந்தை யூஸுஃப் ஸலாவுத் தீனின் அழுகுரல் தொடர்ச்சியாக மிக சத்தமாக இருந்தது. எவ்வளவோ தாயும், தந்தையும் மற்றவர்களும் போராடி யும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஒரு குழந்தைக்காக அனைத்து குடும்பமும் மாட்டி அழிந்து விடக் கூடாது என்பதற்காக தந்தையார் நஜ்முத்தீன் அய்யூப் அவர்கள் குழந்தையை கொன்று விடக்கூட நினைத்தார். உடன் இருந்தவர்கள்,ஒன்றும் அறியாத இந்த பச்சை குழந்தை எப்படி இந்த சூழ்நிலையை அறியும், நாளை இது எப்படியாக இருக்கும் என்று யார் அறிவார் ஆகவே ஒன்றும் செய்யாமல் விட்டு விடுமாறு தடுத்து விட்டனர். அதற்கு பதில் அழுகுரல் எதிரிகளை எட்டாத வண்ணம் தப்பிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினர்.
பாகம் : 4
வளர்ப்பு முறை
சகோதரர்கள் நஜ்முத்தீன் அய்யூபும், ஷிர்குஹும் பாக்தாதை விட்டு மோஸுல் நகரின் ஆட்சியாளர் இமாத்ததீன் ஸங்கி என்பவரிடம் அடைக்கலம் அடைந்தனர். இமாத்ததீன் சங்கி அவர்கள் சகோதரர்களை வரவேற்று பரிசுகளை வழங்கி அரவணைத்துக் கொண் டார். இதே இமாத்ததீன் சங்கி ஒரு முறை செல்ஜுக்கின் மீது படையெடுத்து தோல்வியடைந்து போர் கைதியாக இந்த சகோதரர்களிடம் பிடிபட்ட போது இமாத்ததீன் சங்கி மீது கருணை கொண்டு அவரை மோஸூலுக்கு திரும்பி தப்பிச்செல்ல உதவினர். அந்த உதவிக்கு இன்று இமாத்த தீன் சங்கி பரிகாரம் தேடிக் கொண்டார். சகோதரர்களுக்கு நிலம், வீடு வழங்கி வாழ்க்கை வசதி செய்து கௌரவித் தார். மேலும் இரு சகோதரர்களையும் இராணுவத்தில் கமாண்டர்களாக நியமித்தார்.
534 A.H. 3 இமாத்ததீன் சங்கி ‘பா அல்பக்’ என்ற பகுதியை கைப்பற்றினார். அதற்கு நஜ்முத்தீன் அய்யூபை கவர்னராக நியமித்தார். இது இமாத்ததீன் சங்கி நஜ்முத்தீன் அய்யூப் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தியது, ஸலாவுத் தீனின் இளமைப் பருவத்தின் மிகச் சிறந்த நாட்கள் ‘பா அல்பக்’ ல் கழிந்தது. தந்தையாரின் பணி காரணமாக தனித்து விடப்பட்ட ஸலாவுத்தீன் அங்கு குதிரையேற்றம், ஜிஹாத், போர்திறமை, அரசியல், நிர்வாகம் போன்ற வற்றை திறமையாக கற்றுக் கொண்டார்.
1154 C.E. இமாத்ததீன் சங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ் கசை கைப்பற்றினார். ஸலாவுத்தீனுக்கு டமாஸ்கஸ் நகரம் செல்லும் வாய்ப்பு வந்தது. அவரின் வாலிபத்தின் மிகச் சிறந்த நாட்கள் அங்கு கழிந்தன. ஸலாவுத்தீனுக்கு தனது வலிமையையும், தைரியத்தையும் வெளிப்படுத்த டமாஸ் கசில் இருந்த நாட்கள் பயன்பட்டன.
தனது  இறைபக்தியாலும்,அமைதியான குணத்தினாலும், சாதுர்யத்தினாலும் நூருத்தீனிடமிருந்து மரியாதையையும், உயர்ந்த தகுதியையும் பெற்றார். மேலும் இஸ்லாமுக்காக முஸ்லீம்களிடத்தில் நம்பிக்கைத் தீயை வளர்த்தார். நூருத்தீன் ஸலாவுத்தீனை டமாஸ்கஸ் காவல்துறையில் உயர் பதவியில் அமர்த்தினார். அவர் டமாஸ்கஸ் நகரில் திருட்டு மற்றும் பிற குற்றவாளிகளை களையெடுத்து நகரில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் பலப்படுத்தி மக்கள் இவரின் நிர்வாகத்தில் அமைதியாக வாழ வழிப்படுத்தினார்.
இவரின் வாழ்க்கையில் முக்கியமான கால கட்டம் எகிப்தில் இவர் வெளிப்படுத்திய இராணுவ அநுபவமும், வீரமும் தான். இவரின் பெரும் முன்னேற்றம் இருபதில் இருந்து நாற்பது வயதுக்குள் ஏற்பட்டது. இவரின் இஸ்லாமிய நம்பிக்கை, போர்த்திறமை, நிர்வாகத்திறமை, தீர்க்கமான முடிவுகள், அமைதியான குணம் போன்றவை அரசர்களையும், இளவரசர்களையும் கவர்ந்து கொண்டது. அவர்கள் ஸலாவுத்தீனுடன் நெருங்கி இருப்பதை விரும்பி னார்கள். அதுவே பின்னாளில் சரித்திரத்தை மாற்றி எழுதி யது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக