புதன், 13 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 9



பாகம் :17
இந்த காலகட்டத்தில் ஸலாவுத்தீன் தனக்கெதிரான மூன்று விரோதிகளை சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார். அவர்கள் ஃப்ராங்க்ஸின் சிலுவைப் போராளிகள், நூருத்தீனின் இளவரசர்கள் மற்றும் இஸ்மாயிலீஸ் பிரிவினர்கள். இவர்கள் மூவரும் கூட்டாக இணைந்து இராக், சிரியா மற்றும் எகிப்தில் இஸ்லாமின் ஒற்றுமையைக் குலைக்க திட்டம் தீட்டினர். ஸலாவுத்தீன் இறைவன் அவருக்களித்த விவேகம், அதிகாரம், திட்டமிடும் தகுதி போன்றவற்றை பயன்படுத்தி அவர்களை வென்றெடுத்தார்.
ஸலாவுத்தீனின் தலைமையின் கீழ் இணைந்த நாடுகள்
நூருத்தீனின் இறப்பிற்குப் பிறகு ஸலாவுத்தீன் மாபெரும் இஸ்லாமிய ஆட்சியை உலகில் தன் கொடிக்கு கீழ் கொண்டு வரும் அனைத்து வாய்ப்பு களையும் பெற்றார். தனது இராணுவ, போர் மற்றும் அரசியல் அநுபவத்தால் அவர் ஒவ்வொரு நாடாக இணைக்க முயற்சித்தார். அவர் காலத்தில் ஏமன் நாட்டில் பல கட்சிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஏமன் பல துண்டுகளாக சிதறியது. ஹமதானிக்கள் சனா நகரிலும், நஜாஹிகள் ஸுபைதிலும் ஒருவருக்கொருவர் பதவிக்கு அடித்துக் கொண்டனர். மேலும், இஸ்லாம் கூறும் இறுதிக் கால “அல் மெஹதி” தாம் தான் என்று ஒருவர் கிளம்பி பிரசாரம் செய்தார். இவரால் சமூக ஒற்றுமை சிதைந்து ஏமனில் படுகொலைகளும், அராஜகங்களும் நிறைந்தது. முஸ்லீம்கள் அநியாயமாக கொல்லப்படுவதை எண்ணி வேதனை அடைந்த ஸ்லாவுத்தீன் தன் சகோதரர் துரன்ஷாஹ் என்பவரை அனுப்பி ஏமனின் சச்சரவுகளை நீக்க உத்தரவிட்டார். அந்த காரியத்தில் துரன்ஷாஹ் வெற்றி பெற்று ஏமனை எகிப்து மற்றும் சிரியாவுடன் இணைக்கச் செய்தார்.
துரன்ஷாஹ் தனது இராணுவத்துடன் நைல் நதியின் வழியாக குஸ் நகர் வரை சென்று, பின் தரை மார்க்கமாக செங்கடல் அடைந்து கப்பல் மூலம் ஜித்தா நகர் சென்று அங்கிருந்து ஏமன் அடைந்தார். அவர் ஸுபைத் பகுதியையும் மற்ற கோட்டைகளையும் கைப்பற்றினார். சில சரித்திர ஆசிரியர்கள் அவர் ஏறக்குறைய 80 நகரங்களையும், கோட்டைகளையும் வெற்றி கொண்டார் என கூறுகிறார்கள். ஏமன் மக்கள் சீர்குலைந்து போன நிர்வாகத்தின் கீழ் இருந்தபடியால் துரன்ஷாவின் வருகையை பெரிதும் விரும்பினார்கள். சில அரண்மனை, கோட்டைக் காவலர்கள் இரத்தம் சிந்துவதை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து சாவிகளை ஒப்படைத்தனர். ஏமன் மக்கள் நாட்டில் நிலையான தன்மையை நாடினர். துரன்ஷா வெற்றிக்குப் பிறகு தோழர்களுடன் கூட்டம் நடத்தி சரியான தலைமைச் செயலகம் ஏற்படுத்த எண்ணி தாஸ் நகரை அதற்காக தேர்ந்தெடுத்தார்.
ஸலாவுத்தீன் துரன்ஷாவையே ஏமனுக்கு ஆட்சியாளராக்கினார். துரன்ஷாவிற்க்குப் பிறகு இன்னொரு சகோதரர் டக்டகின் இப்னு அய்யூப் 593 A.H. ல் அவர் மரணிக்கும் வரை ஏமனின் ஆட்சியாளராக இருந்தார். அய்யூபிட்கள் ஆட்சி ஏமனில் ஏறக்குறைய 80 ஆண்டுகள் (569 A.H. லிருந்து 652 A.H. வரை ) இருந்தன. சகோதரர் ஏமனை வெற்றி கொண்ட அதே ஆண்டு ஸலாவுத்தீன் பர்காஹ், திரிபோலி மற்றும் கிழக்கு துனிஸியாவிலிருந்து கபிஸ் வரை வென்றார்.
பாகம் : 18
579 A.H. ல் இஸ்லாமிய உலகில் இளவரசர்களின் தூதுவர்களால் டமாஸ்கஸ் நகரில் நடத்தப்படும் இஸ்லாமிய மாநாட்டுக்கு ஸலாவுத்தீன் தனது சகோதரர் அல் மாலிக் அல் ஆதிலை கலந்து கொள்ள அழைத்தார். அந்த மாநாட்டில் பிரபலமான ஷெய்க் ஸாதர் அத்தீன், ஷிஹாப் அத்தீன் பஷ்ர், அப்பாஸிய கலீஃபாவின் அரசுப் பிரதிநிதி அந் நாஸர் லிதினில்லாஹி, அல் கதி மொஹி அத்தீன் அஷ் ஷஹ்ரஸுரி, மோஸூலின் தூதுவர் பாஹா அத்தீன் இப்னு ஷத்தாத், அல் ஜஸீராஹ்வின் ஆட்சியாளரின் தூதுவர் மொ இஸ் அத்தீன் ஸின்ஜர் போன்ற மேதைகளும், பெரியவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். ஸலாவுத்தீன் இஸ்லாமிய இளவரசர் களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும், தேவையற்ற ஒப்பந்தங்களையும், குழப்பங்களையும் விலக்கி சகோதரத்துவம் காக்க முயற்சி செய்து பேசினார். அனைத்து தூதுவர்களும் ஸலாவுத்தீனின் கருத்துக்கு ஆதரவளித்தனர். ஆனால் மோஸூலின் தூதுவர் மட்டும் ஸலாவுத்தீனின் கருத்துக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்தார்.
மோஸூலின் தூதுவர் ஒன்றுபட்ட இஸ்லாமிய உலகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ஸலாவுத்தீன் அவர்களுடன் போரிட்டு அவர்களை மாற்றி நேர்வழியில் கொண்டுவர கடமைப்பட்டார். 581 A.H. ல் ஸலாவுத்தீன் மோஸூலை முற்றுகையிட்ட போது, இஸ் அத்தீன் சமாதனமாகி ஹர்ரான் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டார். இஸ் அத்தீன் ஷஹர் ஸூர், அல் கரபிலி, டஃப்ஜக் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளை ஸலாவுத்தீனிடம் ஒப்படைக்க வேண்டும். மாற்றாக மோஸூலை இஸ் அத்தீனிடம் ஒப்படைக்க வேண்டும். நாணயங்களிலும், வெள்ளிக் கிழமை தொழுகை போதனையில் ஸலாவுத்தீனின் பெயரே தொடரப்படும். மேலும், இஸ் அத்தீன் ஸலாவுத்தீனின் திட்டங்களையே தொடர்வார். இதுவே ஹர்ரான் உடன்படிக்கையின் தீர்மானமாகும். நாட்டில் ஏதோ கலகக்காரர்கள் போல் தனித்தனியாக மோஸூல், சன்ஜார், அல் ஜஸிராஹ், அர்பில், ஹர்ரான், டயர் பக்ர் மற்றும் பல இடங்களில் சிதறிக்கிடந்த இராணுவத்தினரை ஒரே குழுவாக ஆக்கினார்.
ஸலாவுத்தீன் பாக்தாதில் உள்ள அப்பாஸிட் கலீஃபா அல் முஸ்ததிக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஸலாவுத்தீனின் மந்திரி அல் கதி அல் ஃபத்ல் மூலம் அனுப்பப்பட்ட செய்தியில், ஸலாவுத்தீன் ஜிஹாதின் வழியில் சாதித்தவைகளையும், எதிரிகளை முறியடித்ததையும், எகிப்து, ஏமன், வட ஆப்ரிக்கா நாடுகளை வென்றதையும், வெள்ளிக்கிழமை தொழுகை போதனைகளை அப்பாஸிட் கலீஃபாவின் பெயரில் நிகழ்த்துவதையும் தெரியப்படுத்தினார். மேலும், கலீஃபாவை ஸலாவுத்தீனை எகிப்து, மொரோக்கோ, ஏமன், சிரியா மற்றும் வெற்றி கொண்ட சில பகுதிகளுக்கு ஆட்சியாளராக நியமிக்க வேண்டுமென்றும், அவருக்குப் பிறகு அவரின் சகோதரரையோ, மகனையோ வாரிசாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார். கலீஃபா அல் முஸ்ததி ஸலாவுத்தீனின் வேண்டுதல் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து தனது பிரதிநிதிகளை பரிசுகளுடனும், இராஜ அலங்கார அங்கியை அனுப்பியும் தன் ஒப்புதலை அளித்தார்.
ஸலாவுத்தீன் தன் இஸ்லாமிய ஆட்சியின் கொடியின் கீழ் ரம்லாவிலிருந்து நைல் நதி வரையும், வட ஆப்ரிக்காவிலிருந்து திரிபோலி வரையிலும் எண்ணற்ற ஊர்களையும், நகரங்களையும் ஆண்டார். ஏமன். ஏதென், திரிபோலியின் கடலோர பகுதிகள், துனிஷியாவின் ஒரு பகுதி, கபிஸ் மற்றும் எகிப்து, சிரியா, வட இராக் (குர்திஸ்தான்), மொரோக்கோ, வட ஆப்ரிக்கா பகுதிகளை போரிட்டு வென்றார். தனக்குட்பட்ட நாடுகளில் உள்ள ஊர்களில் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகை போதனைகளை தனது பெயர்களில் நடத்த உத்தரவிட்டார்.
சந்தேகமில்லாமல் ஒன்றினைந்த இஸ்லாமிய தேசம் மாபெரும் நம்பிக்கையுடன் இணைவது நல்ல சகுனமாகவும், தங்கள் குறிக்கோளை முஸ்லீம்கள் அடைவார்கள் என ஸலாவுத்தீனுக்குப் பட்டது. இப்னு சனன் என்ற கவிஞர், ‘முஸ்லிம் உம்மாக்கள் ஆளத் தெரியாத ஆட்சியாளர்களால் அலைக்கழிக்கப்பட்டார்கள். ஸலாவுத்தீனின் மூலம் நன்மையின் பால் வாழ்ந்தார்கள்’ என்று கவிதை எழுதினார். இந்த பலமான ஒருங்கினைப்புக்கு பின் சிலுவைப் போராளிகளைத் தாக்கி இஸ்லாமிய மண்ணை (ஜெருசலத்தை) விட்டு விரட்டியது காலத்தால் மறக்க முடியாத வண்ணம் சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. இஸ்லாமியர்களை தலைமுறை, தலைமுறையாக பெருமையடைய செய்கிறது.
அனைவரும் முஸ்லீம்களின் ஒற்றுமையானது, துன்புறுத்தும் இழிவான சிலுவைப் போராளிகளிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்று இஸ்லாமியம் வீறுநடை போடுவதற்கான ஆரம்பம் என்பதை உணர்ந்தார்கள். ஜெருசலத்தின் வெற்றி என்னும் முதல் நடவடிக்கை அடுத்த வெற்றிகளுக்கான குறிக்கோளுடன் மேலும், பாலஸ்தீனை முழுதுமாக நிர்வகிக்கும் வாய்ப்பு அமையும்.
சூழ்ச்சிகளும், சிலுவைப் போரும்
சிலுவைப் போர் என்பது ஐரோப்பிய நாடுகளால் முஸ்லீம்களிடம் இருந்து ஜெருசலத்தை கைப்பற்ற எடுக்கப்பட்ட மதவெறி கொண்ட  ஒரு இராணுவ நடவடிக்கை. மேலும் இஸ்லாம் உலகில் பரவாமல் இருக்கவும் நடத்தப்பட்ட போர்.
மேலும், சில காரணங்களானது :
·       இஸ்லாம் பரவ ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவர்கள் வசம் இருந்த ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளை முஸ்லிம் ஆட்சியாளர்கள் வென்றனர். இதனால் இஸ்லாமை சிலுவைப் போராளிகள் வெறுத்தனர்.
·       முஸ்லிம் செல்ஜுக்குகள் கான்ஸ்டாண்டிநோபிலைச் சுற்றி பரவி விட்டிருந்தனர். இதனால் கான்ஸ்டாண்டிநோபில் கை நழுவி போய் விடுமோ என்று அஞ்சினர். பைஸாந்திய சக்கரவர்த்தி அலெக்ஸியஸ் கம்னினுஸ் கிறிஸ்துவ நாடுகளுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக போரிட வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
·       ஜெருசலத்திற்கு புனித பயணம் வந்த கிறிஸ்துவர்கள் முஸ்லீம்கள் தங்களை புண்படுத்துவதாகவும் ( மாற்று மதத்தினரைப் இழிவு படுத்துவது இஸ்லாத்தில் இறைவனால் தடை செய்யப்பட்டது) தாங்கள் அநீதி இழைக்கப்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் மனம் வெறுத்திருப்பதாகவும் ஐரோப்பா திரும்பி முறையிட்டனர். அதில் மிகவும் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை வளரும் வண்ணம் செய்தவர் பிரான்சின் கிறிஸ்தவ துறவர் ஹெர்மிட்.
·       இதைத் தொடர்ந்து யார் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜெருசலத்தை மீட்டெடுக்கும் ஆவலும், மதவெறி ஆர்வமும் கொண்டுள்ளனரோ அவர்கள் உடனே முஸ்லீம்களுக்கு எதிரான சிலுவைப் போரில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடப்பட்டது. இந்த ஆர்வம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள், பிஷப்புகள், போப் மூலம் தீவிரமாக வளர்க்கப்பட்டது.
ஷியா பிரிவு ஃபாத்திமிட்கள் மனம் மாறி பைஸாந்தியர்களுக்கு உதவி செய்து செல்ஜுக் முஸ்லீம்களிடமிருந்து எகிப்தை விடுதலை செய்வதாக கூறினர்.
486 A.H. ல் ஜெருசலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரான்சின் கிறிஸ்தவ துறவர் ஹெர்மிட் நாடு திரும்பியவுடன் போப்பை சந்தித்து சிலுவைப் போரைத் துவங்கக் கேட்டுக் கொண்டார். போப் வட இத்தாலியில் பியாசென்ஸா என்ற இடத்தில் ஒரு சபையைக் கூட்டி பேச்சு நடத்தினார். அந்த சபை பிரான்சின் கிளர்மெண்ட் சபைக்கு பரிந்துரை செய்ய அவர்கள் சிலுவைப் போருக்கான ஏற்பாடுகளை கவனித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக