வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அப்பாஸிட்கள் வரலாறு 1

அப்பாஸிட்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
மக்காவில் மிகவும் புகழ்பெற்ற குரைஷி வம்சத்தின் அப்த் மனாஃப் இப்ன் குசாய் என்பவரின் வாரிசு வரிசையில் அப்த் அல் முத்தலிப் (நபி (ஸல்) களாரின் பாட்ட னார்.) என்பவரின் மற்றொரு மகன் அதாவது நபி(ஸல்) கள் நாயகத்தின் சிறிய தகப்பனார் அல் அப்பாஸ் என்பவரின் வம்சா வழியினர் தான் இந்த அப்பாஸிட்கள் பேரரசின் ஆட்சியாளர்கள். அல் அப்பாஸ் அவர்களுக்கு அப்துல்லாஹ்வின் மகன், அலியின் மகன், முஹம்மதின் மகன் ஆகியோரின் வழியில் முஹம்மது என்பவரின் இரு பிள்ளைகள் அபு அல் அப்பாஸ் (ரலி) மற்றும் அல் மன்சூர் ஆவார்கள். இதில் அல் மன்சூர் என்பவரின் வழியில் வந்த பெரும்பான்மையோர் தான் பிற்காலத்தில் அப்பாஸிட் பேரரசின் வாரிசு மன்னர்களானார்கள்.
747 ல் பெர்ஷியாவில் உமய்யாத் கலீஃபாவை எதிர்த்து யார் இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தின் தலைமைப் பதவியை வகிப்பது என்று சிறியதாக  துவங்கிய பிரச்சினை கலவரத்தில் வந்து நின்றது. அது ஏறக்குறைய குடும்பசண்டை போல் இருந்தது. அந்த கலவரத்திற்குப் பின்  நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந் தவர்தான் கலீஃபாவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் இப்ன் அப்த் அல் முத்தலிபின் பிள்ளைகளில் அப்துல்லாஹ் என்பவரின் மகன் அப்பாஸ் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அல் அப்பாஸ் இப்ன் அப்த் அல் முத்தலிஃப் என்ற இவர்கள் நபி(ஸல்) அவர்களு க்கு சில வயது மூத்தவர்கள். வணிகராக இருந்தவர்கள். 624 ல் பத்ர் யுத்தத்திற்குப் பிறகு, இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்களின் மனைவி உம் அல் ஃபத்ல் (லுபாபா பின்த் அல் ஹாரித்) இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாவது பெண்மணியாவார். இவர்களும் நபிகளாருக்கு ஆதரவாய் இருந்தார்கள். மக்காவில் யாத்ரிகர்களுக்கு ஜம்ஜம் நீர் வழங்கும் பொறுப்பு இவர்களுடையதாய் இருந்தது. அப்பாஸ் (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் மதீனா ஆட்சி அல்லாமல் சிந்துவில் கல்ஹோரா, பெர்பெரில் பனூ அப்பாஸ், ஏமனில் பவாஸிர், சூடானில் ஷைகியா மற்றும் ஜா அலின் மேலும் பாகிஸ்தானில் முர்ரீ ஆகியோர் வெளிப் பிரதேசங்களிலும் ஆண்டார்கள்.
இவரைத் தொடர்ந்து இவர் வழியில் ஆண்ட கலீஃபாக்களின் ஆட்சி “அப்பாஸிட்கள்” சாம்ராஜ்ஜியமானது. அப்பாஸிட்கள் பெருவாரியான அரபுக்கள், தொல்லைகளுக்கு பெயர் பெற்ற மார்வ்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றிருந்தார்கள். மேலும் இரத்த சம்பந்தமோ, அரபு இனத்தையோ சாராத, உமய்யாத்களால் கீழ்த்தர மக்களாக மதிக்கப்பட்ட ஏமனை சேர்ந்த ‘மவாலி’ களின் ஆதரவையும் பெற்றிருந்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் பேரர் முஹம்மது இப்ன் அலி என்பவர் நபி (ஸல்) களாரின் ஹாஷிமிட் குடும்பவழி ஆட்சியை பெர்ஷியாவில் கொண்டுவர பெரிதும் முயற்சித்தார்.
இரண்டாம் மர்வான் ஆட்சியில் அப்பாஸ்(ரலி) அவர்களின் நான்காம் தலைமுறை வழியைச் சேர்ந்த இமாம் இப்ராஹிம் என்பவர் கோரசான் பகுதியில் ஈரானிய ஷியாக்களின் ஆதரவால் புரட்சியில் இறங்கினார். ஆனால், 747 ல் சிறைப் பிடிக் கப்பட்டு இறந்து போனார். சிலர் இவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார் என்றார்கள். இவரைத் தொடர்ந்து இவர் சகோதரர் அப்துல்லாஹ் (சரித்திரம் அறிந்த பெயர் ‘அபு அல் அப்பாஸ் அஸ் ஸஃப்ஃபா’) புரட்சியைத் தொடர்ந்தார். 750 ல் உமய்யாத் களை ஸாப் போரில் வென்று தன்னை  கலீஃபாவாக அறிவித்து கொண்டார். இந்த வெற்றிக்குப் பிறகு, அபு அல் அப்பாஸ் அஸ் ஸஃப்ஃபா தனது படைகளை மத்திய ஆசியாவில் டலாஸ் போருக்கு அனுப்பினார். ஷியாக்களும் அப்பாஸிட்களை நபி (ஸல்)கள் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாததால் ஆதரித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் அவர் களின் ஷியா பிரிவு கொள்கைகளை அப்பாஸிட்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரும் பான்மையானவர்கள் பின்பற்றும் ‘சுன்னி’ கொள்கைகளையே கடைபிடித்தனர். குறிகிய காலத்தில் பெர்பெர் கரிஜியாக்கள் வட ஆப்பிரிக்காவில் சுதந்திரமாக ஒரு பகுதியை அமைத்துக்கொண்டார்கள். இந்த கரிஜியாக்கள் ஒரு முறை மக்காவில் முஆவியா இப்ன் அபுசுஃப்யான், அம்ர் இப்ன் அல் ஆஸ் மற்றும் அலி இப்ன் அபிதாலிப் ஆகியோரை அதிகாலைத் தொழுகையில் கொல்லத் துணிந்தனர். இந்த கரிஜியாக்கள் ஓமனில் பெரும்பான்மையோரும், சிலர் மஃஸாப் ஆக அல்ஜீரியா, ஜெர்பாவாக துனிஷியாவிலும், நஃபுசாவாக லிபியாவிலும், ஜான்சிபாரிலும் இருந்தார்கள். 18 ம் நூற்றாண்டுகளில் வஹ்ஹாபி என்னும் அமைப்பும் இவர்கள் தான் என்று ஹனஃபி போதகர் இப்ன் ஆபிதீன் கூறுகிறார்கள்.
934 ல் அல் ரதி பில்லாஹ் என்பவர் அப்பாஸிட்களின் கலீஃபாவாக பாக்தாதில் இருந்தார். அந்த சமயத்தில் தான் ஹன்பலிக்கள் பிரபல்யமாக இருந்தார்கள். அவர்கள் சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார்கள். மதுக்களை கீழே கொட்டினார்கள், இசைக்கருவிகளை உடைத்து எறிந்தார்கள்.  அல் ரதி அவர்களின் ஆட்சியின் போது துருக்கி இராணுவஜெனரல் ஒரு பகுதியை தனதாக்கிக்கொண்டு ஆண்டு கப்பம் செலுத்த முடியாதென்று குழப்பம் விளைவித்தார். பாக்தாதுக்கு அருகிலுள்ள சில பிராந்தியங்களும் சுயாட்சியை நாட எண்ணினர். அப்பாஸிட்கள் எட்டாம் நூற்றாண்டின் பாதிவரை போட்டியாகஇருந்த சில கலீஃபாக்களையும், மந்திரிகளையும் அடக்கி நிர்வாகத்தை சீர்செய்வதில் கவனம் செலுத்தினர். சிரியாவிலும், அனடோலியாவிலும் பைஸாந்தியர்களை எதிர்த்து நடத்திய போரில் பிராந்திய கவர்னர்கள் மத்திய அரசுக்கு கட்டுப்படாமல் தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டார்கள். மேலும் ஆதர்வாளர்களாய் இருந்த பெர்ஷியர்கள் வடக்கு  பகுதியில் கோரசானில் தனியாக ஒரு மாகாணத்தைக் கைப்பற்றி நிர்வ கித்தார்கள். 820 ல் சமானித்கள் ட்ரான்ஸோக்சியானா மற்றும் கிரேட்டர் கோர சனையும், ஷியாக்கள் வட சிரியாவையும் தங்கள் சுயமாநிலமாக அறிவித்துக் கொண்டார்கள். இதனால் அப்பாஸிட்களுக்கு மத்தியஅரசின் அதிகாரம் மாகாணங்களில் கை நழுவிப் போனது. பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஈராக் முழுவதுமே சிரிய அமிர் என்னும் ஆட்சியாளர்கள் வசம் பல பகுதிகளாகப் பிரிந்தது. அப்போதைய அப்பாஸிட் கலீஃபா அல் ரதி அவர்களை ‘அமிர் அல் உமரா’ (PRINCE OF PRINCES) என்ற தகுதியின் அடிப்படையில் ஒப்புக்கொள்ள வேண்டி நிர்பந்திக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக குறிகிய காலத்தில் பாக் தாதில் டைலம் பகுதியில் இருந்து பெர்ஷிய “புவய்ஹித்’ கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்கள். 
இந்த புவய்ஹித்கள் பெர்ஷிய ஷியா பிரிவினர்கள் ஆவார்கள். லஹிஜான் என்ற இடத்தில் ஸோரோஸ்ட்ரிய மதத்தைச் சேர்ந்த மீனவராக இருந்த ஒருவரின் மகன் புயா என்பவர் ஆவார். புயா நாளடைவில் இஸ்லாமிய ராக மாறி ஷியா கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். இவர் பெயரிலேயே வம்சாவழியினர் புவாயிட்கள் என்றழைக்கப்பட்டார்கள். இந்த புயாவின் மூன்று மகன்கள் பின்னாளில் பாக்தாதில் அப்பாஸிட்களின் பகுதிகளைப் பிடித்துக்கொண்டார்கள். இந்த புவாயிட்கள் அலி(ரலி) அவர்களின் நேரடி வாரிசுகள் அல்ல. தங்கள் ஆட்சியில் கிறிஸ்தவ அதிகாரிகளையே சுன்னி பிரிவுக்கு எதிராக வைத்திருந்தார்கள். இந்த புவாயித் வாரிசு மன்னர்கள் தங்கள் இடமான டைலம் பகுதியை முன்னிலைப்படுத்தி பெயர்களுக்குப் பின்னால் டௌலா என்று வருமாறு வைத்துக்கொண்டார்கள். 
அப்பாஸிட்களின் ஆட்சியில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் பல பகுதிகளாக சிதறுண்டு போனது. எட்டாம் நூற்றாண்டுகளின் இறுதியில் அவர்களே அதைப் புரிந்து கொண்டது போல்தான் இருந்தது. 793 ல் மொரோக்கோவில் ஃபெஸ் என்னும் பகுதியை ஷியாக்களும், 830 ல் அப்பாஸிய கவர்னர்கள் பலர் இணைந்து ‘அக்லாபித்’ என்னும் மாகாணத்தையும், 860 ல் எகிப்து கவர்னர்கள் இனைந்து அஹமது இப்ன் துலுன் என்பவர் தலைமையில் துலுனித் என்ற மாநிலத்தையும், ஹிராத் பகுதியில் ஸ்ஃப்ஃபாரித்களும், புகாரா பகுதியில் சமானித்களும் தனித் தனியாக அப்பாஸிட்களின் அதிகாரத்திலிருந்து பிரிந்து போனார்கள். அந்த சமயத்தில் மத்திய மெஸோபொடாமியா பகுதி மட்டும் அப்பாஸிட்களின் நேரடி ஆட்சியில் இருந்தது. பாலஸ்தீனும், ஹிஜாஸ் பகுதியும் துலுனித்கள் வசம் இருந்தன. பைஸாந்தியர்களும் அனடோலியாவில் அப்பாஸிட்களை கிழக்கு நோக்கி தள்ளினார்கள்.         920 ல் நிலைமைகள் முற்றிலுமாக மாறியது. ஷியா பிரிவினர் முதல் ஐந்து இமாம்களை மட்டுமே ஒப்புக்கொள்வோம் என்றும் அந்த வழியில் நபி(ஸல்)களாரின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களின் பெயரில் இத்ரிஸ் மற்றும் அக்லாபித் பகுதிகளை “ஃபாத்திமிட்” பேரரசு என்று பெயரிட்டு, எகிப்தை நோக்கி முன்னேறி கெய்ரோ நகருக்கு அருகில் ஃபுஸ்தத் என்ற இடத்தை தலை நகராக ஆக்கிக்கொண்டார்கள். அங்கு ஷியா பிரிவைப் பற்றியும், அவர்களின் அரசியல் பற்றியும் பயிற்சியளித்தார்கள். 1000 வது வருடத்தில் ஷியாக்கள் அப் பாஸிட்களுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்திருந்தார்கள். இஸ்மாயிலி ஃபாத்திமிட்களாகிய அவர்கள் பாக்தாதிலுள்ள தங்கள் ஷியா பிரிவைச் சேர்ந்த கல்க் என்னும் பிரிவினரின் ஆதரவையும் திரட்டி அப்பாஸிட்களைக் குறிக்கும் இஸ்லாமிய உம்மாக்கள் என்னும் அதிகாரத்திற்கும் உரிமை கொண்டாடினார்கள். பாக்தாத் நகரம் புவய்ஹித் மற்றும் செல்ஜுக்குகளின் பகுதிக்கு வெகு அருகிலி ருந்தது. அப்பாஸிட்களின் கருப்புக்கொடியுடன் தங்கள் பச்சை நிறக்கொடியோடு சவால்விட்ட ஃபாத்திமிட்கள் பனிரெண்டாம் நூற்றாண்டில்தான் வீழ்ந்தார்கள். இதற்கிடையில் சிறு சிறு பிராந்தியங்களாக இருந்த ஆட்சியாளர்கள் தங்களுக் குள்ளேயே சண்டை செய்துகொள்ள ஆரம்பித்தார்கள்.    
அப்பாஸிட்களின் பாக்தாதிலிருந்த இஸ்லாமிய சம்பந்தமான மன்றம் புவய்ஹித்தின் தலைவர் ஹிலால் அல் சபியை மதிப்பு வாய்ந்தவராகக் கருதியது. பஹா அல் தௌலா என்பவரின் மறைவிற்குப் பின்பு புவய்ஹித்கள் மேலும் சில பகுதி களை வெல்லமுடியும் என்று கருதினார்கள். இந்த நிலையில் செல்ஜுக் என்ற ஓகுஸ் துருக்கிகளால் புவய்ஹித்களுக்கு பிரச்சினை உருவானது. 1058 ல் பஸசிரி என்ற துருக்கிய முன்னாள் அடிமையும், தற்போதைய அமீருமான அவர் பாக்தா தில் ஷியா ஃபாத்திமிட்களின் பெயரில் கிளர்ந்தெழுந்தார். ஈராக்கை விட்டு புவாயிட்களை விரட்டிய செல்ஜுக்குகளை எதிர்த்து நின்றார். மொஸோ பொடானிய அரபுகளின் துணையுடன் பாக்தாதை மீண்டும் பிடித்தார். பின்னாளில் ஸ்கிர்மிஷ் என்னும் சிறுபடையால் கொல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக