புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 3



1092 ல் இளம்வயது கிலிக் அர்சலன் மெலிக் ஷாவால் விடுதலை செய்யப்பட்டார். அவர் திரும்பி இஸ்னிக் வந்து க்ரேட் செல்ஜுக்குகளை ஒன்றும் செய்ய முடியாமல் போனார். ஆனால் அதேசமயம் அவர்கள் ஐரோப்பிய சிலுவைப் போராளிகளுக்கு எதிராக போரிடும் வரை நிரந்தர எதிரியாக இருந் தார். 1096 ல் முதல் சிலுவைப்போராளிகள் பைஸாந்திய பேரரசர் அலெக்ஸியஸை எதிர்த்து போரிட செல்லும் வழியில் மேற்கு அனடோலியா வந்தார்கள். அப்போது கிலிக் அர்சலன் எதிர்திசையில் கிழக்கில் மலட்யா என்ற இடத்தில் போரில் இருந்ததால் சிலுவைப் போராளிகள் தலைநகர் இஸ்னிக்கை கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை. கிலிக் அர்சலன் சிலுவைப்போராளிகளை எதிர்க்க க்ரேட் செல்ஜுக்குகளுடன் இணைந்து போரிட சம்மதித்தார். ஆனால் இணைந்த இரு செல்ஜுக் படைகளும் 1097 ஜூனில் டோரிலாயெம் என்ற இடத்தில் படு தோல்வி அடைந்தன. அதன் பிறகு செல்ஜுக்குகள் கொன்யாவை புதிய தலைநகரமாக ஆக்கிக்கொண்டனர். சிலுவைப்போராளிகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால் அவர்கள் கொன்யாவையும் மேலும் எரிக்லி, கைசெரி ஆகிய இடங்களையும் செல்ஜுக்குகளிடமிருந்து வென்றார்கள். 75% சதவிகித நிலப்பரப்பு பைஸாந்தியர்களின் ஆளுமைக்கு சென்றுவிட்டது. ஜெருசலத்தை நோக்கி செல்ல வேண்டிய சிலுவைப்போராளிகள் சில காலம் அனடோலியாவிலிருந்து கொலைகளைச் செய்தும், கொள்ளை அடித்தும் அட்டூழியம் செய்து கொண்டு செல்ஜுக்குகளின் மேலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையைத் தடுத்து மத்திய கடலோரம் நோக்கி விரட்டினர். மேலும் சிலுவைப்போராளிகளை எதிர்க்க ஒன்று கூடிய க்ரேட் செல்ஜுக்குகளுடனான நட்பை பிளவு படுத்தினர். ஆனால் அவர்கள் சென்ற பிறகு மீண்டும் செல்ஜுக்குகள் நட்பு கொண்டார்கள்.
                           கிலிக் அர்சலன் ஆட்சியில் சரியாக சூடான வெயில் காலமான ஆகஸ்டில் செல்ஜுக்குகள் அமஸ்யா என்ற இடத்தில் லம்பார்ட்சை எதிர்த்து போரிட்டனர். இந்த அமஸ்யா கருங்கடலுக்கு மேலே மலைப்பகுதியான இடமாகும். அவர்களின் தானியக்கிடங்கை குறிவைத்து தாக்கி சிலுவைப்போராளிகளை தவிக்கவிட்டனர். அடுத்தடுத்து செல்ஜுக்குகள் அமஸ்யா, எரிக்லி ஆகிய பகுதிகளை மீண்டும் திரும்ப கைப்பற்றி மத்திய அனடோலியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம் க்ரேட் செல்ஜுக்குகள் இதுவரை கூட்டாளியாக இருந்த துருக்கி செல்ஜுக்குகளுக்கு மேலும் கிழக்கு பகுதியில் மலத்யாவையோ, ஈராக்கின் மோஸுல் நகரையோ நோக்கி முன்னேற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிலிக் அர்சலனின் எல்லை பரப்பும் எண்ணம் பலனற்று போனது.
                           கிலிக் அர்சலனுக்குப் பிறகு வந்த முதலாம் மெலிக் ஷா என்பவர் தனது சகோதரர் முதலாம் மெசுத்துடன் சேர்ந்து 1116 ல் பலமுறை பைஸாந்தியர்களை எதிர்த்து தோற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் விடாமல் கிரேட் செல்ஜுக்குகளுடன் கூட்டு சேர்ந்து (இதற்காக சகோதரர் மெசுத்துக்கு க்ரேட் செல்ஜுக்கின் இளவரசியை திருமணம் செய்து வைத்தார்.) எதிர்த்தார். 1134 ல் க்ரேட் செல்ஜுக்கின் மன்னர் இறந்தவுடன், சூழ்நிலை மெசுத்துக்கு சாதகமாக இருக்க அவர் இரண்டாம் சிலுவைப்போராளிகளுடன் போரிட்டு எஸ்கிசெஹிர், டெனிஸ்லி, அனடோலியா ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். இந்த செல்ஜுக் போரின் இடையூறாலேயே ஐரோப்பியர்களுக்கு இரண்டாம் சிலுவைப்போர் பெரும் தோல்வியைத்தந்தது. க்ரேட் செல்ஜுக்குகளின் வெகு தொலைவிலிருந்த பிரதேசங்களை எல்லாம் மெசுத் வென்றெடுத்தார். இவருடைய ஆட்சியில் கொன் யாவில் கட்டப்பட்ட அலாவுத்தீன் மசூதி (1153) செல்ஜுக்குகளின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது.
                               மெலிக் ஷாவுக்குப் பிறகு, இரண்டாம் கிலிக் அர்சலன் ஆட்சிக்கு வந்தார். இவர் சிலுவைப்போராளிகள், பைஸாந்தியமன்னர் மானுவேல்  க்ரேட் செல்ஜுக்குகள் மற்றும் இவர்களுடன் கூட்டு வைத்திருந்த சொந்த சகோதரர் ஷஹின் ஷா ஆகிய அனைவருடன் போரிட்டார். சகோதரருடனும், மற்ற செல்ஜுக்குடன் நடந்தபோரில் வெற்றிபெற்றார். தோற்ற இருவரும் மீண்டும் இரண்டாம் கிலிக் அர்சலனுடன் மவுண்ட் சுல்தான் தாக் என்ற இடத்தில் இறுதி யாக போரிட்டு ஆட்சியை இழந்தார்கள். போரில் கைப்பற்றப்பட்ட செல்வத்தை வைத்து இரண்டாம் கிலிக் அர்சலன் கொன்யா நகரை வளப்படுத்தினார். பைஸாந்தியர்களின் கையை விட்டு அனடோலியா முற்றிலும் நழுவி செல்ஜுக்குகள் வசமானது. ஐரோப்பியர்கள் அனடோலியாவை துருக்கி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். செல்ஜுக்குகளும் துருக்கியில் பொருளாதார நடிவடிக்கைகளை மேற்க்கொண்டார்கள். கட்டிடங்கள், வியாபாரம், துறைமுகம், மதரஸா என்னும் இஸ்லா மிய கல்விக்கூடங்கள் போன்றவற்றை நிர்மாணித்தார்கள். முக்கியமான முன்னேற்றங்களை துருக்கி நாட்டில் உண்டாக்கினார்கள். விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு பெரும் தூண்டுகோலாய் இருந்தார்கள்.
                              1190 ல் மூன்றாவது சிலுவைப்போரின் போது கொன்யா நகரத்தை சிலுவைப்போராளிகள் கைப்பற்றினார்கள்.  இரண்டாம் கிலிக் அர்சலனுக்கு எழுபது வயது ஆனபோது அவர் மிகவும் தளர்ந்துவிட்டார், அவரின் ஒன்பது பிள்ளைகளும், ஒரு சகோதரரும், சகோதரர் மகனும் தங்கள் இஷ்டம் போல் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டார்கள். கொன்யா மட்டும் இரண்டாம் கிலிக் அர்சலனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரின் மகன்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனி ஆட்சியாளர்கள் போல் செயல்பட்டனர். வேடிக்கை என்னவென்றால் தனித்தனி நாணயங்கள் கூட வெளியிட்டுக் கொண்டார்கள். 1192 ல் தனது 77 வது வயதில் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடைந்தார். அவரின் மகன்கள் ஏறக்குறைய பனிரெண்டு ஆண்டுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அந்த பேரரசின் ஸ்திரத்தன்மையைக் குலைத்தார்கள். 1190 ல் மூன்றாம் சிலுவைப் போரின்போது ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொஸ்ஸா ஜெருசலம் போக கிலிக் அர்சலனிடம் அவர் இறப்பதற்கு முன், தென் துருக்கி வழியாக கடந்து செல்ல அனுமதி கேட்டுப்பெற்றார். அந்த அனுமதியுடன் அவர் தென் துருக்கியைக் கடக்கும் போது, இரண்டாம் கிலிக் அர்சலனும், அவர் மகன்களும் திடீரென்று எதிர்பாராத விதமாக ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொ ஸ்ஸாவின் படையைத் தாக்கினர். இதில் நிலைகுலைந்து ஃப்ரெடெரிக், சிலிஃப்கி என்ற இடத்தில் கோக் ஆற்றின் வெள்ளத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்துபோனார். இது அவர்களுக்கும் சிலுவைப்போராளிகளுக்குமிடையில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.  1192 ல் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடைந்து கொன்யாவில் செல்ஜுக் சுல்தான்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக