வியாழன், 7 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 3



பாகம் : 5
கல்வி
இவரின் வாழ்க்கை பல நகரங்களில் கழிந்ததால் இவர் கல்வியும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது. இளமையில் எல்லாக் குழந்தைகளையும் போல் பா அல்பக்நகரில் குர் ஆனை திறம்பட ஓதவும், அரபியில் எழுதவும், படிக்கவும் கற்று தேர்ந்தார். ஸலாவுத்தீன் ஹதீஸ்களை அல் ஹஃபீஸ் அல் சலஃபீ, இப்னு அவ்ஃப், அந் நைஸபுரி மற்றும் அப்துல்லாஹ் இப்னு பர்ரி ஆகியோரிடம் கற்று தேர்ந்தார் என்று ஆசிரியர் தபகத் அஷ் ஷஃபியாஹ் கூறுகிறார். அந்த கால கட்டத்தில் சமர்கந்த், கார்டோபா மற்றும் நாற்திசைகளிலிருந்தும் டமாஸ்கஸ் நகருக்கு மதபோதகர்கள் வந்து பள்ளி வாசல்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தீவிரமாக இஸ்லாமிய மத, பொது கல்வியை போதித்தனர். ஸலாவுத்தீன் அவர்கள் எல்லாரிடமும் கல்வி கற்றுக் கொண்டார். குறிப்பாக நூருத்தீன் அவர்கள் டமாஸ்கஸி லும், சிரியாவிலும் பல பள்ளிவாசல்களையும், கல்விக் கூடங்களையும் நிறுவி சிறந்த அறிஞர்களை அழைத்து வந்து மக்களிடையே அறிவு வளர்த்தார். புகழ்பெற்ற அப்துல்லாஹ் இப்னு அபி அஸ்ருன் அவர்களை டமாஸ் கஸுக்கு அழைத்து வந்து டமாஸ்கஸின் தலைமை நீதிபதியாக நியமித்தார். கண் பார்வை குறைந்த இவரை ஸலாவுத்தீன் அவர்கள் கண்ணியமாக நல்ல முறையில் கவனித்து இவரிடமிருந்து நிறைய நீதித்துறை விஷயங் களைக் கற்றுக் கொண்டார்.
ஸலாவுத்தீன் குதிரையேற்றம், ஈட்டி எறிதல், வேட்டை யாடுதல் மற்றும் இராணுவ நுணுக்கங்கள் போன்றவற்றை தானிருந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆர்வத்துடன் சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தார். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியாகவும் இருந்தார். உதாரணத்திற்கு சிரியா வெற்றியின் போது தன் சகோதரர்கள் தாஜ் அல் முல்க் மற்றும் அல் மாலிக் அல் முஸ்ஸஃபர் இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்த போது கூட துயரத்தை வெகுவாக வெளிப்படுத்தாமல் இராணுவப் பொறுப்புடன் கோட்டை யை பலப்படுத்தும் ஆலோசனையில் ஈடுபட்டார். இவரைப் போல் ஒரு பிள்ளை வேண்டும் என தாய்மார்கள் பொறாமைப்படும் வண்ணம் ஹத்தீன் போரில் ஈடுபட்டு தனது நிகரற்ற தைரியத்தையும், பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த நபிமார்களின் மண்ணை மீட்க வேண்டும் என்ற உறுதியையும் காட்டினார். ஆம் இஸ்லாமிய சரித்திரத்தில் முஸ்லீம்கள் என்றென்றும் நினைவு கூறத்தக்க தன்னிக ரற்ற வீரர் இவர்.
பாகம் : 6
ஸலாவுத்தீனின் ஆட்சி ஆரம்பம்
ஸலாவுத்தீனின் அரசியல் தோற்றத்திற்கு முன் எகிப்தில் மம்லூக் என்ற ஒரு குறிப்பிட்ட கூட்டம் இருந்தது. இவர்கள் வெள்ளை நிறம் கொண்ட அடிமைகள். மைனர் ஆசியா,பெர்சியா, மத்திய ஆசியா மேலும் பல இடங் களிருந்து விலைக்கு வாங்கப்பட்டும், கடத்தியும் வரப்பட்ட வர்கள். இவர்கள் உள்ளூர் மக்களுடன் கலக்காமல் தங்களுக்கென தனி கலாச்சாரம், தனி தன்மையுடன் வாழ்வார்கள். முக்கியமாக எகிப்தில் சிறப்பான இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். அருகாமை நாடுகளான சூடான், மொராக்கோ, துருக்கி போன்ற நாடுகளின் அரசியல் கட்சிகளாலும், உள்ளூர் புரட்சிக் குழுக்களாலும் எகிப்தின் அரசியல் அமைப்பு சீர் குலைந்து இருந்திருந்தது. பல வழிகளிலும் கலிஃபாக்களையும், மந்திரிகளையும், உயர்பதவியில் இருப்பவர்களையும் கொலை செய்ய முயன்றனர். ஃபாத்திமிட் கலிஃபா (ஷியா பிரிவினரின் ஆட்சி) செயலற்றுப் போய் இருந்தார். இறுதியில் தலா இ இப்ன் ருஸ்ஸிக் என்ற மந்திரி 549 A.H. ல் கலகங்களை அடக்கி ஆட்சியை கைப்பற்றினார். அவரையும் கலகக்காரர்கள் கொன்ற போது அவரின் மகன் ருஸ்ஸிக் இப்ன் தலா இ 558 A.H. (1163 C.E.) ல் ஆட்சியைக் கைப்பற்றினார்.
நூருத்தீனுக்கும், ஜெருசலத்தின் (வட மற்றும் தென் பிரான்சின் பகுதியிலிருந்து வந்த காரணத்தால் ஃப்ராங்க்ஸ் என அழைக்கப் பட்டனர்) ஃப்ராங்கிஷ் மன்னன் அல் மாரிக்குக்கும் எப்படியாவது தங்கள் முழு பலத்தை யும் பயன்படுத்தி எகிப்தை பிடித்து விட வேண்டும் என்று ஆசை. ஆனால் எகிப்தின் உள் நாட்டு குழப்பங்களால் தயங்கினர்.
558 A.H.(1163 C.E) முஹர்ரம் மாதத்தில் ருஸ்ஸிக் இப்னு தலா இ தனது ஆட்சியின் போது மேற்புர எகிப்தில் ஷவிர் இப்னு முஜைர் அஸ் ஸாதி என்பவரை கவர்னராக நியமித்திருந்தார். வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போல ஷவிர் அஸ் ஸாதி புரட்சி செய்து ருஸ்ஸிக் தலா இயைக் கொன்று அல் அதித் என்பவரை வைசிராயராக நியமித்தார். ஷவீர் அஸ் ஸாதி மற்றும் அவரது மகன் நிர்வாகத்தில் ஊழல் பெருகியதால் துர்காம் என்னும் ஜெனரல் புரட்சி செய்து ஷவீரை விரட்டினார். ஷவீர் டமாஸ்கஸ் வந்து நூருத்தீன் அவர்களிடம் மீண்டும் எகிப்தை மீட்டித் தர வேண்டினார். அதற்காக ஆகும் செலவையும், ஆண்டு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கையும் தருவதாக கூறி உதவி கோரினார். முதலில் நூருத்தீன் தயங்கினார்.
ஆனால் ஃப்ராங்கிஷின் அல் மாரிக் எகிப்தைக் கைப்பற்ற துர்காமுடன் இணைந்து ஷவீருடன் சேர்ந்திருக்கும் நூருத்தீனுக்கு எதிராக வருவதாக செய்தி வந்தது. அதனால் நூருத்தீனுக்கு ஷவீருடன் சேர்வது கட்டாய மாகியது. அவர் ஸலாவுத்தீனின் சித்தப்பா ஷிர்குஹையும், ஸலாவுத்தீனையும் ஷவீருடன் அனுப்பினார். இருவரும் போரிட்டு துர்காமை விரட்டி மீண்டும் ஷவீரை ஆட்சியில் அமர்த்தினர்.
ஆனால் ஷவீர் நூருத்தீனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் ரகசியமாக ஃப்ராங்கிஷின் அல் மாரிக்குடன் கூட்டு வைத்திருந்தார். ஷிர்குஹுக்கும், ஸலாவுத்தீனுக்கும் நூருத்தீனுக்கு துரோகம் செய்த ஷவீரின் மீது போர் தொடுப்பது கட்டாயமாகிப் போனது.
559 A.H.(1164 C.E.) ல் ‘புல்பைஸ்’ என்னும் இடத்தில் ரமதான் மாதத்திலிருந்து துல் ஹஜ் வரை நூருத்தீனின் தலைமையிலான ஷிர்குஹ், ஸலாவுத்தீனின் சிரியா இராணுவமும், ஷவீர், அல்மாரிக்கின் சிலுவைப் போராளி களின் இராணுவமும் போரில் இறங்கின.

ஸலாவுத்தீன் வரலாறு 2



பாகம் : 3
வம்ச வழி
சுல்தான் ஸலாவுத்தீன் எகிப்து, அகன்ற சிரியா (தற்போதைய சிரியா, லெபனான்,பாலஸ்தீன் அடங்கியது). உள்ளடக்கிய  அய்யூபிட் மாநிலம் என்று அழைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர். இவரின் குடும்ப வம்சாவழி ஹஸியான் என்ற பகுதியை சேர்ந்த (அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த தெவின் என்ற கிராமத்தில் தான் ஸலாவுதீனின் தந்தை அய்யூப் இப்னு ஷாதி பிறந்தார்) பிரபலமான அர் ரவாதியா என்ற குர்திஷ் மலைவாழ் இனத்தை சேர்ந்தது. இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள்தான் மிகப்பெரிய அதிக அளவில் குர்திஷ்கள் நிறைந்த கூட்டம். சில சரித்திர ஆய்வாளர்கள் இவர் வம்ச தொடர் அத்னான் கூட்டத்தின் முதார் வரிசையை சேர்ந்தது என உறுதியாக கூறுகிறார்கள்.
சுல்தான் ஸலாவுத்தீன், குர்த் நஜ்முத்தீன் அய்யூப் இப்ன் ஷாதி இப்ன் மர்வான் என்பவரின் மகன் ஆவார்.
பிறப்பு
532 A.H. (1132 C.H.) ம் ஆண்டு பாக்தாதின் கோட்டை நகரமான திக்ரிதில் சுல்தான் யூஸூப் ஸலாவுத்தீன் பிறந்தார். திக்ரித் நதியின் கரையில் பாரசீக மன்னர்கள் போர்தளவாடங்கள் சேமித்து வைக்கவும், எதிரிகளை கண்காணிக்கவும் பெரிய கோட்டையை கட்டி இருந்தனர். முஸ்லீம்கள் 16 A.H. ல் கலீஃபா உமர் இப்ன் கத்தாப் காலத்தில் திக்ரித்தை வென்றனர். இதன் பின் திக்ரித்தை பல முஸ்லிம் மன்னர்கள் ஆண்டனர்.
செல்ஜுக் துர்க் ஆட்சியின் போது தந்தையார் நஜ்முத்தீன் அய்யூபுக்கு செல்ஜுக் காவல்துறையின் பெரும்புள்ளியான முஜாஹித்தீன் பஹ்ரூஸ் என்பவரின் தொடர்பு ஏற்பட்டது. அவர் நஜ்முத்தீன் அய்யூபை திக்ரித் கோட்டையின் கமாண்டராக நியமித்தார். நஜ்முத்தீன் தனது சகோதரர் ஷிர்குஹ் அஸாத்தீனை தனக்கு உதவியாக அழைத்துக் கொண்டு அஜர்பைஜானை விட்டு இராக்குக்கு குடி பெயர்ந்தார்.
ஒரு நாள் முஜாஹித்தீன் பஹ்ருஸ் அவர்களுக்கு, சகோதரர்கள் நஜ்முத்தீன்,ஷிர்குஹ் இருவரையும் நாடு கடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் என்னவென்றால், ஒரு கிராமத்து பெண்ணுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு வருகிறது. அது சம்பந்தமாக பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்த பெண் உதவி கோரியதன் பேரில் ஒரு கோட்டைக் காவலாளியை சித்தப்பா ஷிர்குஹ் கொன்று விடுகின்றார். அந்த வழக்கில் முதலில் இரு சகோதரர்களையும் ஒன்றும் செய்யாமல் விட்டு விடத்தான் பஹ்ருஸ் இருந்தார். ஆனால் இறந்துபோன காவலாளியின் பலம் வாய்ந்த குடும்ப பிண்ணனியினால் சகோதரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இருவரையும் இரவோடிரவாக நாடு கடந்து தப்பிச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். மிகச் சரியாக அன்றிரவுதான் சரித்திர நாயகன் உலகம்  வியக்கும் மாவீரர் யூஸுஃப் ஸலாவுத்தீன் அல் அய்யூப் பிறந்தார். குடும்பம் இராக்கின் மோஸுல் நகரை நோக்கி இரவோடிரவாக இடம் பெயர்ந்தது.
தப்பிச் செல்லும் போது குழந்தை யூஸுஃப் ஸலாவுத் தீனின் அழுகுரல் தொடர்ச்சியாக மிக சத்தமாக இருந்தது. எவ்வளவோ தாயும், தந்தையும் மற்றவர்களும் போராடி யும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஒரு குழந்தைக்காக அனைத்து குடும்பமும் மாட்டி அழிந்து விடக் கூடாது என்பதற்காக தந்தையார் நஜ்முத்தீன் அய்யூப் அவர்கள் குழந்தையை கொன்று விடக்கூட நினைத்தார். உடன் இருந்தவர்கள்,ஒன்றும் அறியாத இந்த பச்சை குழந்தை எப்படி இந்த சூழ்நிலையை அறியும், நாளை இது எப்படியாக இருக்கும் என்று யார் அறிவார் ஆகவே ஒன்றும் செய்யாமல் விட்டு விடுமாறு தடுத்து விட்டனர். அதற்கு பதில் அழுகுரல் எதிரிகளை எட்டாத வண்ணம் தப்பிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினர்.
பாகம் : 4
வளர்ப்பு முறை
சகோதரர்கள் நஜ்முத்தீன் அய்யூபும், ஷிர்குஹும் பாக்தாதை விட்டு மோஸுல் நகரின் ஆட்சியாளர் இமாத்ததீன் ஸங்கி என்பவரிடம் அடைக்கலம் அடைந்தனர். இமாத்ததீன் சங்கி அவர்கள் சகோதரர்களை வரவேற்று பரிசுகளை வழங்கி அரவணைத்துக் கொண் டார். இதே இமாத்ததீன் சங்கி ஒரு முறை செல்ஜுக்கின் மீது படையெடுத்து தோல்வியடைந்து போர் கைதியாக இந்த சகோதரர்களிடம் பிடிபட்ட போது இமாத்ததீன் சங்கி மீது கருணை கொண்டு அவரை மோஸூலுக்கு திரும்பி தப்பிச்செல்ல உதவினர். அந்த உதவிக்கு இன்று இமாத்த தீன் சங்கி பரிகாரம் தேடிக் கொண்டார். சகோதரர்களுக்கு நிலம், வீடு வழங்கி வாழ்க்கை வசதி செய்து கௌரவித் தார். மேலும் இரு சகோதரர்களையும் இராணுவத்தில் கமாண்டர்களாக நியமித்தார்.
534 A.H. 3 இமாத்ததீன் சங்கி ‘பா அல்பக்’ என்ற பகுதியை கைப்பற்றினார். அதற்கு நஜ்முத்தீன் அய்யூபை கவர்னராக நியமித்தார். இது இமாத்ததீன் சங்கி நஜ்முத்தீன் அய்யூப் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தியது, ஸலாவுத் தீனின் இளமைப் பருவத்தின் மிகச் சிறந்த நாட்கள் ‘பா அல்பக்’ ல் கழிந்தது. தந்தையாரின் பணி காரணமாக தனித்து விடப்பட்ட ஸலாவுத்தீன் அங்கு குதிரையேற்றம், ஜிஹாத், போர்திறமை, அரசியல், நிர்வாகம் போன்ற வற்றை திறமையாக கற்றுக் கொண்டார்.
1154 C.E. இமாத்ததீன் சங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ் கசை கைப்பற்றினார். ஸலாவுத்தீனுக்கு டமாஸ்கஸ் நகரம் செல்லும் வாய்ப்பு வந்தது. அவரின் வாலிபத்தின் மிகச் சிறந்த நாட்கள் அங்கு கழிந்தன. ஸலாவுத்தீனுக்கு தனது வலிமையையும், தைரியத்தையும் வெளிப்படுத்த டமாஸ் கசில் இருந்த நாட்கள் பயன்பட்டன.
தனது  இறைபக்தியாலும்,அமைதியான குணத்தினாலும், சாதுர்யத்தினாலும் நூருத்தீனிடமிருந்து மரியாதையையும், உயர்ந்த தகுதியையும் பெற்றார். மேலும் இஸ்லாமுக்காக முஸ்லீம்களிடத்தில் நம்பிக்கைத் தீயை வளர்த்தார். நூருத்தீன் ஸலாவுத்தீனை டமாஸ்கஸ் காவல்துறையில் உயர் பதவியில் அமர்த்தினார். அவர் டமாஸ்கஸ் நகரில் திருட்டு மற்றும் பிற குற்றவாளிகளை களையெடுத்து நகரில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் பலப்படுத்தி மக்கள் இவரின் நிர்வாகத்தில் அமைதியாக வாழ வழிப்படுத்தினார்.
இவரின் வாழ்க்கையில் முக்கியமான கால கட்டம் எகிப்தில் இவர் வெளிப்படுத்திய இராணுவ அநுபவமும், வீரமும் தான். இவரின் பெரும் முன்னேற்றம் இருபதில் இருந்து நாற்பது வயதுக்குள் ஏற்பட்டது. இவரின் இஸ்லாமிய நம்பிக்கை, போர்த்திறமை, நிர்வாகத்திறமை, தீர்க்கமான முடிவுகள், அமைதியான குணம் போன்றவை அரசர்களையும், இளவரசர்களையும் கவர்ந்து கொண்டது. அவர்கள் ஸலாவுத்தீனுடன் நெருங்கி இருப்பதை விரும்பி னார்கள். அதுவே பின்னாளில் சரித்திரத்தை மாற்றி எழுதி யது.