புதன், 13 மே, 2015

விதைத்தவர்கள் 3

  பவியாவில் சிவில் சட்டம் பயின்ற பிறகு, லான்ஃப்ரான்க் நார்மண்டிக்கு சென்று 1039 C.E. ல் அவ்ரன்செஸ் பகுதியில் பள்ளி ஒன்றைத் துவங்கினார். அங்கு அவர் 1042 C.E. வரை பயிற்றுவித்து விட்டு ரோவனுக்கு அருகில் பெனடிக்ட் எனப்படும் சந்நியாசிகள் மடத்திற்குள் நுழைந்தார். 1045 C.E. ல் லான் ஃப்ரான்க் அங்கு மடாதிபதி ஆனார். அங்கும் ஒரு பள்ளியை நிறுவி ஐரோப்பா முழுவதும் புகழ் பெறச்செய் தார். லான்ஃப்ரான்க் பெக் என்ற இடத்திலிருந்த ஒரு மடத்தை ஐரோப்பாவின் புகழ்பெற்ற சந்நியாசிகள் வசிக்கும் மடமாக ஆக்கினார். பெக் மடத்திலிருந்து பெரும்பாலும் தத்துவவாதிகளே தயாராகினர். சில குறிப்பிட்ட நபர்களையும் தயார்படுத்தினார். ஒருவர் போப் ஸ்தானத்திற்கும், மற்ற மூவர் 1066 C.E. ல் நார்மன் போருக்குப் பின் முண்ணனி தேவாலய நிர்வாகிகளாகவும் ஆனார்கள். இங்கு பயிற்சி பெற்று புகழடைந்த மேலும் சிலராவது :
•    லான்ஃப்ரான்க் – நார்மண்டியின் வில்லியம் பிரபுவின் ஆலோசகர். நார்மன்களின் இங்கிலாந்து போருக்கு பிறகு, கேண்டர்பரியின் முதல் நார்மன் ஆர்ச் பிஷப் ஆவர். ஐரோப்பாவின் சிறந்த அறிவாளியாகச் செயல்பட்டார்.
•    லூக்காவின் ஆன்ஸெல்ம் – இவர் பின்னாளில் இரண்டாம் போப் அலெக்ஸாண்டர் ஆனார். இவரே ஸ்பெயின் கிறிஸ்தவர்களை முஸ்லீம்களுக்கு எதிராக போர் செய்ய அனுமதி அளித்தார். வட ஐரோப்பாவின் இளவரசர்களை ஐபீரிய தீபகற்பத்தின் மீது சிலுவைப் போர் செய்ய உத்தரவிட்டார். ஹுயூகோ கேண்டிடுஸ் என்னும் சட்ட வல்லுனரை அனுப்பி ஸ்பெயின் கிறிஸ்துவர்களின் வழக்கத்திலிருந்த இஸ்லாமிய சட்டங்களை விட்டொழிக்கச் செய்தார். மேலும், நார்மண்டியின் வில்லியம் பிரபுக்கு ஞானஸ்நானம் செய்து இங்கிலாந்துக்குள் அத்துமீறச் செய்தார்.
•    அவோஸ்டாவின் ஆன்ஸெல்ம் – அவர் காலத்தில் தீவிர மதவாதியும், தத்துவவாதியும், திறமையும் கொண்டவர். 1089 C.E. க்குப் பிறகு, கேண்டர்பரியின் ஆர்ச் பிஷப் ஆனார்.
•    (G)காண்டுல்ஃப் – பின்னாளில் ரோகெஸ்டரின் பிஷப்பாகி தேவாலயத்தைச் சேர்ந்த போர் வீரன் ஆவான். திறமைவாய்ந்த கட்டிடக்கலை நிபுணன், இவனே புராதனப் புகழ்பெற்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய லண்டன் டவரை வடிவமைத்தவன். இராணுவ கட்டமைப்பையும் அமைக்கும் ஆற்றலுள்ளவன்.
                                 பெக் பகுதியின் லான்ஃப்ரான்க் எப்போது நார்மண்டியின் வில்லியம் பிரபுவை சந்தித்தாரோ, அப்போதே ஒருவரை ஒருவர் கவர்ந்து கொண்டனர். இருவருக்குள்ளும் இருவருக்குமே சாதகமான இணைபிரியாத நட்பு உருவானது. வில்லியம் பிரபு லான்ஃப்ரான்க்குடன் மட்டுமே ஆழமான நட்பை வைத்திருந்தான். வில்லியம் இவரைத் தனது தந்தையின் ஸ்தானத்தில் வைத்து, ஆசிரியருக்குண்டான மரியாதையைத் தந்து, தனது சகோதரன், மகனைப் போல் பாவித்துப் பழகினான். கல்வி அறிவில்லாத வில்லியம் பிரபுக்கு லான்ஃப்ரான்க் நிர்வாகத்திலும், முன்னேற்றத்திலும், அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சக்தியாக இருந்தார். வில்லியம் பிரபு சார்பாக பதவிகளை நியமிக்கும் அளவுக்கு அந்தஸ்தைப் பெற்றிருந்தார். உதாரணத்திற்கு வில்லியம் பிரபுவின் ஒன்று விட்ட சகோதரன் (தாய் ஒன்று தந்தை வேறு) ஓடோவை 1049 C.E. ல் பயோவுக்ஸின் பிஷப்பாக ஆக்கினார். வில்லியம் பிரபுவின் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய நபராக விளங்கினார்.
                          பத்தொன்பதாம் வயதில் ஓடோ பிஷப்பாக பதவியேற்றான். இவனுடைய பதவி வெளிப்படையாக சொந்தக்காரர்களுக்கு காட்டப்படும் சலுகையாகவே இருந்தது. ‘ஃபார் எக்சலன்ஸ்’ பட்டம் பெற்ற ஒரே பிஷப் போர்வீரன் இவன் தான். வில்லியம் பிரபுவின் நம்பிக்கையான ஒழுங்கீனமற்ற நிழல் அரசியல்வாதியாக ஓடோ இருந்தான். வில்லியம் பிரபு இங்கிலாந்துக்குள் பிரவேசிக்க 100 கப்பல்களைக் கொடுத்தான். ஓடோ 1082 C.E. ல் போப் ஆகும் ஆசையில் ஒரு இராணுவத்தை ரோமிற்கு அனுப்பினான். எதிர்பாராத விதமாக 1097 C.E. ல் முதல் சிலுவைப் போரில் பாலர்மோ என்ற இடத்தில் முஸ்லீம் படையினரால் கொல்லப்பட்டான். 1066 C.E. ல் குளிர்கால அக்டோபரின் காலைவேளையில் பிரிட்டிஷ் தீவுகள் கொடுமைக்கார நார்மன்களால் ஐரோப்பிய கூட்டமைப்புக்குள் இழுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஐரோப்பா முழுவதும் ரோமின் கொடுங்கோல் போப்களின் ஆட்சிக்குட் பட்டு இருந்தது. அவர்கள் ஐரோப்பிய கிறிஸ்துவர்களை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக சிலுவைப் போருக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
                                   வாழ்ந்த காலத்தில் (GUILLIAME) ‘வில்லியம் தி பாஸ்டர்ட்’   (WILLIAM THE BASTARD பிறப்பு 1028 C.E. இறப்பு 1087 C.E.) என்று சரித்திரத்தில் பெயர் பெற்றான். தோல் பதனிடும் ஒருவனின் மகளின் மகனாக வில்லியம் பிறந்தான். இவன் மட்டுமே முதன் முதலில் சட்டத்திற்கு புறம்பாக பிறந்த நார்மண்டியின் பிரபு அல்ல, இருந்தாலும் இவனது கீழ்தரமான செயல்பாடுகளால் அந்த ‘பாஸ்டர்ட்’ என்னும் அடைமொழி சரித்திரத்தில் இவனுக்கு ஒட்டிக்கொண்டது. மன்னர்கள் சரித்திரத்தில் இவனது மரணமும், உடல் அடக்கமும் மிகவும் பரிதாபமானது. ஐரோப்பாவின் உயர்குடியில் இருந்து வந்தவர்களுக்கு சட்டத்திற்கு புறம்பான பிறப்பு ஒரு சாதாரண விஷயம். உதாரணத்திற்கு, ரோவனின் ஆர்ச்பிஷப் ராபர்டுக்கு வேலைக்காரி மூலம் பிறந்த மூன்று பிள்ளைகள் இருந்தனர். மேலும், பெரும்பான்மையான நார்மன் பிரபுக்கள் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்களாகவும், பிஷப்புகள் தூய்மையற்றவர்களாகவும், தெய்வீகத் தன்மையற்றவர்களாகவுமே இருந்தார்கள். ‘தி டெவில்’ என்று அழைக்கப்பட்ட வில்லியமின் தந்தை முதலாம் ராபர்ட் என்னும் நார்மண்டியின் பிரபு திருமணமாகதவனும் (அப்படியென்றால் வில்லியமின் பிறப்பு?), தனது தீவிரவாத செயலாலும், முரட்டுத்தனத்தாலும் பெயர் பெற்றவன். தந்தை ராபர்ட் ஜெருசலத்திலிருந்து புனிதப் பயணம் சென்று திரும்பும் வழியில் அனடோலியா என்ற இடத்தில் இறந்துவிட்ட காரணத்தால், வில்லியம் நார்மண்டியின் பிரபுவாக எட்டாவது வயதில் பதவிக்கு வந்தான். இவனின் மாமனான ரோவனின் ஆர்ச்பிஷப் இன்னொரு ராபர்ட் என்பவனின் பலமான ஆதரவாலும், பாதுகாப்பாலும் அதிகாரத்திற்கு வந்தான். இவனின் வாழ்நாள் பெரும்பாலும் தீவிரவாதத்திலும், போர்களிலுமே கழிந்தது. ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த இராணுவ அமைப்பை உருவாக்கினான். அதிகமான தேவாலயங்களையும், மடங்களையும் உண்டாக்கினான். இவனின் இரண்டாவது மகள் அடிலிஸா கன்னியாஸ்திரியாகவும், மூன்றாவது மகள் செஸிலி கேயெனின் ஹோலி ட்ரினிட்டியில் கன்னியாஸ்திரிகளின் தலைவியாகவும், மற்றொரு மகள் அடிலா 1080 C.E. ல் ப்ளோயிசின் கவுண்ட் ஸ்டீபனின் மனைவியாகவும் ஆனார். அடிலா முதல் சிலுவைப் போரில் தனது கணவரை உற்சாகமாக பங்கேற்க அனுப்பியதில் புகழ்பெற்றாள். 1098 C.E. யில் மோசூலின் எமிருக்கு பயந்து ஆண்டியாக்கிலிருந்து சில ஃப்ரென்ச் வீரர்களுடன் கணவர் ஸ்டீபன் தப்பி ஓடிவிட்டான். இவனது கெட்ட நேரம் சிலுவைப் போராளிகள் ஆண்டியாக்கை வென்று விட்டனர். வில்லியம் அன்பில்லாதவனாகவும், முரட்டுத்தனமானவனாகவும், உணர்ச்சிவசப்படுபவனாகவும் இருப்பது சரித்திரத்தில் இரு வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1066 C.E. ல் வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் முடி சூட்டுவிழாவில் நடுக்கமுடன் வெறிகொண்டு கத்தினான். மரணப்படுக்கையில் பயத்தில் கதறி அழுதான்.
                                   முதலில் 1066 C.E. ல் நார்மன்களின் இங்கிலாந்தின் மீதான வெற்றி ஏதோ எதிர்பாராதது போல் தோன்றி இருக்கலாம் அல்லது, ஆங்கில ஆட்சிக்கு ஆசைப்பட்டு போரிட்டிருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால், உண்மையில் தேவ ஆசியுடன் ஒரு கிறிஸ்தவ தேசம் இன்னோரு கிறிஸ்தவ தேசத்தின் வளத்திற்காக ஆசைப்பட்டு மட்டுமே போரிட்டது. இங்கிலாந்தின் வாரிசில்லாத வயதான மன்னர் எட்வர்ட் (1042 C.E. – 1066 C.E.) அவரின் மைத்துனர் ஏர்ல் ஹரால்டை தனது மரணத்தின் போது (வெஸ்ஸெக்சின் ஏர்ல்) தனக்குப் பிறகு வாரிசாக்கினார். அப்போதைய பயேவுக்ஸ் டேபெஸ்ட்ரி கருத்தெதுவும் தெரிவிக்காமல் அமைதியாக ஏற்றுக்கொண்டது. ஏர்ல் ஹரால்டின் தேர்வை ஆங்கிலோ ஸாக்சன் கவுன்சிலின் தலைவர் வைடன் ஒப்புக்கொண்டார். எட்வர்டின் நெருங்கிய உறவுக்காரரான நார்மண்டியின் வில்லியம் பிரபு, ஏர்ல் ஹரால்ட் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர் என்று எதிர்ப்பு தெரிவித்தான். வாடிகனும் ஏர்ல் ஹரால்ட் ரோமுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகளை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியது. ஹரால்ட் மன்னரால் மட்டுமே அறிவிக்கப்பட்ட வாரிசு என்றும், இனி உலக அரங்கில் இங்கிலாந்து கிறிஸ்தவ சகோதரத்துவ நாடாக அங்கீகரிக்கப் பட்டு, ஹரால்ட் ஒரு மத நம்பிக்கை அற்றவர் என்று குற்றம் சாட்டி காட்டுமிராண்டித்தனமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஹரால்டின் மீதான குற்றங்கள் நியாயமற்றது என்று கூறிய கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாவம் சக்திவாய்ந்த மதவாதிகளின் குற்றச்சாட்டிலிருந்து ஹரால்டால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. வில்லியம் பிரபுவின் ஆலோசகர் லான்ஃப்ரான்க் ரோமிற்கு சென்று இங்கிலாந்தைக் கைப்பற்ற மதவாதிகளின் ஆதரவைத் திரட்டினார். இரண்டாம் போப் அலெக்ஸாண்டர் மற்றும் கார்டினல் ஹில்டிப்ராண்ட் (ஆர்ச்டெக்கான்) ஆகியோர் வில்லியமுக்கு இங்கி லாந்தைக் கைப்பற்றி அதற்கு மன்னராகவும் பதவியேற்றுக் கொண்டு ரோமின் தலைமைக்கு கீழ் இயங்க ஆசீர்வதித்தனர். அதே போன்று மதவாதிகளின் ஊக்குவிப்பாலும், ஆசீர்வாதத்தாலும், மத அடிப்படையினாலான மறைமுக சிலுவைப் போருக்கு அனுமதியும் வழங்கப் பட்டது. சிலுவைப் போருக்கு வில்லியம் பிரபுவுடன் எல்லா ஐரோப்பிய மாநில தலைமைகளும் ஒத்துழைக்க வேண்டுமென்று பெக் அப்பேயிலிருந்து மத ஆசீர்வாத நகல் அனுப்பப்பட்டது. இங்கிலாந்தின் அபரிதமான வெள்ளி மற்றும் வளம் வட ஃப்ரான்ஸின் நார்மன் வீரர்களை வெகுவாக கவர்ந்தது.
                                     கார்டினல் ஹில்டெர்ப்ராண்ட், வில்லியம் பிரபுக்கு போருக்கான மதக்கொடியை வழங்கினார். ஹில்டெர்ப்ராண்ட் கூலிக்காக போரிடும் நார்மன்களுக்கு தற்காலிக அதிகாரத்தை இத்தாலிக்கும், அது மட்டுமில்லாமல் ஆல்ப்ஸ் மலை எல்லைவரை வழங்கினார். ஹில்டெர் ப்ராண்ட் ரோமில் கத்தோலிக்கத்தை தழுவிய யூத குடும்பமான பியர்லியோனி சமூகத்துடன் தொடர்பு வைத்திருந்தார். ஹில்டெர்ப்ராண்ட் தானும் யூத தொடர்புள்ள வழியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த தொடர்பு ஏதோ ஒரு காரணமாகத்தான் இருந்தது என்ற நம்பிக்கை இருந்தது. க்ளூனியில் இவர் துறவியாக இருந்தபோது பலமான மதத்தொடர்பான காரணங்கள் இருந்தன. இவர் போப்களை நியமிப்பதில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். ஒன்பதாம் போப் லியோவுடன் இத்தாலிக்கு வந்தார். போப்களை நியமிப்பதில் உண்மையான அதிகாரம் பெற்று இவரின் கீழ் ஐந்து போப்களை பதவியில் அமர்த்தினார். போப் இரண்டாம் நிகோலஸ் இவரால் அமர்த்தப்பட்டவர் தான். ஹில்டெர்ப்ராண்ட் ஒரு மந்திரவாதியாக கருதப்பட்டு (SHAKING LIGHTENING OUT OF HIS SLEAVE) ‘ஷேகிங்க் லைட்டெனிங்க் அவுட் ஆஃப் ஹிஸ் ஸ்லீவ்’ என்று அழைக்கப் பெற்றார். இவர் போப் (ஏழாம் போப் கிர்கோரி 1073 C.E.-1085 C.E.) ஆக நியமனம் பெற்ற பிறகு, போப்களும், தேவாலயங்களும் எப்படி ஐரோப்பாவில் இயங்க வேண்டும் என்று ‘டிக்டேசஸ் பாபாயே’ என்ற அறிக்கையை வெளியிட்டார். அதில், ரோமன் தேவாலயங்கள் நேரடியாக கடவுளால் அமைக்கப்பட்டதென்றும், இளவரசர்கள் போப்பின் கால்களை முத்தமிட வேண்டுமென்றும், ரோம் தேவாலயங்கள் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று புனித நூலில் உள்ளதாக பொய்களையும், நகைப்புக்குரிய விஷயங்களையும் தெரிவித்திருந்தார். 1077 C.E. ல் ஐரோப்பாவில் வாடிகனின் அதிகாரத்திலிருந்து தனியாக மதக்கூடங்களை அமைக்க இருந்த ஜெர்மனியின் நான்காம் ஹென்றியை ஜெர்மனின் எதிர்பாளர்களைத் திரட்டி போப்பின் கால்களை முத்தமிட வைத்தார். இது ஜெர்மனியில் உள்நாட்டுப் போரையும், அரசியல் அமைப்பை தாமதப்படுத்துவதாகவும் இருந்தது. ஒரு போப்பாக தனக்கு இங்கிலாந்தின் மன்னனாக வில்லியம் பிரபு நம்பிக்கையாக இருப்பார் என்று ஹில்டெர் ப்ராண்ட் கருதினார். ஹில்டெர்ப்ராண்ட் வாடிகனின் மத பீரங்கியாகவே மதிக்கப்பட்டார். இவருக்குப் பிறகு, இரண்டாம் போப் அர்பன் நியமனம் பெற்றார்.
                               1066 C.E. ல் ஹாஸ்டிங்க்ஸ் போரில் (ஸசக்ஸ்) ஆங்கிலோ ஸாக்சனின் மன்னன் இரண்டாம் ஹரால்டை கோடன்சஸ், பயேவுக்ஸ் பிஷப்புகளுடன் சேர்ந்து வில்லியம் பிரபு தோற்கடித்தான். இது ஹரால்டின் ஒரு ஆச்சரியமான தோல்வியாகவே எண்ணப்பட்டது. நார்மண்டிகள் வட ஃப்ரான்சின் ஒரத்தில் உள்ள சிறிய ஆளுமைக்குள்ள பிரபுக்கள். பிரிட்டன் ஐரோப்பாவின் பழமையான மன்னர் பிரதேசம். இங்கிலாந்தின் வளமையும், இராணுவ அமைப்பும் நார்மண்டிகளை விட புகழ் பெற்றது. ஹாஸ்டிங்க்ஸ் போரில் ஹரால்ட் கண்களில் தாக்கப்பட்டதாக பயேவுக்ஸின் திரை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. இந்த திரை ஓவியத்தை நீங்கள் பல ஆங்கில விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். நான்கு நார்மன்கள் சேர்ந்து தாக்கியதாகவும், ஒருவன் ஹரால்டின் மார்பிலும், ஒருவன் தலையிலும், ஒருவன் கால்களை வெட்டியும், மற்றொருவன் கீழே தள்ளியும் தாக்கி அனைவரும் அவனின் உடலை நிர்வாணமாக்கி சின்னாபின்னா படுத்தியதாக அந்த திரை ஓவியங்கள் தெரி விக்கின்றன. அவனின் உடலை பணிப்பெண் அடையாளம் காட்டியதாகவும், அவனின் இரு சகோதரர்கள் ஏர்ல்ஸ் லியோஃப்வைன், கிர்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஹரால்ட் கொல்லப்பட்ட இடத்தில் 1070 C.E. ல் போப் மற்றும் வில்லியம் பிரபுவின் ஏற்பாட்டில் நினைவுக் கல்வெட்டு வைக்கப்பட்டு அப்பே (ஆசிரமம்) ஒன்று கட்டப் பட்டது. தேசத்தின் பாவங்களைப் போக்க ஃப்ரென்சுக்களுக்கு கடவுள் வெட்டப்பட்ட இடத்தை நினைவிடமாக்கினான் என்றும், கடவுள்  அவர்கள் பக்கம் இருந்து ஆசீர்வதிப்பதாக நம்பினார்கள். பயேவுக்ஸின் திரை ஓவியத்தின் படி ஃப்ரென்ச்சின் வில்லியம் பிரபுவின் இங்கிலாந்தின் மீதான போர் மதவாதிகளின் ஆசிபெற்று மதக்கொடியை ஏந்தி நடத்திய புனிதப் போராகவே கருதப்படுகிறது.
                         1066 C.E. கிறிஸ்துமஸ் தினத்தில் வொர்செஸ்டரின் பிஷப் மற்றும் யோர்கின் ஆர்ச்பிஷப்பின் மூலம் புனித எண்ணெய் தடவப்பட்டு வில்லியம் பிரபு வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயின் இங்கிலாந்து மன்னராக முடி சூட்டிக்கொண்டான். இதன் பிறகு, வெஸ்ட் மினிஸ்டர் அப்பே இங்கிலாந்தின் எல்லா மன்னர்களுக்கும், ராணிகளுக்கும் முடி சூட்டும் வழக்கத்தை மேற்கொண்டது. நார்மன் அறிவுஜீவிகளால் மன்னர் அதிகாரமென்பது நேரடியாக கடவுளிடமிருந்து வருவதாக இங்கிலாந்துக்கு போதிக்கப்பட்டது. தற்போது கெண்டின் ஏர்லாக முடிசூட்டிக்கொண்ட ஓடோ (இவர் முன்னாள் பயேவுக்ஸின் பிஷப்பாகவும் இருந்த வில்லியம் பிரபுவின் ஒன்றுவிட்ட சகோதரர்) புகழ்பெற்ற பயேவுக்ஸின் திரை ஓவியத்தை ஹாஸ்டிங்க் போரின் வெற்றியின் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். அந்த ஓவியத்தின் இரு காட்சிகள் நிர்வாணமாகவும், துன்மார்க்கமாகவும் இருந்தன. ஓடோ ராஜகோல் கொண்டு ஸாக்சனின் எதிரிகளை அறிவில்லாமல் முரட்டுத்தனமாக தாக்குவது போல் இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்தின் 15 அல்லது 20 லட்சம் மக்கள் தொகையுடன் 10,000 நார்மன்கள் அரண்மனைகளில் இராணுவத்தினரைப் போல் பாதுகாப்பாக வாழ்ந்தனர். அந்த அரண்மனைகளை யூதர்கள் பணம் கொடுத்து கட்டிக்கொடுத்தனர். மேலும் நார்மன்கள் வார்விக், நாட்டிங்காம், லின்கன், கேம்பிரிட்ஜ், ஹண்டிங்டன், எக்ஸிடெர், கோல்செஸ்டர், டோவர், வின்செஸ்டர் போன்ற பல இடங்க ளில் அரண்மனைகளைக் கட்டி இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியலையும், இராணுவ பலத்தையும் கவனித்துக் கொண்டனர். 1100 C.E. ல் ஏறக்குறைய 500 அரண்மனைகளை இங்கிலாந்திலும், வேல்ஸிலும் கட்டியிருந்தனர். கணக்குப்படி இங்கிலாந்தில் ஏறக்குறைய ஆயிரம் அரண்மனைகளும், வேல்ஸில் முன்னூறு அரண்மனைகளும் இருக்கும் என்று கருதப்படுகிறது. நார்மன் (MOTTES) மோட்டீஸ்களும், (BAILEYS) பைலீஸ்களும் ஐயர்லாண்டில் டிப்பேரரி போன்ற வளமான நிலப்பரப்புகளை     நிர்வகித்துக் கொண்டு அங்கேயே இருந்தனர்.
                                             அரண்மனைகளில் புகழ்பெற்றது லண்டன் டவர் என்று அழைக்கப்படும் நான்கடுக்கு உயரம் கொண்ட அரண்மனையே. இதைக்கட்ட இருபது ஆண்டுகள் ஆயின. இதனுள் கோட்டை, ராஜவம்சத்தினர் தங்கும் வசதி, சிறைச்சாலை, தூக்கிலிடப்படும் இடம், இராணுவத் தளவாடங்கள் பாதுகாக்கும் இடம் போன்றவையும், நவீன காலத்தில் ஆசியா, ஆப்பிரிக்காவில் கொள்ளையிடப்பட்ட தங்க, வைர செல்வங்களை பாதுகாக்கும் இடமும் உள்ளன. பெரும்பான்மையான ஆங்கிலேயர்களுக்கு லண்டன் டவர் துக்கமான விஷயமாகவே இருக்கும். ரோசெஸ்டரின் பிஷப்பாக இருந்த (G)கண்டுல்ஃப் என்பவரால் இராணுவ கட்டிட அமைப்பில் கோட்டை போன்ற வடிவத்தில் கட்டப்பட்டது. நார்மன்கள் ஸ்காட்லாண்டை சண்டையிட வடகிழக்கிலும் அரண்மனைகளைக் கட்டினர். நியூ கேசல் என்ற இடத்திலும் நிறைய அரண்மனைகளைக் கட்டினர். மேலும் நார்மன்கள் எண்ணற்ற தேவாலயங்களையும், மடங்களையும் கட்டினர். அதில் ஈடுஇணையற்ற பீட்டர்பர்க், டுர்ஹாம் போன்றவையும் அடங்கும். டுர்ஹாம், ஏலி போன்ற மடங்கள் ஏகாதிபத்தியத்தின் அடையாளங்களை செய்தியாக சொல்வது போலவே இருந்தன. இந்த அரண்மனைகள், தேவாலயங்கள், மடங்கள் குறிப்பிட்ட தனி காலனிகளுக்குள்ளேயே அமைக்கப்பட்டன. வில்லியம் பிரபுவின் போர்கள் ஆக்ரோஷமாகவும், வெறித்தனமாகவும் இருந்து எதிரிகளை அச்சமூட்டின. ஆங்கிலேயர்கள் அவர்களின் சொந்த நாட்டிலேயே நசுக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். நிறைய கற்பழிப்புகளும், அதிகமான கொள்ளைகளும் நடந்தன. புதிய ஆட்சியாளர் பெருமை பொங்க இருந்து கொண்டு ஆங்கிலேயர்களின் நியாமான புகார்களை கூட நிராகரித்தனர். ஓடோ கொடுமையான முறையில் நார்மனின் ஆளுமையில் அகதிகளாகிப் போன ஆங்கிலேயர்களுக்கு இராணுவத் தண்டனைகளை வழங்கினான். அவர்களின் சொத்துக்களையும் கொள்ளை அடித்துக் கொண்டான்.
                                எண்ணற்ற விலை மதிப்பில்லாத செல்வங்கள் கொள்ளை அடித்து நார்மண்டிக்கு கொண்டு செல்லப்பட்டன. நார்மண்டியின் தேவாலயம் கொள்ளையடித்த செல்வத்தால் புதுப்பிக்கப்பட்டது. கேயனில் இரண்டு மடங்கள் பெரிதாக கட்டப்பட்டு, பயேவுக்ஸின் தேவாலயமும் விரிவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் நாணயங்கள் உருக்கப்பட்டு, மீண்டும் நார்மண்டியில் வடிவமைக்கப்பட்டன. அரசியல் ஆதாயத்திற்காக விவசாயம் நூறாண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டது. நார்மன்களின் அதிகாரம் ஆங்கிலேயர்களை வெல்ல மட்டுமல்ல, எதிர்ப்பவர்களை கடுமையான முறையில் அடக்கவும் செய்தது. 1069 C.E. – 1070 C.E. ல் வடக்கிலும், மிட்லேண்டிலும் நார்மன்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் கலகம் செய்தனர். சார்லிமாக்னே காலத்தில் ஹாரியிங்க் (HARRYING) துணையுடன் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டும், அதிகமானவர்களை அகதிகளாக வெளியேற்றியும், நெடுஞ்சாலைகளில் பிணங்களை எரித்தும், கொள்ளையடித்தும், பெரும் கொடுமைகளும், ஈடுசெய்ய முடியாத இழப்புகளும் கலக காலத்தில் நிகழ்ந்தன. (HARRYING OF THE NORTH) வடக்கில் ஹாரி என்று அறியப்பட்ட காலத்தில் வடக்கிலும், மிட்லேண்டிலும் மிகப்பெரிய நிலப்பரப்புகள் நாசம் செய்யப்பட்டன. அந்த பகுதிகளில் விவசாய நிலங்கள் மூன்றில் இரண்டு மடங்கு வெட்டி வீழ்த்தப்பட்டும், தீயிட்டும் கொளுத்தி நாசப்படுத்தப்பட்டன. வில்லியம் பிரபுவின் வீரர்கள் யோர்க்குக்கும், டுர்ஹாமுக்கும் இடையில் ஒவ்வொரு ஊரையும் நாசப்படுத்தி கண்ணில்படும் மனிதர் களை எல்லாம் வெட்டிக் கொன்றனர். ஆங்கிலேயர்களின் புராதன பிரபுக்களின் இடமான மெர்ஷியா போன்ற நகரங்களை எந்த காலத்திலும் தலையெடுக்காத வண்ணம் அடையாளமில்லாமல் அழித்தனர். இந்த அழிவுகள் சரித்திர ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நார்மன்கள் அளவிடமுடியாத நிலப்பரப்புகளை பஞ்சத்திற்கு உட்படுத்தினர். மக்களை குதிரை, நாய், பூனை மேலும் மனிதர்களையே உண்ணும் அவல நிலைக்குத் தள்ளினர். இந்த கொடுமைகளிலிருந்து இங்கிலாந்தின் ஆங்கிலேயர்கள் டென்மார்க், ஸ்காட்லாண்ட் குறிப்பாக க்ரீஸ் மற்றும் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்துக்கும் குடிபெயர்ந்தனர். கான்ஸ்டாண்டிநோபிளில் நல்ல பணிகளில் அமர்ந்து உயர்வு பெற்றனர். சில ஆங்கிலேயர்கள் தங்களையே அடிமைகளாக விற்றுக் கொண்டனர். 1102 C.E. ல் லண்டன் கவுன்சிலில் ஆர்ச்பிஷப் ஆன்செல்ம் ஆங்கிலேயர்களை மிருகங்களைப் போல் விற்பதை கண்டனம் செய்தார். பிஷப் வுல்ஃப்ஸ்டனும் தனது தேவாலய போதனையில் ஆங்கிலேய அடிமைகளை பிரிஸ்டாலிலிருந்து ஐயர்லாந்துக்கு விற்பனை செய்வதை எதிர்த்தார். ஆனாலும் தேவாலயங்கள் அடிமை விற்பனை செய்வதில் முதலாளிகளாகவே இருந்தன.
                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக