புதன், 8 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 16

நூர் உத் தீன் முஹம்மது ஜஹாங்கீர்
கூ.செ.செய்யது முஹமது
1605 அக்டோபர் மாதம் 10 ந் தேதி அக்பர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின், சலீம் என்று அழைக்கப்பட்ட நூர் உத் தீன் முஹம்மது ஜஹாங்கீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சிக்கு வரும் போது ஜஹாங்கீருக்கு முப்பத்தி எட்டு வயது. ஜஹாங்கீர் பாதுஷா என்றும் அழைக்கப்பட்டார். தான் வெளியிட்ட நாணயத்தில் பேரரசர் அக்பரின் மகனும், உலகப் பாதுகாவலருமான ஜஹாங்கீர் என்று பொறித்துக் கொண்டார். ஆட்சிக்கு வரும் போது 150 கோடி ரூபாயும், 4,000 கிலோ தங்கமும் அரசு பொக்கிஷத்திலிருந்ததாகவும், தனது கிரீடம் ஒரே வடிவம் கொண்ட பனிரெண்டு அமைப்புகளில் பெரிய வைரமும், நடுவில் நான்கு முத்துக்களும் பதிக்கப்பட்டு அன்றைய மதிப்பில் ஒரு கோடியே எட்டு லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்பில் இருந்ததாகவும் தனது சுயசரிதையில் சொல்லி இருக்கிறார். ஜஹாங்கீரின் பதவியேற்பு நாற்பது நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டது. மது மற்றும் ஓப்பியம் பழக்கத்திற்கு அடிமையாய் இருந்து ஆடம்பரமாக வாழ்ந்தாலும், கல்வியறிவாலும், புத்திசாலித்தனத்தாலும் மொகலாயப் பேரரசின் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இருபது கோப்பைக்கு மேல் மது குடித்த இவர் பின் ஐந்து கோப்பைகளாகக் குறைத்துக் கொண்டார். தான் பிறந்த மாதத்தில் நாட்டில் இறைச்சியையும், கால்நடைகளை அறுப்பதையும் தடை செய்தார். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்தார். பயத்திலிருந்த தந்தையின் நெருங்கிய நண்பர்களுக்கும், நம்பிக்கையான அதிகாரிகளுக்கும் அவர்களின் பொறுப்புகளுக்கும் உத்திரவாதம் அளித்தார். ஹிந்துக்களிடமும் நம்பிக்கை பெற்று, இளவரசர் குஸ்ருவுக்கு ஆதரவளித்த ராஜா மான் சிங் போன்றோரை மன்னித்தார். பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1606 மார்ச்சில் முதல் நௌரோஸ் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடச் செய்தார்.
  1605 ல் சில தலைவர்கள், ராஜா ராம் தாஸ், முர்தஸா கான், சைய்யத் கான், கூலிச் முஹமது மற்றும் மிர்சா அஜீஸ் கோகா ஆகியோர் ராஜா மான் சிங் தலைமையில் ஜஹாங்கீரின் மகன் குஸ்ருவை பதவிக்கு கொண்டுவர திட்டமிட்டார்கள். அக்பரின் மரணத்தின் போது சற்று ஒத்துப்போன தந்தை ஜஹாங்கீர் மற்றும் மகன் குஸ்ரு உறவு அதன் பின் பாசமற்றுப் போனது. ஆக்ராவிலிருந்து தப்பித்துப் போன குஸ்ரு 350 குதிரை வீரர்களுடன் லாகூருக்கு சென்றார். வழியில் மதுராவின் ஆட்சியாளர் ஹுசெய்ன் பேக் பதக் ஷானின் உதவியுடன் மேலும் மூவாயிரம் குதிரை வீரர்களை சேர்த்துக் கொண்டு, லாகூரின் திவான் அப்துர் ரஹாமனின் உதவி, குரு அர்ஜன் (க்ரன்த் சாஹிப் எழுதிய ஆசிரியர்) உதவி ஆகியவற்றுடன் லாகூர் சென்றார். லாகூரின் கவர்னர் திலாவர் கான் நகரின் கதவுகளை அடைத்து குஸ்ருவை தடுத்தார். குஸ்ரு எதிர்தாக்குதல் நடத்தி நகரின் ஒரு கதவை தீயிட்டுக் கொளுத்தினார். குஸ்ரு ஒரு வாரமாக தாக்குதல் நடத்தினார். தந்தை ஜஹாங்கீர் தன்னை நோக்கி வருவதை அறிந்த குஸ்ரு வடமேற்காக ஓடினார். ஜஹாங்கீர் குஸ்ருவை தீவிரமாக எதிர்த்தார். ஜஹாங்கீரின் கோபத்தைக் கண்டு, உஸ்பெக்குகளும், பெர்ஷியர்களும் பயந்தனர். ஜஹாங்கீருக்கும், குஸ்ருவுக்கும் இடையே முயற்சித்த சமாதானங்கள் தோல்வியில் முடிய, பைரோவால் என்ற இடத்தில் மோதிக் கொண்டனர். இறுதியில் குஸ்ரு தப்பித்து ஓடினார். குஸ்ருவின் நகைப் பெட்டகத்தையும், விலைமதிப்பில்லாத சில பொருட்களையும் ஜஹாங்கீர் கைப்பற்றினார். இடைவிடாத ஜஹாங்கீரின் படைகளையின் தேடுதலுக்குப் பிறகு, குஸ்ரு கைது செய்யப்பட்டு, பலமான சங்கிலியில் பிணைக்கப்பட்டு ஜாங்கீரின் முன் நிறுத்தப்பட்டார். குஸ்ருவின் கண்கள் பிடுங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். 
குரு அர்ஜன் சபைக்கு வரவழைக்கப்பட்டு, தன் மகளை மருமகளாக ஏற்க மறுத்த சந்து ஷா என்பவருக்கு இழைத்த அநீதிக்காக குரு அர்ஜனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இதனால் சீக்கியர்கள் ஜஹாங்கீருக்கு எதிராக இருந்தார்கள். அப்போதைய ஆசியாவின் சிறந்த மன்னராக இருந்த பெர்ஷியாவின் ஷா அப்பாஸ் என்பவர் 1595 ல் அக்பரால் வென்றெடுக்கப்பட்ட கந்தாரை கைப்பற்ற படையெடுத்தார். ஷா பேக் கானால் பலமாக எதிர்க்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டார். சுமுகமான ராஜதொடர்புகள் இருப்பது போல் இருந்து கந்தார் சற்று பாதுகாப்பு தளர்த்தப்பட்டவுடன், 1662 ல் திடீரென்று எதிர்ப்பின்றி ஷா அப்பாஸ் கந்தாரை கைப்பற்றிக் கொண்டார். தூரப்பிரதேசமாக இருந்த கந்தாரை மீண்டும் கைப்பற்ற ஜஹாங்கீர் தன் மகன் குர்ரமை படையுடன் செல்லச் சொன்னார். ஆனால், ஜஹாங்கீருக்கு அடுத்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக கருதிய குர்ரம் போரிடச் செல்ல மறுத்து விட்டார். இது தன் மருமகன் ஷஹ்ர்யாரை ஆட்சிக்கு கொண்டு வர எண்ணும் நூர்ஜஹானுக்கு சாதகமாக இருந்தது. அவர் கணவரிடத்திலே சமயம் பார்த்து குர்ரமின் ராஜதுரோகத்திற்கு தூபம் போட்டார். ஜஹாங்கீர் குர்ரம் வசமுள்ள படைகளை திரும்பப் பெற்று அவரை தலைநகர் திரும்பச் சொன்னார். இதற்கு மறுப்பு தெரிவித்த குர்ரமுக்கு எதிராக மீண்டும் ஜஹாங்கீரிடம் எதிர்கருத்துகளை சொல்லி குர்ரமை எதிரியாக்கினார் நூர்ஜஹான். நீண்டகாலமாக குர்ரமின் கனவாய் இருந்த தோல்பூரை நிர்வகிக்கும் ஆசையைத் தகர்த்து அதை ஷஹ்ர்யாருக்குப் பெற்றுத் தந்தார். நூர்ஜஹான் மேலும் ஷஹ்ர்யாரை முன்னேற்றும் வண்ணம் கணவரிடம் பரிந்துரைத்து மன்சாபாக (மன்சாப் என்பது இராணுவத்திலும், குடிமக்களிடத்திலும் உண்டான ஒரு தகுதி-RANK / ஐந்தாயிரம் மன்சாப்களுக்கு மேலுள்ளவர்கள் அமீர் அல் உமரா என்னும் உயர் தகுதிக்குண்டானவர்கள்) பனிரெண்டாயிரம் ஸாட்டுகளையும், எட்டாயிரம் சவார்களையும் (சவார் என்பது தனது கட்டுப்பாட்டுக்கு கீழுள்ள குதிரைப் படையின் எண்ணிக்கையின் தகுதி) பெற்றுத்தந்தார். மேலும் கந்தார் படைக்கு தலைமை ஏற்கும் பொறுப்பையும் ஷஹ்ர்யாருக்குப் பெற்றுத் தந்தார்.
இதனால் முற்றிலும் நிலைகுலைந்த இளவரசர் குர்ரம் தந்தையின் கோபம் தணிக்க ஜஹாங்கீரிடம் மன்னிப்பு கோர தயாரானார். ஆனால் நூர்ஜஹான் அதற்கு பெரும் இடையூறாக இருந்தார். குர்ரமுக்கு மன்னரை எதிர்த்து புரட்சி செய்வதை தவிர வேறு வழியில்லாமல் போனது. கந்தார் முற்றுகையும் தோல்வியில் முடிந்தது. ஹிந்துக்களின் புனித இடமாக இருந்த பஞ்சாபின் காங்க்ராவை வெல்ல ஜஹாங்கீர் முடிவு செய்தார். இதற்கு குர்ரம் தளபதியாக நியமிக்கப்பட்டார். காங்க்ராவைச் சுற்றியுள்ள மலைப்பகுதி தலைவர்களை வெற்றி கொண்டு பிரதான கோட்டையின் தொடர்புகளை மொகலாயப் படைகள் துண்டித்தார்கள். ஏறக்குறைய ஓராண்டுக்கு மேலாக நீடித்தது தாக்குதல்கள். காங்க்ராவின் கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு உணவுக்கு வேறு வழியில்லாமல் காய்ந்த புற்களை கொதிக்க வைத்து உண்டார்கள். வேறு வழியில்லாமல் 1620 நவம்பரில் காங்க்ரா ஜஹாங்கீரிடம் சரண்டைந்தது. அடுத்து ராஜபுத்திரர்களின் பெருமையான பகுதியான மேவாரின் மீது ஜாங்கீரின் கவனம் திரும்பியது. போற்றத்தக்க ராஜாவாக இருந்த ராணா பிரதாபின் மகன் அமர்சிங் உதைபூரில் ஆட்சியில் இருந்தார். அமர்சிங்கும் தந்தையைப் போல் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். மொகலாயர்களிடம் அடிபணிய மறுத்தார். ஜஹாங்கீர் தன் மகன் இளவரசர் பர்வேஸின் தலைமையில் தகுந்த போர்க்கருவிகளுடன் மேவாரின் மீது படையெடுக்கச் செய்தார். ராஜபுத்திரர்கள் கடுமையாக எதிர்த்தனர். இடையில் இரு படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரண்டாண்டுக்கு பிறகு மீண்டும் மேவாரின் மீது ஜஹாங்கீர் படை நடத்தினார். இம்முறை மொகலாயப் படைக்கு மஹபத் கான் தலைமை தாங்கினார். மஹபத் கான் ராஜபுத்திரர்களை வென்றபோதும் பொருளாதார ரீதியாக பலன் தரவில்லை. 1614 ல் இளவரசர் குர்ரம் தலைமையில் மீண்டும் மேவாரின் மீது புது உத்வேகத்துடன் படையெடுக்கப்பட்டது. திறமையான இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையின் படி ராஜபுத்திரர்களின் வெளியுலக உணவு மற்றும் தகவல் பரிமாற்றங்கள் தடுக்கப்பட்டது. இதனால் ராஜபுத்திரர்கள் சரணடைந்தனர். இதனால் சமாதானத்திற்கு ராஜபுத்திரர்கள் ஒப்புக் கொண்டனர். அதன் விளைவாக ராணா மொகலாயர்களின் கீழ் ஆட்சி செய்வதாக பணிந்து ராஜபுத்திரர்களின் இளவரசர் கரண் தலைநகருக்கு சென்று பேரரசரை சந்திக்க அனுப்பப்பட்டார். 
மேலும் ஆயிரம் குதிரைகளை மொகலாயர்களுக்கு அளிப்பதின் பேரில், சித்தூர் கோட்டை ராஜபுத்திரர்கள் வசமே இருக்கும் என்றும், ராணாவும், அவர் மகனும் ஐந்தாயிரம் குதிரைகளை நிர்வகிக்கும் பொறுப்பும் ஏற்பர் என்றும் முடிவானது. ஜஹாங்கீர் ராணாவின் வயதை கருதி மொகலாய அரண்மனை கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் தந்து நன்கு மரியாதை செய்தார். ராணா மற்றும் அவர் மகனின் ஆளுயர உருவங்களை சலவைக்கல்லில் குடைந்து ஆக்ராவின் தோட்டத்தின் (ஜரூகா) பார்வையாளர்கள் வரிசையில் வைத்து கௌரவம் செய்தார். மேவார் பல ஆண்டாக மொகலாயர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் ஜஹாங்கீர் கூடுமானவரை ராணாவிற்கு மரியாதை செய்ததாக ஒரு கருத்துண்டு. மேவாரின் வெற்றிக்குப் பிறகு முப்பதாயிரம் மன்சாபிற்கு மதிப்பளிக்கப்பட்டு, இளவரசர் குர்ரம் “ஷா குர்ரம்” என்று கௌரவமளிக்கப் பட்டார். அக்பர் அஹ்மத் நகர், பிரார் மற்றும் காந்தேஷ் ஆகியவற்றை வெற்றி கொண்டு மேலும் தெற்கு நோக்கி பரவ திட்டமிட்டிருந்தார். ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக டெக்கான் பகுதியிலிருந்து கவனத்தை திருப்பினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக