புதன், 8 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 17

தற்போது அக்பரின் ஆசையின்படி ஜஹாங்கீர் டெக்கான் மீது கவனம் செலுத்தினார். முதலில் அஹ்மத்நகர் மீது படையெடுத்த போது நிஜாம்ஷாஹி மன்னராட்சியாக இருந்த அஹ்மத் நகரின் அபிசீனிய மந்திரி மலிக் அம்பரின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அவரின் வயதும் இராணுவ அநுபவமும் மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மலிக் அம்பர் மிகச் சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுனராகவும் இருந்தார். நாட்டின் வருவாயை மறுசீரமைப்பு செய்து வெற்றி கண்டிருந்தார். இவரின் இந்த வெற்றி அணுகுமுறையையே அக்பர் தொடர்ந்திருந்தார். இராணுவத்தினரை ஒழுங்கு படுத்தி கொரில்லா பயிற்சியும் அளித்திருந்தார். மொகலாயப் படைகளுக்கு அப்துர் ரஹீம் தலைமை தளபதியாக பொறுப்பேற்று அஹ்மத்நகரில் மலிக் அம்பரிடம் படுதோல்வி அடைந்தார். 1611ல் அப்துர் ரஹீம் தங்கத்தை கையூட்டாகப் பெற்று தோல்வி அடையச் செய்தார் என்று அவரின் எதிரிகளால் சொல்லப்பட்டது. ஜஹாங்கீர் கான் ஜஹான் லோதி என்பவரை தளபதியாக நியமித்து இளவரசர் பர்வேசுடன் காந்தேஷிலிருந்து அஹ்மத்நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தச் செய்தார். குஜராத்தின் கவர்னர் அப்துல்லாஹ்வும் கலந்து கொண்டார். ஆனாலும் தோல்வியிலேயே முடிந்தது. மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்த அஹ்மத்நகர் மீது 1617 ல் இளவரசர் குர்ரம் தலைமையில் சிறந்த இராணுவ அதிகாரிகள் துணையுடன் அனுப்பப்பட்டார். ஜஹாங்கீரின் ஆலோசனைப்படி ஆதில் ஷாவிடம் அமைதிக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். ஆதில் ஷா இளவரசருக்கு பதினைந்து லட்சம் ரூபாய் பெருமான பரிசுகளை அளித்து மலிக் அம்பரால் கைப்பற்றப் பட்டிருந்த மொகலாய பிரதேசங்களை திருப்பித் தர ஒப்புக் கொண்டார். இதில் இளவரசர் குர்ரமின் நடவடிக்கையும் பாராட்டப்பட்டு “ஷா ஜஹான்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். பேரரசர் ஜாங்கீரால் தட்டு நிறைய தங்கத்தை தலையில் கொட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார். சிறப்பான விருந்தளிக்கப்பட்டு மேலும் விலைமதிப்பில்லாத பரிசுகள் வழங்கப்பட்டன. 1629 ல் ஜஹாங்கீரின் மறைவிற்குப் பிறகு, அஹ்மத்நகர் வெல்லப்பட்டது. 
குஸ்ரு என்ற இன்னொரு இளவரசர் தந்தை ஜாங்கீருக்கு எதிராக சதி செய்து ஆட்சியைப் பிடிக்க முயற்ச்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்து இளவரசர் கண்கள் பறிக்கப்பட்டார். ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, நான்கு பேர் தூக்கிலிடப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு, குஸ்ருவின் துரோகம் மறக்கப்பட்டு, தந்தையின் பாசத்தால் கை தேர்ந்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குஸ்ருவிற்கு சிறிது பார்வை தெரியுமாறு செய்யப்பட்டது. அதனால் குஸ்ரு தந்தையின் கீழ் மரியாதையாக இருந்தார். இது சகோதரர் ஷாஜஹானுக்கு சற்று பிடித்தமானதாக இல்லை. இதனிடையில் தான் நூர்ஜஹான் தனது மருமகன் ஷஹ்ர்யாரை அடுத்து ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டார். அவரும் குஸ்ருவை விரும்பவில்லை. 1616 ல் பரம எதிரியான ஆசஃப் கானால் இளவரசர் குஸ்ரு சிறை பிடிக்கப்பட்டார். பின் ஷாஜஹான் வசம் 1622 ல் ஒப்படைக்கப்பட்டு புர்ஹான்பூர் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார். ஆனால் கடுமையான குடல் வலியால் இறந்து போனதாக சொல்லப்பட்டது. குஸ்ருவின் மீது பாசமாயிருந்த ஜஹாங்கீரால் இவரது அடக்கவிடம் தோண்டப்பட்டு, அலஹாபாத்தில் குஸ்ரு பாக் என்ற தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டார். இளவரசர் குஸ்ரு நாட்டு மக்களால் மதிக்கப்பட்ட அழகான தோற்றம் கொண்டவராய் இருந்தார். முப்பத்தைந்து வயது வரை ஒரே மனைவியுடன் அன்பாக இருந்தார். 
அவ்வளவாக கவனம் செலுத்த முடியாத தூரத்தில் அக்பர் ஆட்சியிலிருந்து பெங்கால் மொகலாயர்கள் வசம் இருந்தது. மொகலாயர்களுக்கு அடிபணிந்தவராக ராஜா மான் சிங் ஆண்டு வந்தார். அவர் பெயருக்கு தான் மொகலாயர்களுக்கு கீழிருப்பது போல் நடித்தாரே தவிர அவர் எண்ணமெல்லாம் ஆப்கானியர்களை இந்தியாவில் ஆளச் செய்யவேண்டும் என்ற ஆசையில் இருந்தார். எப்படியாவது மொகலாயர்களை அழிக்க எண்ணி தானே பெங்கால் முழுதும் சுற்றி புரட்சி குழுக்களையும், ஜமீந்தார்களையும் சந்தித்தார். அதற்கேற்றவாறு பல பகுதிகளின் கவர்னர்களை மாற்றி வைத்தார். உஸ்மான் என்பவரின் மூலம் 1612 ல் புரட்சியில் இறங்கி மொகலாயர்களுக்கெதிராக போரிட்டார். இதில் பலமான காயம் அடைந்த நிலையிலும் உஸ்மான் ஆறு மணி நேரம் படைகளை நடத்தினார். இறுதியில் தோல்வியுற்று பெங்கால் மொகலாயர்கள் வசமானது. ஜஹாங்கீர் இஸ்லாம் கான் என்பவரை தரம் உயர்த்தி அதன் கவர்னராக்கினார். ஆப்கானியர்களை கனிவாக நடத்தி அவர்களுக்கும் பதவிகளை ஜஹாங்கீர் கொடுத்தார். இதனால் பெங்கால் பலமானதாக இருந்தது. 1616 ல் இந்தியாவில் அக்குள் பகுதியை கடுமையாக தாக்கிய ப்ளேக் நோய் பரவியது. முதலில் எலிகளிடம் ஆரம்பித்த இது வேகமாக மனிதர்களிடம் பரவியது. பஞ்சாபில் துவங்கிய நோய் மொத்த வட இந்தியாவையும் தாக்கியது. அடுத்தடுத்து பலர் இறந்தனர். பெரும் தொற்றாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு காடுகளுக்கு ஓடினர். லாகூர், காஷ்மீர் மற்றும் ஆக்ராவில் பலர் உயிரிழந்தனர். 
       ஜஹாங்கீரின் ஆட்சியில் அவரின் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. டெஹ்ரானைச் சேர்ந்த கியாஸ் பேக் என்பவரின் அழகிய மகள் மெஹ்ர் உன் நிசா என்பவருடன் ஜஹாங்கீருக்கு திருமணம் நடந்தது. மணமகள் உச்ச அழகியாக இருந்தார். கியாஸ் பேக் தன் சொந்த ஊரை விட்டு நல்ல வாழ்க்கையை நாடி இந்தியா வந்தார். அவர் கந்தாரில் இருந்த போது அவர் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வறுமையின் காரணமாக கியாஸ் பேக்கால் தாயையும், குழந்தையையும் சரியாக கவனிக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நல்ல மனம் படைத்த மலிக் மசாவூத் என்ற வியாபாரியின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்தார். அந்த வியாபாரிக்கு மொகலாய அரண்மனையில் சில தொடர்புகள் இருந்தது. மலிக் மசாவூத் மன்னர் அக்பருடன் பணியில் இருந்த போது சரியான சந்தர்ப்பத்தில் கியாஸ் பேக்கை அறிமுகப் படுத்தினார். உடனே அக்பரால் பணி கிடைக்கப்பட்டு அரண்மனையில் சேர்ந்தார். கியாஸின் குணத்தாலும், வேலைத்திறனாலும் பாராட்டைப் பெற்று முன்னூறு (RANK) தரத்திற்கு தகுதி பெற்றார். கியாஸின் மனைவியும், இளைய மெஹ்ர் உன் நிசாவும் தாராளமாக அந்தப்புரத்திற்கு நடமாடும் அனுமதி பெற்று ராஜகுடும்பத்திற்கு உதவியாக இருந்தார்கள். மெஹ்ர் உன் நிசா பருவம் எய்தி பதினேழு வயதான போது, பெர்ஷியாவின் இரண்டாம் ஷா இஸ்மாயிலிடம் மேஜைப் பணியாளராக இருந்த அலி குலி இஸ்தஜ்லூ (இன்னொரு பெயர் ஷேர் ஆப்கான்) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அலி குலி பேரரசர் அக்பரிடம் பணிக்கு சேர ஆவல் கொண்டார். அக்பர் அலி குலியை இளவரசர் சலீமுக்கு (ஜஹாங்கீர்) பணி செய்ய உத்தரவிட அதன் மூலம் மேவார் சென்றார். அலி குலியின் கனிவான சேவையில் மனம் குளிர்ந்த சலீம் ‘ஷேர் ஆப்கான்’ என்ற சிறப்புப் பெயரை அளித்தார். சலீம் தந்தைக்கு எதிராக புரட்சி செய்த போது அனைத்து ஆதரவாளர்களும் சலீமை விட்டு ஓடிவிட, அதில் ஷேர் ஆப்கானும் ஒருவர். தான் ஆட்சிக்கு வந்த பின் ஷேர் ஆப்கானை மன்னித்து பதவி உயர்வாக பெங்காலின் புர்த்வான் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார். 
ஷேர் ஆப்கான் ஜஹாங்கீருக்கு எதிராக புரட்சி செய்ய தயாராவதாக பெங்காலிலிருந்து தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அரண்மனைக்கு வந்து விளக்கம் கொடுக்க ஜஹாங்கீர் உத்தரவிட்டார். அதற்கு ஷேர் ஆப்கான் பணியவில்லை. இதை அப்பகுதியின் கவர்னரான குத்புதீன் கோகாவிடமும் ஜஹாங்கீர் தெரியப்படுத்தினார். குத்புதீன் கோகா முட்டாள்தனமாக ஷேர் ஆப்கானை கைது செய்ய உத்தரவிட்டார். குத்புதீன் கோகா பெரும் ஆட்களுடன் சென்று ஷேர் ஆப்கானை சூழ்ந்து கொள்ள, அதிர்ச்சியுற்ற ஷேர் ஆப்கான் ‘இது என்ன நடைமுறை? என்று வினவ, ஜஹாங்கீரின் உத்தரவை தெரிவிக்க குத்புதீன் அவரை நெருங்க, ஷேர் ஆப்கான் கவர்னரின் பணியாளை வாளினால் காயப்படுத்தினார். இந்த செயலினால் அருகிலிருந்த கவர்னரின் இன்னொரு பணியாள் ஷேர் ஆப்கானை எதிர்பாராத விதமாக வாளால் வெட்டிக் கொலை செய்தார். கணவர் இறந்த பிறகு மெஹ்ர் உன் நிசாவும், அவரின் சிறிய மகளும் அந்தப்புரத்திற்கு வரவழைக்கப்பட்டு, விதவையான ராணி சலீமா சுல்தானுக்கு பணிவிடை செய்ய நியமிக்கப்பட்டார். 1611 மே மாதம் ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசா மீது காதல் கொண்ட காரணத்தால் திட்டமிட்டே ஷேர் ஆப்கான் கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல் நடமாடியது. ஆனால், ஷேர் ஆப்கானின் ஜஹாங்கீருடனான காலகட்டங்களை நன்கு ஆராய்ந்த பின்னும், கவர்னர் குத்புதீன் கோகாவின் கொலைக்கான விளக்கமும், அது தற்செயலாக நடந்தது தான் என்றும் ஜஹாங்கீருக்கு துளியும் சம்பந்தமில்லை என்று தெளிவானது. ஷேர்கான் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக ராணியை சந்திக்கச் சென்ற ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொண்டார். அவரை மிகவும் விரும்பிய ஜஹாங்கீர் நூர் மஹால் ( அரண்மனையின் ஒளி) என்றும், நூர்ஜஹான் (உலகின் ஒளி) என்றும் புகழ்ந்தார். பதினாறு ஆண்டுகள் ஷேர் ஆப்கானுடன் வாழ்ந்த நூர்ஜஹான் ஜஹாங்கீருடனான நான்காண்டுகால வாழ்க்கையிலேயே பேரரசி ஆனார். இவர் மீது ஜஹாங்கீர் கொண்டிருந்த அன்பின் அடையாளமாக இஸ்லாமிய மன்னர்களிலேயே முதல்முறையாக நாணயத்தில் மனைவியைப் பொறித்தார்.
நூர்ஜஹான் விரைவில் பேரரசியாக புகழின் உச்சத்திற்கு வந்தார். உயர் கலாச்சாரத்தின் வடிவமாக திகழ்ந்த இவர் அரபு மற்றும் பெர்ஷிய மொழியில் புலமை வாய்ந்திருந்தார். கவிதைகளைப் புனைவதிலும் திறமை வாய்ந்த இவர் அரண்மனையின் மதிய வேளைகளை சிறப்பாக்கினார். இந்தியாவில் அதுவரை இல்லாத வகையில் புதுமையாக ஆபரணங்களையும், சில்க் மற்றும் காட்டன் உடைகளுக்கு அலங்காரங்கள் வடிவமைத்தார். இன்றைக்கும் இருக்கும் ரோஜா வாசம் கொண்ட அத்தர் என்னும் நறுமணம் இவர் கண்டுபிடித்தது தான். நூர்ஜஹானின் உருவ அமைப்பும் அவரின் பேரரசி தோற்றத்திற்கு கம்பீரமாக இருந்தது. கணவருடன் வேட்டைக்குச் சென்று புலிகளை வேட்டை ஆடியிருக்கிறார். ஒரு சமயம் இவர் திறமை கண்டு ஜஹாங்கீர் வியந்து வைரங்கள் பதிக்கப்பட்ட இரண்டு கை வளயங்களை பரிசளித்தார். மேலும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆயிரம் தங்க வில்லைகளையும் அளித்தார். தனது அதிபுத்திசாலி தனத்தால் எந்த சிக்கலும், ஆபத்துகளும் விளையாவண்ணம் பார்த்துக் கொண்டார். போரின் போது யானையின் மீது அமர்ந்து அம்புகளை எதிரியின் மீது எரிவதைப் பார்த்து இராணுவ அதிகாரிகளும், திறமையான போர் வீரர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக