புதன், 8 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 18

ஜஹாங்கீரின் அரசியல் அதிகாரத்திற்கு பின் பலமாக நூஜஹான் திகழ்ந்தார். இவரின் உடன் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நுண்ணறிவும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஜஹாங்கீருக்கு பக்கபலமாக விளங்கினார். மந்திரிகளும், அறிவாளிகளும் இவரின் ஆலோசனைகளை ஏற்றார்கள். நிர்வாகத்தின் எந்த விஷயமும் இவரின் கவனத்திலிருந்து தப்பாது. அதே நேரத்தில் எல்லாமே நல்லதாக செய்தார் என்று கொள்ள முடியாது. தன் சொந்த குடும்பத்தினரின் நன்மையையே கருதினார். அவர்களை நல்ல பதவிகளில் அமர்த்தி தன்னைச் சுற்றி அவர்களையே வைத்துக் கொண்டார். ஷேர் ஆப்கான் மூலம் தனக்குப் பிறந்த மகளை ஷஹ்ர்யாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மேலும் தான் அதிகாரம் பெற ஷஹ்ர்யாரை ஆட்சிக்கு கொண்டுவர முயற்ச்சித்தார். ஜஹாங்கீருக்குப் பிறகு இளவரசர் குர்ரம் தான் ஆட்சிக்கு வருவார் என்று தெரிந்தும் தன் மருமகனை பதவிக்கு கொண்டுவர முயற்சி செய்தார். இதனால் அரண்மனையும், அந்தப்புரமும் அரசியலின் மத்திய களமானது. மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்த இளவரசர் குஸ்ருவை இடைவிடாத சதி செய்து கணவரிடமிருந்து தூரமாக்கினார். மேவாரின் வெற்றிக்குப் பிறகு ஷா குர்ரம் என்றும், டெக்கானின் வெற்றிக்குப் பிறகு ஷாஜஹான் என்றும் ஜஹாங்கீரால் புகழப்பட்ட குர்ரமின் புகழைக் குறைக்க பெரும் முயற்சி செய்தார். இளவரசர் குஸ்ருவின் மரணம், கந்தாரின் இழப்பு மற்றும் குர்ரம், மஹபத் கானின் புரட்சி ஆகியவற்றை தனக்கு சாதகமாக திட்டமிட்டார். அதேநேரத்தில் அநாதைப் பெண்களுக்கும், ஏழைப் பெண்களுக்கும் ஆதரவளித்தார். தனது சொந்த வருவாயிலிருந்து பலருக்கு உதவி செய்து நற்பெயரைப் பெற்றிருந்தார். கலப்படமில்லாத அன்பை கணவர் மீது வைத்திருந்தார். ஜஹாங்கீரின் போதை பழக்கங்களைக் குறைத்தார். அரசின் அநாவசியமான செலவுகளையும் தடை செய்தார். 
ஷாஜஹான் தந்தை நூர்ஜஹான் மீது வைத்திருந்த அன்பை அளவிட முடியாமல் இருந்தார். தன் ஆட்சியை காத்துக் கொள்ள புரட்சியில் இறங்கினார். பெரும் படையுடன் ஆக்ராவை நோக்கி முன்னேறிய ஷாஜஹான் தந்தையின் படையுடன் பலோச்பூர் என்ற இடத்தில் மோதினார். இதில் ஷாஜஹான் தொல்வி அடைய, மொகலாய தளபதி ஷாஜஹான் போகுமிடமெல்லாம் விரட்டி வந்து அசீர் என்ற இடத்தை எதிர்ப்பின்றி கைப்பற்றினார். ஆதரவாளர்கள் அனைவரும் ஷாஜஹானைக் கைவிட மலிக் அம்பரிடம் ஆதரவை வேண்டினார். அவர் மறுத்துவிட, கோல்கொண்டாவின் ஆட்சியாளரிடம் சென்றார். அவரும் மறுத்துவிட பெங்காலுக்கு வந்தார்.  பெங்காலின் ஆதரவுடன் அலஹாபாதில் மொகலாயப் படைகளுடன் மோதினார். மீண்டும் தோல்வியைத் தழுவ தப்பி ஓடி, ரோஹ்டாஸ் கோட்டையில் சில காலம் ஓய்வெடுத்தார். மீண்டும் டெக்கான் திரும்பி மொகலாயர்களின் பழைய எதிரியாக இருந்த மலிக் அம்பரிடமே வந்தார். இம்முறை மலிக் அம்பர் அரவணைக்க, புர்ஹான்பூர் மீது தாக்குதல் நடத்தினார். மீண்டும் மொகலாய படைகளிடம் தோல்வியுற்றார். ஷாஜஹானின் அதிகாரிகளும், வீரர்களும் இவரை விட்டு மொகலாயப் படைகளுடன் சேர்ந்து கொண்டனர். மீண்டும் ரோஹ்டாஸ் கோட்டையில் தஞ்சமடைந்த ஷாஜஹானால் பெரும் மொகலாய படைகளை சமாளிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் தான் இதுவரை புரிந்த எதிர்ப்புகளுக்காக மன்னிக்க வேண்டி கடிதம் எழுதினார். அதேநேரத்தில் மொகலாய அரசில் அதிவேகமாக வளர்ந்து வரும் மஹபத்கான் மற்றும் இன்னொரு இளவரசர் பர்வேசின்வளர்ச்சியை விரும்பாத நூர்ஜஹான், கணவர் ஜஹாங்கீரிடம் ஷாஜஹானை மன்னித்துவிட ஆலோசனை சொல்கிறார். ஷாஜஹான் தன் வசமிருந்த ரோஹ்டாஸ் கோட்டை மற்றும் அசீர் பகுதிகளை தந்தையிடம் ஒப்படைத்தார். மேலும் உத்தரவாதமாக பத்து வயதுள்ள தாரா மற்றும் எட்டு வயதுள்ள ஒளரங்கஸேப் ஆகிய தனது மகன்களையும் ஜஹாங்கீரின் அரண்மனைக்கு அனுப்பினார். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளையும் பேரரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மனைவி மற்றும் இன்னொரு மகன் முராதுடன் நாசிக் சென்றார். 
ஷாஜஹானின் இந்த சமாதானம் நூர்ஜஹானிடம் சற்று அமைதியை ஏற்படுத்தியது. இளவரசர் குஸ்ருவின் மரணம், ஷாஜஹானின் அமைதியைப் பயன்படுத்தி அவ்வப்போது புரட்சியில் ஈடுபடும் மஹபத்கானின் பக்கம் நூர்ஜஹான் கவனம் செலுத்தினார். அடுத்து தன் மருமகனுக்கு ஆட்சியைப் பிடிப்பதில் எதிராக இருப்பது இளவரசர் பர்வேஸ் மட்டுமே என்பதையும் கவனம் கொண்டார். நூர்ஜஹானின் திட்டப்படி, இராணுவ தலைமையில் இருந்து மஹபத் கானை ராஜினாமா செய்துவிட்டு பெங்காலின் நிர்வாகத்தைக் கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்த பர்வேஸ் பின் அடங்கிப் போனார். மஹபத்கான் உத்தரவை ஏற்காவிட்டால் ஊழல் செய்ததாக விசாரிக்கப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டு, இதுவரை அவர் வசம் இருந்த முக்கிய துறைகளின் கணக்குகளை ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் அரசின் ஆலோசனை இன்றி தன் மகளுக்கு க்வாஜாஹ் உமர் நக் ஷ்பந்தியின் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்தது பற்றியும் விசாரிக்கப்பட்டார். மஹபத்கானின் மருமகனாக வர இருப்பவரையும் விசாரணை என்ற பேரில் தொந்திரவு செய்யப்பட்டார். மேற்கூறிய மொத்த புகாருக்கும் அரண்மனைக்கு வந்து விளக்கம் கூற உத்தரவிடப்பட்டார்.
ராஜாங்கத்தின் இந்த அணுகுமுறையால் பெரிதும் அவமானம் கொண்ட மஹபத்கான், ஜஹாங்கீர் தன் குடும்பத்துடன் ஐந்தாயிரம் ராஜபுத்திர வீரர்களுடன் ஜீலம் நதியைக் கடக்க இருந்த போது சென்று சிறை பிடிக்கச் சென்றார். நூர்ஜஹான் தன் மருமகனுடன் தப்பித்துக் கொண்டார். மொகலாய தளபதி ஃபிதாய்கான் எதிர் தாக்குதல் நடத்தி ஜஹாங்கீரைக் காப்பாற்ற முயன்று தோல்வி கண்டார். நூர்ஜஹான் ஆற்றைக் கடந்து யானை மீது அமர்ந்து மொகலாய வீரர்களுக்கு உத்தரவிட முயன்றார். ஆனால் அதிகாரிகள் ஓடிவிட்டனர். அசஃப்கான் தன் மூவாயிரம் வீரர்களுடன் ஓடி அட்டாக் கோட்டையில் ஒளிந்து கொண்டார். நூர்ஜஹான் ஒரு திட்டத்தை மனதில் கொண்டு மன்னருடன் சேர்ந்து கொண்டார். மிச்சமிருந்த வீரர்களின் உதவியுடன் மஹபத்கானை எதிர்கொண்டு, அவரின் செல்வங்களைக் கைப்பற்றினார். தப்பி மேவார் ஓடிய மஹபத்கான் பின் டெக்கான் சென்று ஷாஜஹானுடன் சேர்ந்து கொண்டார்.
1626 ல் இளவரசர் பர்வேஸும், 1627 ல் காஷ்மீரிலிருந்து திரும்பும் போது ஜஹாங்கீரும் மரணமடைந்தார்கள். இப்போது பட்டத்துக்கு உரியவரான ஷாஜஹான் ஷஹ்ர்யாரை எதிர்க்க முழுவீச்சில் தயாரானார். பேரரசர் ஜஹாங்கீரின் உடல் லாகூரில் ஷஹ்தாரா என்ற இடத்தில் உள்ள நூர்ஜஹானின் தில்குஷா தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது டெக்கானிலிருந்த ஷாஜஹானுக்கு தந்தை இறந்த செய்தியை மாமனார் அசஃப் கான் தான் தெரியப்படுத்தினார். லாகூரில் ஜஹாங்கீரின் அடக்கப் பணியிலிருந்த நூர்ஜஹானும், ஷஹ்ர்யாரும் எல்லாம் முடிந்த பிறகு, ஷஹ்ர்யார் மொகலாய மன்னராக அறிவித்து அரசு பெட்டகத்தைக் கைப்பற்றிக் கொண்டார். தன் மருமகன் ஆட்சிக்கு வரவேண்டியவர் என்று நம்பிய அசஃப்கான், ஷாஜஹான் வரும் வரை இறந்து போன குஸ்ருவின் மகன் தாவர் பக் ஷை தற்காலிக மன்னராக ஆக்ராவில் அறிவித்தார். நூர்ஜஹான், தனது சகோதரன் அசஃப்கானுக்கு தன் புறம் சாதகமாக இருக்க வேண்டுகோள் விடுத்தார். அசஃப்கான் பலத்த இராணுவத்துடன் லாகூரிலிருந்த ஷஹ்ர்யாருடன் மோதி, அவரை வென்று சிறையிலடைத்து கண்களைப் பிடுங்கினார். இதற்கிடையில் டெக்கானிலிருந்து திரும்பிய ஷாஜஹான் 1628 பிப்ரவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். காலமெல்லாம் ஷாஜஹானுக்கு எதிராகவே இருந்து சதி செய்த நூர்ஜஹான் மன்னிக்கப்பட்டு கௌரவமாக நடத்தப்பட்டார். ஷாஜஹான் அவருக்கு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினார். தனது ஆடம்பரங்களை எல்லாம் துறந்த நூர்ஜஹான் தனது விதவை மகளுடன் (ஷஹ்ர்யாரின் மனைவி) லாகூரில் வாழ்ந்தார். 1645 டிசம்பரில் இறந்த நூர்ஜஹானின் உடல் லாகூரில் கணவர் ஜஹாங்கீருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜஹாங்கீரின் ஆட்சியின் போது தான் மூன்று ஐரோப்பிய நாட்டினர் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்தினர் வருகை தந்தனர். அவர்கள் மொகலாயர்களுடன் நல்லுறவைப் பேணினர். ஜஹாங்கீரும் போர்ச்சுகீசியர்களுடன் சுமுகமான உறவை வைத்திருந்தார். ஆக்ராவிலும் லாகூரிலும் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டி சுதந்திரமாக வழிபடும், விரும்பியவர்கள் கிறிஸ்தவ மதம் மாறவும் அனுமதித்தார். தானும் ஏசு மற்றும் கன்னி மாதா உருவப்படங்களை வைத்திருந்தும், கிறிஸ்தவ மடங்களுக்கு பொருளுதவியும் செய்தார். போர்ச்சுகீசியர்களும் ஜஹாங்கீருக்கு மேற்கத்திய ஆயுதங்களை வரவழைத்து தந்தார்கள். 1613 ல் போர்ச்சுகீசியர்கள் மொகலாயர்களின் நான்கு கப்பல்களை சிறைப்பிடித்து கொள்ளையடித்தார்கள். இதன் எதிர் விளைவாக தாமன் பகுதியில் சர்ச்கள் மூடப்பட்டு அவர்களின் கிறிஸ்தவ கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதன் முழு விளைவுக்கும் போர்ச்சுகீசியர்களே காரணம்.
அப்போது பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் வாணிகம் செய்ய ஆவல் கொண்டன. 1600 ல் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டது. 1600 லிருந்து 1608 வரை ஆங்கிலேயர்கள் மூன்று குழுக்களை ஜஹாங்கீரிடம் அனுப்பி வாணிபத்திற்கு பேச்ஸ்ர் வார்த்தை நடத்தினார்கள். அவைகள் தோல்வியில் முடிந்தது. காரணம் ஆங்கிலேயர்களின் வரவை போர்ச்சுகீசியர்கள் போட்டியாகக் கருதினார்கள். 1608 ல் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற கடற்தளபதி, இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மொகலாயர்களுக்கு எழுதிய கடிதத்துடன் ஆக்ரா வந்தார். சூரத் நகரத்தில் ஒரு தொழிற்சாலைக் கட்டி தொழில் செய்ய உத்தரவு வேண்டினார். வில்லியம் ஹாக்கின்ஸை பேரரசர் நன்றாக வரவேற்று ஒரு மன்சாப் தகுதியும், 30,000 ஊதியமும் கொடுத்து கௌரவித்தார். ஆங்கிலேயர்களின் தொழிற்சாலைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உடனே போர்ச்சுகீசியர்களின் வற்புறுத்தலால் மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் போன பிறகு, வில்லியம் எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் அதே கோரிக்கையுடன் வந்தார். அவருக்கும் அனுமதியளிக்கப்பட்டு, உடனே மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் மற்றும் எட்வர்டுக்குப் பிறகு, இங்கிலாந்தின் தூதர் சர். தாமஸ் ரோய் இந்தியாவிற்கு வருகை தந்தார். வந்தவர் தூதுவர் ஆனதால் சிறப்பான முறையில் அரசியல் ரீதியான அணுகுமுறையாலும், வாணிபக் கண்ணோட்டத்திலும் பேச்சு வார்த்தை நடத்தினார். நூர்ஜஹான், அசஃப்கான், ஷஹ்ர்யார் மற்றும் ஷாஜஹானுக்கு மதிப்பான பரிசுகளைக் கொடுத்தார். இறுதியில் சூரத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலை கட்டிக் கொள்ள ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார். ஆங்கிலேய கப்பல்களும் சுதந்திரமாக துறைமுகம் வர அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வரவை விரும்பாத போர்ச்சுகீசியர்கள் அவர்களின் கப்பல்களை தாக்கினார்கள். ஆங்கிலேயர்களின் வருகை இந்தியாவில் ஒரு புதிய உறவை ஏற்படுத்தியதின் விளைவாக நினைவு கல்வெட்டை பதித்தார்கள். 
  

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக