ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 1

மங்கோலியர்கள் வரலாறு 
கூ.செ.செய்யது முஹமது
அமைதியாக இருக்கும் அருகாமை மக்களைக் கொள்ளையடித்து, தங்கள் உணவை தேடிக்கொண்டிருந்த பழங்குடியினர் மீது போர் தொடுத்து ஸ்காண்டிநேவியன்கள் கைப்பற்றிய பூமி. மங்கோலியப் பீடபூமி. இதை ஸ்காண்டிநேவியன்கள் கடற்கொள்ளைக்கும், அடிமை வாணிபத்திற்கும் பயன்படுத்தி வந்தார்கள் அது தனி கதை. இந்த மங்கோலியா தான் துருக்கிகளுக்கும், மங்கோலியர்களுக்கும் உண்மையான தாய் பிரதேசம். ஆண்டாண்டாக பழங்குடியினராக இங்கு வாழ்ந்த இந்த இரு சமூகமும் உலக சரித்திரத்தில் மகத்தான இடம் பிடித்தனர். இவர்களின் மொழி ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். ஆளுயரத்திற்கு வளர்ந்திருக்கும் காட்டுப்புல், கரடுமுரடான மலைகள் எல்லாம் தாண்டி அமைந்த பிரதேசம். இவைகளைக் கடந்தால் நேராக கொண்டு போய் ஐரோப்பாவில் விடும். குதிரைகளில் பயணித்தால் விரைவில் எட்டலாம். தென் பகுதியில் உயர்குடி வகுப்பினர் வசித்து வந்தார்கள். அமெரிக்க இந்தியர்கள், சைபீரிய பழங்குடியினர்கள் மற்றும் வடக்கு மங்கோலியர்கள் அனைவரும் ஒரே வழிமுறையில் வந்தவர்கள் என்று இறுதியான மனித ஆய்வு சமீபத்தில் தெரிவிக்கிறது.
இந்த மங்கோலிய பீடபூமியைப் பற்றி கொஞ்சம் ஆதியிலிருந்து பார்ப்போம். காட்டு மிராண்டி கூட்டங்களாய் 100 ஆம் ஆண்டுகளில் பல பிரிவு மக்கள் சேர்ந்த இனம் மங்கோலிய இனம். பின்னாளில் ஸோன்ங்க்யூ, ஸியான்பி, ரூரன், கூக்துர்க் அல்லது ஹூன் மாகாணம் என்று அடையாளம் காணப்பட்டது. இன்றும் சரித்திர ஆசிரியர்கள் இவர்கள் மங்கோலிய பழங்குடியினரா அல்லது துருக்கி பழங்குடியினரா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஹூன் மாகாணம் மத்திய ஆசியாவில் “ஷன்யூ” என்ற பேரரசாக மாறியது. ஷன்யூ மோடுன் என்பவர் இதை விரிவுபடுத்தினார். ஷன்யூ பேரரசு சீனாவின் ஹான் பேரரசுடன் போட்டியிட்டது. ஷன்யூவின் பிரமாண்ட படை முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் ஹான் பேரரசின் சீனா மன்னர் ஷன்யூவை தனிப்பேரரசாக ஒத்துக்கொண்டார். ஷன்யூவுடன் திருமண உறவுகளை வளர்த்துக்கொண்டு ஆண்டு கப்பம் செலுத்தவும் ஒப்புக் கொண்டார். மோடுன் ஆட்சியில் ஷன்யூ பேரரசு நிர்வாகத்திறமையிலும், இராணுவத்திலும் பலமாகஇருந்து “ஷாமானிஸம்” என்ற மதக்கொள்கையை கடைபிடித்து வந்தது. (இங்கு நிறைய குறிப்பிடவரலாறு உள்ளது. தேவையில்லை என்ற கார ணம் கருதி தவிர்த்து விடுகிறேன்.) நாளடைவில் சரித்திரம் ஸியன்பிஸ்கள் என்பவர்கள் தான் மங்கோலியர்கள் என்று முடிவுக்கு வந்தது. 2006 ல் நடந்த அகழ் ஆராய்ச்சியில் மங்கோலியாவின் அல்டாய் மலைப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஸைத்திய போர்வீரன் உடல் கண்டு பிடிக் கப்பட்டது. மங்கோலியர்களின் புராதனம் கொய்ட் செங்கெரீன் அகூய் பகுதியில் வட நீலவண்ண குகை ஓவியங்கள், பயன் கோங்கார் பகுதியில் ஸகான் அகூய் வெள்ளை குகை ஓவியங்கள் மூலமும் கண்டறியப்பட்டுள்ளன. ஸியன்பிஸ்களின் இளம்தலைவர் தன்ஷி ஹுயூ சிறு நாடோடிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஹூன் மற்றும் சீன அரசுடன் அவ்வப்போது மோதிக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக ஸியான்பி மாகாணத்தை உருவாக்கினார். அதுவும் சிறிது நாளில் சிதறுண்டு போனது. பல சிறு அரசர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக் கொண்டார்கள். ஸியான்பி மாகாணம் தன் தலைமையை ‘கான்’ என்று அழைத்தது. இவர்கள் துருக்கி நாடோடிகளாகவும் அறியப்பட்டனர். ஆனால், நவீன துருக்கிகள் இதிலிருந்து மரபு ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் மாறுபட்டவர்கள். சரித்திரத்தில் முதல் கானாக காபுல்கான் என்றவர் கியாத் பழங்குடியினரிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறார். காபுல்கானின் மகன் ஹோடுலாகான் எதிரிக் கூட்டத் தலைவனான அம்பகைகானுடன் பலமுறை போரிட்டார். ஹோடுலாகான் இறந்தவுடன் கூட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க திணறினார்கள். இறுதியில் காபுல் கானின் பேரர் ஒருவரான யெஸுகெய் பகாதூர் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
மங்கோலியாவின் கிழக்கில் அல்டாய் மலைப்பகுதி. அந்த தாய், தகப்பனில்லாத தன் குழந்தைகளுக்கு உணவளிக்க மிகவும் சிரமப்பட்டாள். சில சமயம் காட்டுத் தாவரங்களையும், சிறிய மிருகங்களையும், சுண்டெலிகளையும், அவர்கள் கூட்டத்துக் குள்ளேயே திருடியும் உணவளித்து வந்தாள். அவர்களின் சிறிய கூட்டத்தின் தலைவராக இருந்த அந்த குழந்தையின் தந்தையை அந்தக் கூட்டத்தார்கள் தலைமைப் போட்டியில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்கள். அவர் தான் யெசுகெய் பகாதூர். ஆறு குழந்தைகளின் தந்தை ஆவார். அந்த குழந்தைகளில் ஒரு சிறுவனுக்கு தந்தை இறந்தபோது எட்டு வயது. அந்த சிறுவனின் பெயர் தெமுஜின். வழக்கமாக தந்தைக்குப் பின் தலைமைக்கு வர வேண்டிய தெமுஜின்னை அவர்களின் கூட்டத்திலேயே யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் ஒருகுழு சேர்த்து முரண்டுபிடித்த அந்த சிறுவன் தெமுஜின்னை மரக்கூண்டுக்குள் பலநாட்களாக சிறைவைத்தனர். ஒருநாள் இரவில் தெமுஜின் தப்பித்து தன் தாய் தம்பிகளுடன் வெளியேறி நீண்ட தூரம் பயணித்து வேறு ஒரு நாடோடிக்குழுவுடன் சேர்ந்து கொண்டார். தன் தந்தையின் சகோதரர் தூரில் கானுடனும், தனது இன்னொரு சகோதரர் ஜமுகாவுடனும் சேர்ந்து சிறிய கூட்டங்களை வெற்றி கொண்டார். அந்த கூட்டங்களில் ஒன்றான மெர்ஜித் பழங்குடியினர் தெமுஜினின் வீட்டை அழித்து அவர் மனைவி பூர்டேயை சிறைப்பிடித்துச் சென்றனர். இது ஏற்கனவே முன்பு தெமுஜினின் தந்தை யெஷுகெய் மெர்ஜித் தலைவனின் மனைவி ஹூலுனை சிறைப்பிடித்து சென்றதற்கு பழிவாங்குவதாக இருந்தது. தந்தையால் சிறைபிடித்து வரப்பட்ட ஹூலுன் தான் தெமுஜின் தாயார். மனைவியை மீட்க மெர்ஜித் கூட்டத்தின் மீது தெமுஜின் படையெடுத்து வென்றார். இந்த சிறுவன் தெமுஜினின் கதை உலகின் அனைத்து மொழிகளிலும் சினிமாப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவரின் கதை என்று சொல்லப்படுவதில்லை. அந்த சிறுவன் தந்தையைக் கொன்ற தன் கூட்டத்துக்குள்ளேயே அதிகாரத்திற்கு வர இருபத்தைந்து ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. தனது நாற்பதாவது வயதில் தங்கள் பழங்குடியின குழுவுக்குத் தலைவனாகி, இன்றளவும் உலகம் வியக்கும் “ஜெங்கிஸ்கான்’ என்று பெயர் பெற்றார். ஜெங்கிஷ் என்றால் ‘எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்’ என்று பொருள். இவர் தனி மனித இராணுவம் (ONE MAN ARMY) என்று புகழப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக