திங்கள், 20 ஜூலை, 2015

சௌதி அரேபியா வரலாறு 1

சௌதி அரேபியா வரலாறு 

கூ.செ.செய்யது முஹமது
இப்போது இருக்கும் சௌதி அரேபியாவுக்கு 1932 ல் அப்துல் அஜீஸ் அல் சௌத் என்பவர் தான் அடித்தளம் அமைத்தார். 20,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான ஆதாரத்தைக் கொண்ட சௌதி அரேபியாவுக்கு இரண்டு வரலாறுகள் உண்டு. ஒன்று 7 ம் நூற்றாண்டில் இஸ்லாம் வளர்ந்து அரேபியப் பேரரசானது. மற்றொன்று 20 ம் நூற்றாண்டுகளில் எண்ணெய்வளம் கண்ட பிறகான வரலாறாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெர்ஷிய வளைகுடா பகுதிகளில் தில்முன் சமூகமும், ஹிஜாசின் வடக்குப் பகுதியில் தமூத் மக்களும் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இங்கிருந்து பலர் அருகாமை பாலைவனப்பகுதிகளில் சென்று குடியேறி இருக்கிறார்கள். காரணம் திம்னா (பாலஸ்தீனம்), தெல் எல் கெலீஃபீ (ஜோர்தான்) ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மண்பாண்ட சிதிலங்கள் இதை வடமேற்கு சௌதி அரேபியாவைச் சேர்ந்ததென உறுதி செய்கின்றன. கிரேக்க, ரோம ஆட்சியின் போது இப்பகுதி முற்றிலும் பயன்படாத பாலைவனப் பகுதியாகக் கருதப்பட்டு புறக்கணிக்கப்பட்டன.
570 களில் நபிகள் (ஸல்) நாயகம் இங்குள்ள மக்கா நகரத்தில் பிறந்து, 610 ல் தான் ஒரு இறைதூதர், இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என பிரச்சாரம் செய்ய அப்பகுதி மக்களால் துன்பம் செய்யப்பட்டு அங்கிருந்து மதீனா நகருக்குச் சென்றார்கள். மதீனாவிலுள்ள சில பழங்குடியினரின் கூட்டுடன் இஸ்லாம் மார்க்கத்தின் கீழ் முதல்முறையாக ஒரு ஆட்சியை இங்கு நிறுவினார்கள். நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் இறப்பிற்குப் பின், ஆட்சிக்கு வந்த அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் அட்சியில் அரபு பழங்குடியினரிடையே புரட்சிகள் தோன்ற ‘ரித்தா போரில்’ எதிர்கொண்டு அருகாமை பலம் வாய்ந்த பைசாந்தியர்களை எதிர்த்தார்கள். அவர்களுக்குப் பிறகு, வரிசையாக உமர் பின் கத்தாப் (ரலி), உதுமான் பின் அல் அஃப்ஃபான் (ரலி), அலி இப்ன் அபு தாலிப் (ரலி) ஆகியோர் ‘ராஷிதீன் கலீஃபாக்கள்’ என்றும், நான்கு நேர்மையான கலீஃபாக்கள் என்றும் இஸ்லாமிய ஆட்சியைத் தொடர்ந்தார்கள். இந்த ஆட்சியிலிருந்தே உமய்யாத் என்ற குடும்பத்தினர் தோன்றி ஆட்சியைக் கைப்பற்றி அரேபியாவின் வெளிப்பகுதிகளுக்கும் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள். பைசாந்தியப் பேரரசு, பெர்ஷியப் பேரரசுகளை வென்று ஐபீரிய பாலைவனப் பகுதியையும் வென்று இந்தியா வரை ஆட்சியை விரிவு படுத்தினார்கள். இஸ்லாமியர்களின் கடமைகளில் வசதி இருக்கும் பட்சத்தில் வாழ்நாளில் ஒரு முறையேனும் புனித பயணமாக மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்குச் செல்ல வேண்டும். இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அன்றிலிருந்து இன்றுவரை இந்நகரங்கள் புனிதமாகக் கருதப்படுகின்றன. அதனால் பல ஆட்சியாளர்களின் காலங்களில் பரபரப்பான பாக்தாத், டமாஸ்கஸ், கெய்ரோ போன்ற நகரங்களிலிருந்து அமைதியாக விலகி இருந்தது.
ஆனால், உமய்யாத்களின் முதல் கலீஃபா மு ஆவியா (ரலி) அவர்கள் மக்காவில் கட்டிடங்கள் கட்டி, கிணறுகளையும் தோண்டினார்கள். இவருக்குக் கீழ் வந்த மர்வான்கள் ஆட்சியில் மக்காவில் இசைக்கும், கவிதைகளுக்குமான உறைவிடமாக இருந்தது. முன்னாள் கலீஃபா அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும், ஸுபைர் இப்ன் அல் அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் பிறந்த அப்துல்லாஹ் அல் ஸுபைர் (ரலி) என்ற சஹாபா, உமய்யாத் கலீஃபா முதலாம் யசீதுக்கு எதிராக மக்காவில் சிரியா இராணுவத்தை அழைத்து வந்து புரட்சி செய்தார். அப்போது தீவிபத்தினால் கஃபா சேதமடைந்தது. 747 ல் மக்கா எமன் நாட்டிலிருந்து வந்த கரீஜியாக்களால் எதிர்ப்பின்றி கைப்பற்றப்பட்டு, பின் கலீஃபா இரண்டாம் மர்வானால் மீட்கப்பட்டது. 10 ம் நூற்றாண்டுகளில் ஹாஷிமிட்கள் ஹிஜாஸ் பகுதியை வளப்படுத்தினார்கள். பின் 13 நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டு வரை ஹிஜாஸ் பகுதி நல்ல வளம் கண்டது. பல இஸ்லாமிய ஆட்சிகளில் ஹிஜாஸ் கப்பம் செலுத்திய பகுதியாக இருந்தது. சௌதி அரேபியாவின் ஆட்சி அப்பாஸிட்கள், ஃபாத்திமிட்கள், அய்யுபிட்கள், மம்லுக்குகள் மற்றும் இன்னபிற ஆட்சியாளர்களிடம் மாறி மாறி வந்தது. 16 ம் நூற்றாண்டில் ஹிஜாஸ், அசிர், பெர்ஷிய வளைகுடாப் பகுதிகள் ஓட்டோமானின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஓட்டோமானின் கவர்னர் மக்கா நிர்வாகத்தைக் கவனித்தார். 17 ம் நூற்றாண்டில் அல் ஹசா பகுதியின் அதிகாரத்தை ஓட்டோமான் இழந்தாலும், 19 ம் நூற்றாண்டில் மீண்டும் கைப்பற்றியது.
1744 ல் ‘வஹ்ஹாபி’ என்னும் இஸ்லாமிய அமைப்பின் ஸ்தாபகராக இருந்த முஹம்மது இப்ன் அப்தல் வஹ்ஹாப் (ரஹ்) என்பவரின் துணையுடன் ரியாத் நகரின் அருகிலிருந்த அத் திர்ஃஇய்யா என்ற பகுதியிலிருந்து முஹம்மது இப்ன் சௌத் என்ற பழங்குடித் தலைவர் சௌதி ஆட்சிவம்சத்தைத் தோற்றுவித்தார். ஷெய்க் சௌத் இப்ன் முஹம்மது இப்ன் முக்ரீன் என்பவர் 16 ம் நூற்றாண்டில் அத் திர்ஃஇய்யா பகுதியில் குடியேறி பேரீச்சம் பழத்தோட்டம் வைத்து வாழ்க்கை நடத்தினார். நாளடைவில் அவர் தான் சார்ந்த மக்களுக்கு அப்பகுதியில் தலைவராக ஆனார். அவரின் மகன்தான் முஹம்மது இப்ன் சௌத் ஆவார். தந்தைக்குப்பின் தலைவரான முஹம்மது இப்ன் சௌத், அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களுடன் அப்பகுதியில் இஸ்லாமைத் தூய்மைப்படுத்த இணைந்தார். அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் தன் மகளை முஹம்மது இப்ன் சௌதின் மகன் அப்துல் அஜீஸுக்கு மணமுடித்துக் கொடுத்தார். இது மேலும் அவர்கள் சார்ந்த வம்சத்தை நட்பாக்கியது. இமாம் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய தன் பழங்குடியினத்தவரைக் கொண்டு படை ஒன்றை தயார் செய்தார். இதன்மூலம் அருகாமை பழங்குடியினத்தவர்களின் ஆதரவையும் திரட்டினார். ஓட்டோமானின் கீழ் இருந்தபோதே அத் திர்ஃஇய்யா பகுதியில் தங்களுக்கென தூய இஸ்லாமிய வழியில் நிர்வாகம் செய்தார். இது முதல் சௌதி மாகாணாகமாக இருந்தது. இன்றும் அவர் வழியில் தான் சௌதி அரேபியாவின் ஆட்சி செயல்படுகிறது. இவரது பெயரில் இமாம் முஹம்மது இப்ன் சௌத் இஸ்லாமிக் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகம் இருக்கிறது. கிழக்கில் குவைத் பகுதியிலிருந்து, வடக்கில் ஒமான் வரை தனது பகுதியை இப்ன் சௌத் நீட்டித்தார். இமாம் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் மக்களை ஜிஹாத் செய்ய அழைத்தார்கள். வஹ்ஹாபி அமைப்பு ஈராக், எகிப்து, இந்தியா, ஏமன் மற்றும் சிரியாவிலும் பரவியது. இப்ன் சௌத் அவர்கள் அசிர் பகுதியையும் தன் கீழ் கொண்டுவந்து கப்பம் செலுத்த வைத்தார். 1765 ல் இவர் இறந்த பிறகு அவர் மகன் அப்துல் அஜீஸ் பின் முஹம்மது இரண்டாவது ஆட்சிவம்சத்தினராக முதல் மாகாணத்தை ஆட்சி செய்தார்.
அப்துல் அஜீஸ் பின் முஹம்மது ஆட்சியின் நிலப்பரப்பை ரியாத் நகரம் வரை நீட்டித்தார். தூய்மையான மதக் கொள்கையும், இராணுவ நடவடிக்கையும் அடுத்து நஜ்த் பகுதியைக் கைப்பற்ற வைத்தது. சுற்றுவட்டார பழங்குடியினர் தன்னை எந்நேரமும் சந்திக்கும் வண்ணம் எளிமையாக இருந்தார். 1801 ல் ஈராக்கில் படைநடத்தி நஜஃப் பிரதேசத்தில் கர்பலாவையும், அலி இப்ன் அபு தாலிப் (ரலி), ஹுசைன் இப்ன் அலி (ரலி) ஆகியோரின் சமாதிகளை சேதப்படுத்தி, பல முஸ்லீம்களையும் கொன்றதாக இவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அத் திர்ஃஇய்யாவில் அஸ்ர் என்னும் மாலைத் தொழுகைக்குச் செல்லும் போது ஈராக்கின் அஃஅமராஹ்வைச் சேர்ந்த ஒருவனால் கூறிய கத்தியால் குத்தப்பட்டு அப்துல் அஜீஸ் பின் முஹம்மது அவர்கள் கொல்லப்பட்டார்கள். பின்னர் அவர் மகன் சௌத் பின் அப்துல் அஜீஸ் (சௌத் அல் கபீர் பின் அப்துல் அஜீஸ் பின் முஹம்மது பின் சௌத்) 1803 ல் முதல் சௌதி மாகாணத்திற்கு ஆட்சிக்கு வந்தார். இவர் தாயிஃப் நகரத்தையும், மக்கா, மதீனா நகரங்களையும் கைப்பற்றினார். மக்கா, மதீனாவிலிருந்த பல சமாதிகளை இவர் இடிக்கச் சொன்னார். இது 1517 லிருந்து மக்கா, மதீனா புனித நகரங்களை ஆண்டுவந்த ஓட்டோமான்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. அவர்களின் பெரும்பாலான துருப்புகள் ஐரோப்பாவில் இருந்ததாலும், உள்ளூர் பழங்குடியினரை எதிர்த்து அந்நகரங்களை அப்போதைக்கு மீண்டும் கைப்பற்ற ஓட்டோமான் முயலவில்லை. சௌத் ஆட்சிவம்சத்தின் பகுதிகள் மேலும் வலுவடைவதைக் கண்ட ஓட்டோமான் சுல்தான் நான்காம் முஸ்தபா எகிப்தின் வைஸ்ராயராக இருந்த திறமை மிகுந்த முஹம்மது அலி பாஷா மற்றும் அவர் மகன்கள் துசுன் பாஷா, இப்ராஹீம் பாஷா மூலம் நடவடிக்கை எடுக்கச் செய்து 1818 ல் மக்கா, மதீனா, ஹிஜாஸ் பகுதி உட்பட பல சௌத்களின் பகுதிகளைக் கைப்பற்றினார். சௌத் பின் அப்துல் அஜீஸுக்குப் பிறகு, அவர் மகன் அப்துல்லாஹ் பின் சௌத் 1818 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் வந்த போது சௌதியின் முதல் மாகாணங்கள் பல ஓட்டோமான் வசம் சென்றிருந்தது. ஒவ்வொரு பகுதியாக பிடித்துக் கொண்டு வந்த இப்ராஹீம் பாஷா இறுதியில் அத் திர்ஃஇய்யாவை அடைய வேறுவழியின்றி முதல் மாகாணத்தின் ஆட்சியாளர் அப்துல்லாஹ் பின் சௌத் ஓட்டோமான்களிடம் சரணடைந்தார். சௌத் ஆட்சிவம்ச முக்கிய குடும்பத்தினர்களை கைது செய்த இப்ராஹீம் பாஷா அவர்களை எகிப்துக்கும், இஸ்தான்புல்லுக்கும் அனுப்பினார். அப்துல்லாஹ் பின் சௌதும் இஸ்தான்புல் நகரில் மரணதண்டனைக் கொடுக்கப்பட்டார். கர்பலாவில் பலரைக் கொன்றும், மதீனாவில் நபிகளாரின் (ஸல்) மஸ்ஜிதை சேதப்படுத்தி பல ஷியா பிரிவு முஸ்லீம்களை மனம் புண்படச் செய்ததற்காக அப்துல்லாஹ் பின் சௌதுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அத் திர்ஃஇய்யாவின் முதல் சௌதி மாகாணம் அழிக்கப்பட்ட பின் எஞ்சியிருந்த வஹ்ஹாபி ஆதரவாளர்களுடன் துர்கி இப்ன் அப்தல்லாஹ் என்பவர் 1824 ல் எகிப்திய படைகளை வென்று ரியாத் நகரைக் கைப்பற்றினார். இதிலிருந்து சௌதிகளின் இரண்டாவது மாகாண ஆட்சிவம்சம் தொடங்கியது. இவர் அப்துல்லாஹ் இப்ன் சௌதின் மகனாவார். கடந்த அத் திர்ஃஇய்யாஹ் போரின் போது இவர் தப்பித்து பனி தமீம் கூட்டத்தின் அல் கோராயிஃப் இளவரசரிடம் தஞ்சமடைந்தார். 1821 ல் சிறிய படை திரட்டி எகிப்தியர்களை எதிர்த்து அத் திர்ஃஇய்யாஹ்வை வென்று ரியாதை தலைநகராக்கி மீண்டும் சௌதுகளின் ஆட்சியைக் கொண்டு வந்தார். 1827 ல் இவர் உறவினன் முஷாரி பின் அப்துல் ரஹ்மான் செய்த புரட்சியிலிருந்து உயிர் தப்பினார். இருந்தாலும் 1834 ல் படுகொலை செய்யப்பட்டார். அப்துல்லாஹ் பின் சௌதின் மகன் வகை வாரிசுகளிலிருந்து இவர் குடும்பம் மூன்றாகப் பிரிந்தது. அவை அல் ஃபைசல் (தற்போது வரை ஆட்சியிலிருக்கும் குடும்பம்), சௌத் அல் கபீர் மற்றும் அல் ஜிலுவி ஆகியவை ஆகும். இதில் அப்துல்லாஹ் பின் சௌதுக்குப் பிறகு, அவர் மகன் ஃபைசல் பின் துர்கி 1834 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் முன்பு இப்ராஹீம் பாஷாவால் கைது செய்யப்பட்டு எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டவர். அங்கிருந்து தப்பித்து வந்து தந்தையுடன் சேர்ந்து எகிப்திய படைகளை எதிர்த்தார். தந்தை ஆண்ட போது கிழக்கில் அல் ஹசா பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் இருந்தார். தந்தை கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் ரியாத் திரும்பி புரட்சியை அடக்கி முஷாரியைக் கொன்றார். எகிப்தின் அரேபிய கவர்னராக இருந்த குர்ஷித் பாஷா, ஃபைசல் பின் துர்கியின் அதேகுடும்பத்தைச் சேர்ந்த எதிரி குடும்பமான காலித் பின் சௌதை ஆதரித்தார். காலித் இடையில் மூன்றாண்டுகள் ஆண்டார். இதனால் ஃபைசல் பின் துர்கி தப்பித்து பனி தமீம் கூட்டத்தினரிடம் அடைக்கலம் புகுந்தார். மீண்டும் 1843 ல் திரும்ப குர்ஷித் பாஷாவிடமிருந்து தப்பித்து கெய்ரோவிற்கு ஓடினார். இதற்கிடையில் திறமையில்லாத காலீத் பின் சௌதை புரட்சியால் வென்று அப்துல்லாஹ் பின் துனய்யான் என்பவர் ஆண்டு வந்தார். இவர் மூன்றாண்டுகள் இடையில் ஆண்டார். ஃபைசல் பின் துர்கி துனய்யனை சுலபமாக வென்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஃபைசல் ஹைல் பகுதியைச் சேர்ந்த அல் ராஷித் குடும்பத்துடன் நட்புறவாக இருந்து அவர்களின் ஆதரவைப் பெற்றார். இரு குடும்பமும் திருமண உறவுகள் மூலம் மேலும் இணைந்தன. ஃபைசலின் வெற்றிக்கு அப்துல்லாஹ் பின் ராஷித் மிகவும் துணை நின்றார். ஹைல் பகுதிக்கு ராஷிதையே ஃபைசல் கவர்னராக்கினார். ஃபைசல் பின் துர்கி 1865 வரை வெற்றிகரமாக ஆட்சி செய்தார். இவர் எகிப்திலிருந்து தப்பிக்க பழங்குடிகளான ஒசாமிக்கள் (ஒசாமா?) தான் காரணமாக இருந்தார்களாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக