வியாழன், 30 ஜூலை, 2015

கதார் வரலாறு 1

கதார் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
கதார் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கற்காலம் என்று சொல்லப்படும் 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்போது பெர்ஷிய வளைகுடாவைச் சேர்ந்த இப்பகுதி நீரில்லா ஆற்றுப் பள்ளத்தாக்காய் இருந்தது. இதனால் இது குளிர்காலங்களில் வேட்டையாடியவர்கள் தங்கிய பகுதியாக இருந்தது. 1961 ல் இங்கு ஆய்வு மேற்கொண்ட டச்சு நாட்டுக்காரர்கள் 122 பழங்கற்கால இடங்களை அறிந்து 30,000 கற்களைக் கண்டுபிடித்தார்கள். இவ்விடங்கள் கடற்கரையை ஒட்டி இருந்தன. மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நான்கு வகையான மக்கள் கூட்டத்தினரின் கோடாரிகள், அம்பு முனைகள் மற்றும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார்கள். 8000 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷிய வளைகுடாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, சௌதி அரேபியாவிலிருந்து நஜ்த் மற்றும் அல் ஹசா பழங்குடியினர் குடிபெயர்ந்து கடற்கரையிலிருந்து கதாரை தலைநகரமாக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்தார்கள். கதாரின் மிகப்பழைய குடியிருப்புகளாக நியோலிதிக் காலத்து ‘வாதி தெபாயன்’ வாசிகள் இருந்தார்கள். இவர்களின் கடல் சார்ந்த மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் மொசொபோடாமியாவின் உபைத் காலத்தைக் குறிக்கின்றன. உறுதியான ஆதாரமாக கி.மு. 6000 தின் இரண்டு அறைகளைக் கொண்ட வீடும், மீனின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 1980 ல் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பானை ஒன்றும் தென் மெசொபொடாமியாவின் உபைத் காலத்தையே குறிக்கிறது. கதாரின் வட கிழக்கில் அல் தஃஅசா குடியிருப்பு உபைத் கால பெரும் குடியிருப்பாகக் கருதப்படுகிறது. இங்கு 65 தீக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இங்கிருந்து மீன் பிடித்து சமைத்ததற்கான ஆதாரங்களைத் தெரிவித்தன. 1977-78 லும் அல் கோர் என்ற இடத்தில் நடந்த ஆராய்ச்சியில் உபைதுகளின் மிகப்பெரிய கல்லறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கண்டுபிடிக்கப்பட்ட கழுத்து மணிகள் தென்மேற்கு அரேபியாவின் நஜ்ரான் பகுதியைச் சேர்ந்ததாகும். பஹ்ரைனைச் சேர்ந்த தில்முன் சமூகத்தின் நெருங்கிய உறவு கதாரின் பாலைவனப் பகுதி மக்களிடையே காணப்படுகிறது. கி.மு. 2100 லிருந்து 1700 வரை கதார் பகுதியில் முத்துக் குளிப்பவர்கள் இருந்தார்கள். அப்போது பேரீச்சம் மரங்களும் பயிரிடப்பட்டன. அஸ்ஸைரிய மன்னன் எசர்ஹட்டான் வெற்றி பெற்ற ‘பாஸு’ தில்முன், கதார் பகுதியில் தான் இருந்தது. கி.பி. 5 ம் நூற்றாண்டில் சரித்திர ஆய்வாளர் ஹிராடோடஸ் வெளியிட்ட புத்தகத்தில் கதாரை கனானிட்ஸ் கடல் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
250 ல் பார்த்தியன்கள் பெர்ஷியன் வளைகுடாவை வென்றபின் கதாரின் பகுதியில் காவல்படையை அமைத்தார்கள். இதை அங்கு கிடைத்த பானைகளின் பகுதிகள் உறுதி செய்கின்றன. துகானின் வடக்குப் பகுதியில் ராஸ் அப்ரூக் பகுதியில் 140 ல் மீன் பிடிப்பதற்கான வீடுகள், வெளிநாட்டினர் தங்கியதற்கான அடையாளங்கள், மீன்களை உலர்த்தியதற்கான தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 224 ல் சஸ்ஸானியர்கள் இந்த பகுதியை வென்றபின், முத்துக்களுக்கும், பவளத்திற்குமான வாணிபத்திற்கு கதார் முதலிடத்தில் இருந்தது. சஸ்ஸானியர்களின் பானைகளும், கண்ணாடிப் பொருள்களும் வடமேற்கு தோஹாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவ மதம் இங்கு பரவலாக இருந்தது. பல கிறிஸ்தவ மடங்களும் இருந்தன. அப்போது கதார் பகுதி “பெத் கத்ராயீ” என்று சைரியாக் மொழியில் அழைக்கப்பட்டது. அப்போது இப்போதிருக்கும் கதார் நாட்டுப்பகுதி மட்டும் இல்லாமல் பஹ்ரைன், தரூத் தீவு, அல் காட், அல் ஹசா ஆகியவை இணைந்து இருந்தன. 628 ல் கிழக்கு அரேபியாவின் ஆட்சியாளராக இருந்த முன்ஸிர் இப்ன் சவா அல் தமீமிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல் அலாஃஅ அல் ஹத்ரமி என்ற தூதுவரை அனுப்பி இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். உடனே முன்ஸிர் தானும் இஸ்லாமை ஏற்று, அங்கிருந்த அரபு பழங்குடியினரையும் ஏற்கச் சொன்னார். மர்வாப் பகுதியில் சிறிய 100 இஸ்லாமிய கால வீடுகள் இதை உறுதி செய்கின்றன. பின்னால் இஸ்லாமியர்களின் பெர்ஷியா மீதான படையெடுப்பால் சஸ்ஸானியர்களின் ஆட்சி இப்பகுதியில் முடிவுற்றது. ஆனாலும் இப்பகுதி முழுமையாக இஸ்லாத்தை தழுவவில்லை என்றும் சில தேவாலயங்கள் ஏழாம் நூற்றாண்டில் இருந்ததென்றும் கருதப்படுகிறது.
உமய்யாத்களின் ஆட்சியின் போது குதிரை மற்றும் ஒட்டகங்கள் இங்கு வளர்க்கப்பட்டன. 8 ம் நூற்றாண்டில் இவற்றுடன் முத்துக்குளிப்பிலும் கதார் சிறந்து விளங்கியது. கதாரின் அல் குவைய்ர் பகுதியில் பிறந்த ஷியா பிரிவு கரீஜிய தளபதி கதாரி இப்ன் அல் ஃபுஜாஃஅ என்பவர் ‘அஸாரிகா’ என்ற அமைப்பின் மூலம் இங்கிருந்து 10 ஆண்டுகள் பல போர்களைப் புரிந்தார். 688-89 ல் நாணயங்களையும் வெளியிட்டிருந்தார். உமய்யாத் கலீஃபா மத மற்றும் அரசியல் மாற்றங்களுக்காக பல நடவடிக்கைகள் எடுத்த போது கதார் மற்றும் பஹரைன் பகுதிகள் முக்கிய இடமாக இருந்து இப்ன் அல் ஃபுஜாஃஅ அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக உமய்யாத்களை எதிர்க்க பயன்பட்டது. 750 ல் உமய்யாத்களின் ஆட்சி இப்பகுதியில் நீக்கப்பட்டு அப்பாஸிட்கள் ஆட்சிக்கு வந்தனர். இரு மசூதிகள் கட்டப்பட்டு, மர்வாப் பகுதி பல வகைகளிலும் முன்னேற்றம் கண்டது. இங்கிருந்த பழைய கோட்டை தீயில் நாசமடைய புதிய கோட்டைக் கட்டப்பட்டது. இவர்களின் காலத்தில் பஸ்ராவிலிருந்து இந்தியா, சீனா சென்ற கப்பல்கள் கதாரில் நின்று சென்றன. 9 ம் நூற்றாண்டுகளில் கதார் பகுதி நல்ல வளம் பெற்று செல்வச் செழிப்பில் இருந்தன. 868 ல் முஹம்மது இப்ன் அலி என்பவர் அப்பாஸிய ஆட்சிக்கு எதிராக பஹ்ரைன், கதார் மக்களைத் திரட்டி புரட்சியில் ஈடுபட்டு தோற்றுப்போய் பஸ்ராவுக்குச் சென்றார். 899 ல் ஷியா பிரிவு கர்மாஷியனின் இஸ்மாயிலி கூட்டம் இங்கிருந்து புனித பயணமாக மக்கா செல்லும் யாத்ரீகர்களைத் தாக்கினார்கள். 906 ல் பதுங்கியிருந்து யாத்ரீகர்களின் வாகனங்களைத் தாக்கி 20,000 பேரைக் கொலை செய்தார்கள். கதாரிகள் கட்டம்போட்ட மேலாடை நெய்வதில் பிரசித்தி பெற்றவர்கள் என்று 13 ம் நூற்றாண்டின் இஸ்லாமிய போதகர் யகுத் அல் ஹமாவி குறிப்பிட்டுள்ளார். 1320 ல் ஓர்முஸ்களின் ஆட்சியின் போது கதாரின் முத்து வாணிபம் நல்ல பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. 1521 ல் போர்ச்சுகீசியர்கள் கதார் பகுதியைக் கைப்பற்றி அரேபிய கடலோரங்களில் பல கோட்டைகளைக் கட்டினார்கள். ஆனால் போர்ச்சுகீசியர்களின் அடையாளங்கள் கதாரில் இல்லை. 1550 ல் அல் ஹசா பகுதி மக்கள் தாங்களாகவே ஓட்டோமானின் கீழ் சென்றார்கள். அவ்வப்போது ஓட்டோமான்களின் இராணுவம் இந்த பகுதியில் நடமாடியது. 1670 ல் பனி காலித் பழங்குடியினர் ஓட்டோமான்களின் நடமாட்டத்தை விரட்டினார்கள். 
அப்போதிருந்து கதார் பனி காலித்களின் அதிகாரத்தில் இருந்தது. இதற்கிடையில் குவைத்திலிருந்து கதாரின் ஸுபராஹ் பகுதிக்கு அல் ஜலாஹ்மா மற்றும் அல் கலீஃபா பழங்குடிக் கூட்டத்தினர்கள் குடிபெயர்ந்தனர். அந்த நேரத்தில் பனி காலீதின் தூரத்து உறவினர் ஒருவர் அதிக பலமில்லாமல் ஸுபாராஹ் பகுதியை நிர்வகித்து வந்தார். அதேபோல் 1777 ல் பெர்ஷியர்கள் பஸ்ரா பகுதியைக் கைப்பற்றி இருந்ததால் அங்கிருந்த பல வணிகர்களும், குடும்பங்களும், குவைத்திலிருந்து மேலும் சில குடும்பங்களும் ஸுபாராஹ்வுக்கு குடிபெயர்ந்தார்கள். இதனால் அப்பகுதி செழிப்புற்று முத்து வாணிபமும் பெருகியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக