ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 9

லோடி ஆட்சிவம்ச வரலாறுகூ.செ. செய்யது முஹமது
டெல்லி சுல்தானேட்டின் ஐந்தாவது ஆட்சியாளர்களாக லோடி ஆட்சிவம்சத்தினர் 1451 ல் வந்தார்கள். இவர்களது ஆட்சியை “புஷ்டூன் ஆட்சிவம்சம்” என்றும் அழைப்பர். இவ்வாட்சியைத் தோற்றுவித்தவர் பஹ்லுல்கான் லோடி ஆவார். இவரது பாட்டனார் மாலிக் பஹ்ரம் ஃபிருஸ்ஷா துக்ளக் ஆட்சியில் முல்டானின் கவர்னராக இருந்தார். இவரது தந்தை பெயர் மாலிக் கலா ஆகும். இளமைவயதில் பஹ்லுல்கான் லோடி குதிரை வியாபாரியாக இருந்தார். ஒரு சிறந்த குதிரையை சைய்யத் ஆட்சிவம்ச ஆட்சியாளர் சுல்தான் முஹம்மது ஷாவுக்கு விற்றார். முஹம்மது ஷா பணத்திற்குப்பதில் ஒரு பகுதியை இவருக்கு வழங்கி அதன் அமீராக ஆக்கினார். இவரது சிறிய தகப்பனார் மாலிக் சுல்தான் இறந்து போக அவர் வகித்த சிர்ஹிந்த் பகுதி கவர்னராக லாகூரையும் இணைத்து நிர்வகித்தார். சுல்தான் முஹம்மது ஷாவை மால்வா சுல்தான் எதிர்த்துவர முஹம்மது ஷா பஹ்லுல்கான் லோடியின் உதவியை நாடினார். 20,000 வீரர்களுடன் சென்று அவர் வெற்றி பெறா உதவினார். இதனால் மகிழ்வுற்ற முஹம்மது ஷா பெரிய பகுதியான பஞ்சாபையும் இவர் ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதித்தார். 1443 மற்றும் 1447 என இரண்டுமுறை டெல்லி சுல்தானேட் மீது படையெடுத்து சென்று வெற்றி பெறாமல் திரும்பினார். பின்னர் சுல்தானாக இருந்த அலாவுத்தீனே 1451 ல் டெல்லியை பஹ்லுல்கான் லோடியிடம் ஒப்படைத்துவிட்டார். சமானாவின் கவர்னராக இருந்த இவரின் சகோதரியின் கணவர் மாலிக் மஹ்மூத் கான் என்னும் குத்புதீன் கான் மூலம் ஹமீத் கானை கைது செய்து சிறையில் அடைத்தார். ஜோன்பூர் ஆட்சிவம்சமாய் இருந்த ஷர்கீயை 1479 ல் கைப்பற்றினார். தனது நிலப்பரப்பை க்வாலியர், ஜோன்பூர் மற்றும் மேற்புர உத்தரபிரதேசம் வரை பரப்பினார். பஹ்லுல்கான் லோடி 1486 ல் தன் மகன் பப்ரக் ஷாவை ஜோன்பூரின் வைஸ்ராயராக நியமித்தார். 1489 ல் இவர் இறந்து போனார். இவரின் அடக்கவிடம் சூஃபி ஞானி நசீருத்தீன் சிராக் இ டெல்லியின் சமாதிக்கருகில் இருக்கிறது. பின் ஆட்சிக்கு நடந்தப் போட்டியில் இவரின் இன்னொரு மகன் சிக்கந்தர் லோடி சுல்தான் ஆனார்.
லோடி ஆட்சிவம்சத்தின் இரண்டாவது சுல்தானாக இருந்த சிக்கந்தர் லோடி சிறந்த பெர்ஷிய கவிஞராவார். இவரது தாயார் சிர்ஹிந்த் பகுதியைச் சேர்ந்த ஒரு பொற்கொல்லரின் மகளான பீபி அம்பா ஆவார். இவர் மூத்த சகோதரர் பர்பக் ஷாவும் ஆட்சிக்கு உரிமை கோரினார். ஆனாலும், தந்தை இவருக்கே முன்னுரிமை அளித்தார். சிக்கந்தர் லோடி ஆட்சி அமைத்த பிறகு, சகோதரர் பர்பக் ஷாவை ஜோன்பூரின் கவர்னராகத் தொடர அனுமதித்தார். தான் ஆட்சிக்கு வர எதிர்ப்பாய் இருந்த மாமன் ஆலம்கானுடன் சுமுகமாய் இருந்தார். தன் ஆட்சியில் வாணிபத்தை செழிக்கச் செய்தார். க்வாலியரிலும், பீகாரிலும் நிலப்பரப்பை விரிவாக்கினார். இன்றைய ஆக்ரா நகரை இவர்தான் உருவாக்கினார். தீவிர இஸ்லாமியரான இவர் இஸ்லாமை குறைத்துக் கூறிய இந்து சாது போதன் என்பவரை கொன்றார். மந்த்ரைய்ல், உத்கிர், நர்வார் ஆகிய பகுதிகளில் பல மஸ்ஜித்களைக் கட்டினார். மதுராவில் நதியில் தலைமுடி சிரைத்து, புனித நீராடுகிறேன் என்று அசுத்தம் செய்தவர்களைத் தடை செய்தார். பெர்ஷிய மொழி பயின்ற இந்துக்களுக்கு அரசுப்பணி வழங்கினார். தன் பெர்ஷிய கவிதைகளை ‘குல்ருகி’ என்னும் சிறப்பு எழுதுகோல் (பேனா) கொண்டு எழுதினார். தற்போது பயன்படுத்தப்படும் கணக்கு (AUDITING) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். மக்களின் நலனுக்காக விவசாயத்துறையையும், நீதித்துறையையும் சிறப்பாக செயல்படுத்தினார். அரசு நிர்வாகமொழியாக பெர்ஷிய மொழியை ஆக்கினார். 32 மடங்கு அளவுள்ள ‘காஸியே சிகந்தரி’ என்னும் நில அளவுமுறையைக் கொண்டு வந்தார். க்வாலியர் மஹாராஜா மான்சிங்கை எதிர்த்து ஐந்து முறை க்வாலியர் கோட்டையைக் கைப்பற்ற முயன்று தோல்வி அடைந்தார். டெல்லிக்குப் பிறகு, ஆக்ரா நகரத்தை சிறப்பாக முன்னேற்றினார். இவர் காலத்தில் ஆக்ரா ‘ஷிராஸ் ஆஃப் இந்தியா’ என்று புகழப்பட்டது. 11 மாத முற்றுகைக்குப் பிறகு நர்வார் கோட்டையைக் கைப்பற்றினார். 1517 ல் சிக்கந்தர் லோடி இறந்தபிறகு, டெல்லியின் லோடி கார்டன் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு, அவர் மகன் இப்ராஹீம் லோடி டெல்லி சுல்தான் ஆட்சிக்கு வந்தார்.
இப்ராஹீம் லோடி ஆட்சியில் அதிகமான புரட்சிகள் நடந்தன. மேவாரின் மன்னன் ராணா சங்கரம் சிங் மேற்கு உத்தரபிரதேசம் வரை கைப்பற்றி ஆக்ராவை பிடிக்க தயாரானான். கிழக்குப் பகுதியில் வயதான சில தலைவர்களையும், அதிகாரிகளையும் மாற்றி இளைஞர்களை அமர்த்தியதால் அங்கு புரட்சி வெடித்தது. அங்கிருந்த ஆப்கான் தலைவர்கள் பாபரை இவருக்கு எதிராக இந்தியாவுக்குள் அழைத்தார்கள். 1526 ல் இப்ராஹீம் லோடியின் பெரும்படையை பானிபட் போரில் பாபர் வெற்றி கொண்டார். இதனால் கடைசி டெல்லி சுல்தானேட்டின் லோடி ஆட்சிவம்சம் இப்ராஹீம் லோடியினுடன் முடிவடைந்தது. இதன் பிறகு வம்ச ஆட்சி மறைந்து மொகலாய பேரரசு தொடங்கியது. இவரது சமாதி சூஃபி ஞானி பூ அலிஷா கலந்தரின் அடக்கவிடத்திற்கு அருகில் உள்ளது. ஆங்கிலேயர்கள் கிரேட் ட்ரங்க் ரோடு அமைக்கும் போது இவரது சமாதியை மாற்றி அமைத்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக